Thursday 30 June 2011

செய்திகள் 30/06


தீர்வு ஆவணம் எங்கே?
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான எந்தவொரு எழுத்து மூல ஆவணத்தையும் நேற்று நடைபெற்ற பேச்சுக்களின் போது சிறிலங்கா அரசதரப்பு சமர்ப்பிக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விசனம் வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா அரச பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான எட்டாவது சுற்றுப் பேச்சுக்கள் நேற்று மாலை 4 மணியளவில் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடைபெற்றன.
நேற்றைய பேச்சுக்களின் போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த சிறிலங்கா அரசின் பரிந்துரைகள் அடங்கிய எழுத்துமூல ஆவணத்தை தருவதாக அரசதரப்பு பிரதிநிதிகள் உறுதியளித்திருந்தனர்.
இந்த ஆவணம் நேற்று தமது கைகளில் கிடைக்கும் என்று கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பெரும் எதிர்பார்ப்புடன பேச்சுக்குச் சென்றிருந்தனர்.
ஆனால் நேற்றைய பேச்சுக்களில் அத்தகைய எழுத்துமூல ஆவணம் எதையும் சிறிலங்கா அரசதரப்பு கையளிக்கவில்லை.
எனினும் எதிர்வரும் சந்திப்புகளின் போது இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான எழுத்துமூல ஆவணம் சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளன.
அதேவேளை, நேற்றைய பேச்சுக்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான அடுத்த கட்டப் பேச்சுக்களை எதிர்வரும் ஜூலை மாதம் 6ம் நாள் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சந்திப்புக்களைப் போன்றே இந்தமுறையும் பழைய விடயங்கள் குறித்தே ஆராயப்பட்டதாக சிறிலங்கா அரசதரப்புக் குழுவுக்குத் தலைமை தாங்கும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும் கூறியுள்ளார்.
இவ்வாறான நிலையில் மீண்டும் எதிர்வரும் 6ம் திகதி இருதரப்பும் சந்தித்துக் கலந்துரையாட இணக்கம் காணப்பட்டுள்ளது.
*************
ஆலோசனை யாருக்கு?
நாட்டின் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்ட போது, அரசாங்கம் நாடாளுமன்றின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளவில்லை என ஜே.வி.பி சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் திடீரென தேசிய இனப்பிரச்சினை குறித்த விவகாரத்தில் அரசாங்கம் பாராளுமன்றின் உதவியை நாடுவது புரியாத புதிராக அமைந்துள்ளது என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
17 ஆம் திருத்தச் சட்ட மூலம் ரத்து செய்யப்பட்டமை, 18ம் திருத்தச் சட்ட மூலம் அமுல்படுத்தப்பட்டமை போன்ற சந்தர்ப்பங்களில் அரசாங்கம் நாடாளுமன்றின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தல் மற்றும் அரசுத் தலைவரின் தவணைக் காலத்தை நீடித்தல் போன்ற யோசனைத் திட்டங்களின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினை தொடர்பில் மட்டும் தனியான தீர்மானம் எடுக்க முடியாது நாடாளுமன்றின் கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும் என அரசுத் தலைவர் அறிவித்துள்ளமை ஆச்சரியமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சிக்கு நிகராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் தெளிவற்ற கொள்கைகளை பின்பற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத் தெரிவுக் குழு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுவரையில் வெளிப்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார
*************
யார் பிரதிநிதிகள்?
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகபிரதிநிதகள் இல்லையென்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று அரசாங்கமும் சிங்கள மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று தங்களைப் பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய சிங்கள நாளேடான லக்பிம பத்திரிகைக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே இந்த விடயங்களை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்ற கட்சி.
அதே போன்று அரசாங்கம் சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ளது.
அதன் காரணமாக அவ்விரு தரப்புகளும் கலந்துரையாடி அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் ஒரு தீர்மானத்துக்கு வந்தால் அதனை ஏற்றுக் கொள்ள தாங்கள் தயாராக இருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.
ஆனால் இந்த அரசாங்கம் அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் நேர்மையாக நடந்து கொள்ளும் என்று கொஞ்சம் கூட தான் நம்பத் தயாராக இல்லை எனவும் கூட்டிக்காட்டினார்.
இருந்தாலும் தமிழ் மக்கள் இந்நாட்டில் தலைநிமிர்ந்து வாழத் தக்கதான முறையில் அவர்களுக்கான அதிகாரப் பரவலாக்கல் இருக்க வேண்டும் என்பதே தங்கள் கோரிக்கையாகும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
வடமாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்றால் அங்கு செல்வாக்கு அதிகமாகவுள்ள தமிழ்த் தேசியக்கூட்டமைப்பே அதன் அதிகாரத்தைக் கைப்பற்றும் என்ற பயத்தில் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்திக் கொண்டிருப்பது அரசாங்கத்துக்கு அழகல்ல என்றும் மனோ கணேசன் தனது பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளார்.
*************
பிளவு வேண்டாம் - கோரும் தயாசிறி!
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவராக செயற்குழு ரணில் விக்கிரம சிங்கவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் தொடர்ந்தும் தாம் முரண்பட்டுக்கொண்டிருக்க முடியாதெனத் தெரிவித்திருக்கும் குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கட்சிக்குள் இரண்டுபட்டுக் கொண்டிராமல் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.
கட்சித் தலைமைப்பதவிக்கு ரணில் விக்கிரம சிங்கவை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையிலேயே அவர் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவரைக் கட்சியில் சகலரும் தலைவராக ஏற்று அவரது வழி நடத்தலில் கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல ஒன்றுபட்டுப் பாடுபட வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனைக் குறிப்பிட்டார்.
நாடு இன்று பாரிய நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது. அரசு அடுத்தடுத்து பிரச்சினைகளைத் தோற்றுவித்து வருகின்றது.
இவ்வாறானதொரு நிலையில் கட்சிக்குள் முரண்பட்டுக் கொண்டிருக்க முடியாது.
நாட்டு மக்களிடம் சென்று நாட்டின் இன்றைய நிலைமையை எடுத்துக்கூறி அரசுக்கு எதிராக மக்களை அணி திரட்ட வேண்டும்.
அரசுக்கெதிரான சக்தியைக் கட்டியெழுப்பக் கூடிய பலம் ஐக்கிய தேசியக் கட்சியிடம் மாத்திரமே உள்ளது.
அவ்வாறான நிலைமையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடு நீடிக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
*************
இந்திய - ஸ்ரீலங்கா இராணுவ ஒத்துழைப்பு!
இந்திய- சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மட்டத்திலான மூன்று நாள் கலந்துரையாடல் புதுடெல்லியில் நேற்று ஆரம்பமாகியுள்ளது.
இருநாட்டு இராணுவங்களுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்கான திட்டத்தின் ஒரு கட்டமாகவே இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.
சிறிலங்கா இராணுவத் தளபதியின் செயலர் மேஜர் ஜெனரல் எச்.சி.பி குணதிலக தலைமையிலான ஐந்து உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட குழு இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்க புதுடெல்லி சென்றுள்ளது.
இந்தியத்தரப்புக் குழுவுக்கு இநதிய இராணுவத்தின் அனைத்துலக ஒத்துழைப்புக்கான மேலதிக பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஐ.பி.சிங் தலைமை தாங்குகிறார்.
நேற்று ஆரம்பமான இந்தக் கலந்துரையாடல் நாளை வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து இடம்பெறும்.
இந்தக் கலந்துரையாடலின் போது போர் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது, கிளர்ச்சி முறியடிப்புத் தொடர்பாக கோட்பாடுகள் குறித்தே அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் மிகநெருக்கமான உறவுகள் இருந்து வரும் நிலையில் இந்தக் கலந்துரையாடல் முக்கியமானதொரு மைல் கல்லாக அமையும் என்று இந்திய இராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற செயற்பாடுகளின் விளைவாக இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் சாத்தியங்கள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
*************
எதற்காக இத்தனை செலவு?
பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டிகளை ஹம்பாந்தோட்டையில் நடத்துவதற்கான வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்காக 8ஆயிரத்து 585 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டு பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியை இலங்கையில் நடாத்துவதற்கு பல்வேறு வழிகளில் முயற்சிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரச்சார நடவடிக்கைகளுக்காக 264 மில்லியன் ரூபா பிரிட்டன் நிறுவனத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் விளையாட்டுப் போட்டியை நடாத்துவது தொடர்பிலான கைநூல் ஒன்றினை அச்சிட்டு வெளியிடுவதற்காக 46.2 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.
பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியை நடாத்துவதற்காக 440 பில்லியன் ரூபா செலவாகும் என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார
*************
சீனாவின் நண்பன்
சீனாவின் யுவான் நாணயத்தை இலங்கை ஊடாக சர்வதேச நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த இலங்கை மத்திய வங்கி அனுமதி அளித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு வசதிகளை மேம்படுத்தும் முகமாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மத்திய வங்கி மேலும் 13 நாடுகளின் வெளிநாட்டு நாணயங்களை சர்வதேச வங்கி நடவடிக்கைகளுக்காக இலங்கையில் பயன்படுத்தவும் அனுமதி அளித்துள்ளது.
இவற்றில் அவுஸ்திரேலிய டொலர், கனேடியன் டொலர், டொன்மார்க் க்ரோனர், யூரோ, ஹொங்கொங் டொலர், ஜப்பானிய யென், நியூசிலாந்து டொலர், நோர்வே க்ரோனர், ஸ்டெர்லிங் பவுண், சிங்கப்பூர் டொலர், சுவிஸ் பிராங்க் மற்றும் அமெரிக்க டொலர் என்பன அடங்கும்.
*************

Wednesday 29 June 2011

செய்திகள் 29/06


அமெரிக்காவின் வலியுறுத்தல்
யுத்தக் குற்றம் குறித்து தனது நிலைப்பாட்டினை இலங்கை விரைவில் வெளியிட வேண்டும் என அமெரிக்கா நிர்பந்தித்துள்ளது.
அவ்வாறு நிலைப்பாட்டினை வெளிப்படுத்த தவறும் பட்சத்தில் சர்வதேச நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை அதிகாரிகள் பொறுப்பை உறுதி செய்வதில் முதன்மை பொறுப்பை கொண்டிருந்தமையினால், அமெரிக்க சர்வதேச விசாரணைக்காக அழைப்பினை சிறிதுகாலம் நிறுத்தி வைத்திருந்தது.
இலங்கை அரசின் சமரசத்திற்கான கடமைகளை விரைவில் நீருபிக்க தாம் இலங்கை அரசை தொடர்ந்தும் வலியுறுத்துவோம் என அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை அரசு அக் கடமைகளை முன்னெடுக்கும் என தாம் நம்புவதாகவும் ஆனால் முன்னெடுக்க தவறும் பட்சத்தில் அழுத்தங்கள் அதிகரித்து சர்வதேச சமூகம் வேறு ஏதேனும் ஒருமுறையை ஆராய நேரிடும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனல் 4 வீடியோ காட்சி வெளியாகியதிலிருந்து இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
*************

தீர்வு திட்டம் அவசியம் - மங்கள
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
தீர்வு தொடர்பாக கவனம் செலுத்தாமல் அதற்கு மாறாக தெரிவுக் குழுக்களை நியமித்து காலத்தை விரயப்படுத்துவதில் அர்த்தமில்லை என அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தையுடைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் தேசியப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமொன்றை நாட்டு மக்களுக்கு முன்வைக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பை வெளியிடவில்லை எனவும், 13ம் திருத்தச் சட்ட மூலத்தைக் காரணம் காட்டி இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை காலம் தாழ்த்துவதனை எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்ட மூலம் அல்லது அதற்கு அப்பாலான ஓர் யோசனைத் திட்டத்திற்கும் ஆதரவளிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூடிமறைக்காது தீர்வுத் திட்டம் வெளிப்படுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பிரிஸ் இந்தியாவிற்கு சென்று ஒரு கருத்தை வெளியிடுவதாகவும், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் முரண்பட்ட கருத்துக்களை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வுத் திட்டம் ஒன்றை வழங்குவதற்கு அரசாங்கம் முனைப்பு காட்டவில்லை என்பதே தமது கருத்தாகும் என குறிப்பிட்டுள்ள அவர், இவ்வாறு தொடர்ச்சியாக நடந்து கொண்டால் சர்வதேச ரீதியிலான ஈழக் கோரிக்கை வலுப்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
தாருஸ்மன் அறிக்கை மற்றும் செனல்4 ஊடக காணொளி போன்ற சர்ச்சைகளை மூடிமறைக்காது அவற்றுக்கு பதிலளிக்க வேண்டும் எனவும், பக்கச்சார்பற்ற முறையில் குறித்த காணொளி தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை இவ்வாறான குற்றச்சாட்டுக்களினால் நாட்டின் பெயருக்கு களங்கம் ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
சனல்4 ஊடகத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என நிரூபித்தால் மில்லியன் கணக்கான பவுண்ட்ஸ்களை நட்டஈடாக பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெறுமனே ஆர்ப்பாட்டங்களின் மூலம் அறிக்கைகளின் மூலம் எதிர்ப்பை வெளியிடுவதனால் இவ்வாறான குற்றச்சாட்டுக்களிலிருந்து மீள முடியாது என தெரிவித்துள்ள அவர், ஒழுக்கத்துடன் கடமையாற்றிய காரணத்தினால் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைக்கும் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஒன்று இரண்டு உத்தியோகத்தர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்பதனை மறுப்பதற்கில்லை எனவும் அவ்வாறு எவரேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு தண்டனை வழங்குவதில் பிழையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தகவல்களை அறிந்து கொள்ளும் சட்டத்தை அரசாங்கம் முடக்கியதன் மூலம் அரசாங்கத்தின் ஏதேச்சாதிகாரத் தன்மை நாட்டுக்கு வெளிப்பட்டுள்ளதாக பிரபல சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
*************
அரசிடமே தீர்வு - லக்ஷ்மன் கிரியெல்ல
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை இலங்கை அரசாங்கமே வழங்க வேண்டுமே தவிர நாடாளுமன்றம் வழங்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வு வழங்குவதற்கு நாடாளுமன்றத் தெரிவுக் குழு அவசியமே இல்லை என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
13 ஆவது திருத்தத்தை முன்னெடுப்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக் குழு அவசியமில்லை.
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படுமென மஹிந்த சிந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத் தலைவர் தேர்தலில் இதற்காக மக்கள் ஆணையும் கிடைத்தது.
அத்தோடு அரசுத் தலைவரினால் அமைக்கப்பட்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி குழுவும் அரசியல் தீர்வு தொடர்பான பரிந்துரைகளை அரசுத் தலைவரிடம் கையளித்துள்ளது.
இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தாமும் ஏற்றுக் கொண்டதாகவும், அதனடிப்படையில் அரசியல் தீர்வை வழங்க முடியும். அத்தோடு அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பலமும் நாடாளுமன்றில் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
எனவே, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க நாடாளுமன்றத் தெரிவுக் குழு அவசியமில்லை.
இலங்கை அரசாங்கத்தினாலேயே அரசியல் தீர்வை வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
சர்வதேசத்தையும் இந்தியாவையும் ஏமாற்றுவதற்கும் காலத்தை இழுத்தடிக்கவுமே பாராளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரசியல் தீர்வை வழங்காமல் இருப்பதற்கே இவ்வாறான நடவடிக்கைகள முன்னெடுக்கப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.
*************
வளச் சுரண்டலில் இந்தியா - ஜே.வி.பி
வடக்கு பிரச்சினைகளை காரணம் காட்டி இந்தியா வளச் சுரண்டலில் ஈடுபட்டுள்ளதாக ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
காணிகள் மற்றும் கட்டிட நிர்மாண ஒப்பந்களை இந்தியா பெற்றுக் கொண்டுள்ளதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை காலமும் இந்தியா வடக்கு மக்களுக்கு எதனையும் பெற்றுக் கொடுத்ததாக சரித்திரம் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த அரசாங்கம் இந்தியாவின் முன்னிலையில் மண்டியிட்டு கட்டளைகளை நிறைவேற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
வெளிநாட்டு அழுத்தங்களின் மத்தியில் அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாடு என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சகல துறைகளிலும் ராஜபக்ஷ வாதம் வியாபித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாகவும் அரசாங்கம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக அவற்றை விற்பனை செய்து தனது இருப்பை உறுதி செய்து கொள்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த அரசாங்கம் காலணித்துவத்திற்கு எதிரான தேசப்பற்றுடைய அரசாங்கம் என சிலர் நினைப்பதாகவும் உண்மையில் இந்த அரசாங்கமும் காலணித்துவ ஆட்சியாளர்களின் கைக்கூலிகளே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளையே இன்று நாட்டின் பொருளாதாரக் கொள்கையாக அமைந்துள்ளது என குற்றம் சுமத்தியுள்ள அவர், போர் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் நாடு இன்னமும் அவசரகால சட்டத்தின் கீழ் ஆட்சி செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
*************
அதிகாரப்பகிர்வு கூடாது - ஜாதிக ஹெல உறுமய
தேசிய பிரச்சினைக்கான தீர்வில் அதிகாரப் பகிர்வு இடம்பெறக் கூடாது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
வடக்கு கிழக்கிற்கு ஏனைய மாகாண சபைகளுக்குள்ள நிர்வாக முறையையும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களையுமே வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலதிகமாக காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படுமேயானால் அதற்கு எதிராக கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என்று ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது.
யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள அமைதியான சூழலை சீர்குலைக்கும் வகையில் அநாவசியமான தீர்வுத் திட்டங்களை தேசிய அரசியலுக்குள் உட்புகுத்த அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது.
இன்று தமிழர்கள் எவ்விதமான பிரச்சினையும் இன்றி இலங்கையில் வாழ்கின்றார்கள் என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிஷாந்த வர்ணசிங்க புலிகளின் கோரிக்கைகளையே முன் வைக்கும் கூட்டமைப்பு போன்றவர்களிடம் அதிகாரப் பகிர்வு குறித்து பேசுவது ஆபத்தான விடயமாகும்.
எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதிகாரப் பகிர்வு ஒன்றுக்கு ஜாதிக ஹெல உறுமய இடமளிக்காது. நாட்டை மீண்டும் பின்னகர்த்தும் நடவடிக்கையில் ஈடுபடும் சக்திகளுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
*************
கைதிகளை விடுதலை செய்யக் கோரி போராட்டம் - நாம் இலங்கையர்
சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டமொன்றை நாளை கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் நடத்த நாம் இலங்கையர் அமைப்பு தீர் மானித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் உதுல் பிரேமரட்ண சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் அரசு வெளியிடும் மாறுபட்ட தகவல்கள், அவர்கள் விடுதலை செய்ய கால தாமதித்தல் மற்றும் அவசர காலச் சட்டத்தை நீக்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது எனத் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதேவேளை, சிறைச்சாலைகளில் சுமார் 17 ஆயிரம் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் உதுல் பிரேமரட்ண தெரிவித்தார்.
*************
சந்தி சிரிக்கும் புத்தர் - காப்பாற்று கோரும் பீடாதிபதி
புத்தர் சிலையை வைத்து வழிபாட்டிடமாக சந்திகளை மாற்றும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அஸ்கிரிய பீடம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
அஸ்கிரிய பீடாதிபதி வண.உடுகம சிறி புத்தரகித்த தேரர் அரசின் இச் செயல்பாடுகள் தொடர்பாக தமது எதிர்ப்பை பிரதம மந்திரி டி.எம்.ஜெயரட்ணவிடம் தெரிவித்துள்ளார்.
இந்நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது என அவர் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வாறு சந்திகளில் வழிபாட்டு அறைகள அமைத்து புத்தர் சிலைகளை வைப்பது புத்த மதத்தின் கோட்பாடுகளை பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புத்தர் சிலைகள் அதற்குப் பொருத்தமான இடங்களில் மட்டுமே வைக்கப்பட வேண்டும் என்றும் அஸ்கிரிய பீடாதிபதி வலியுறுத்திக் கூறியுள்ளார்.
*************






Tuesday 28 June 2011

செய்திகள் 28/06


தமிழ் இளையோரின் போராட்டம் தொடர்கின்றது!
இன அழிப்புச்செய்த சிறீலங்கா நாட்டின் கிறிக்கெட்டைப் புறக்கணிக்குமாறு கோரி பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு அங்கமாக இன்று மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணிவரை ஓவல் மைதானத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற இருப்பதாக பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு அறிவித்துள்ளது.
இப் போராட்டத்தில் இனமானத் தமிழர்கள் அனைவரையும் ஒன்று திரண்டு கலந்து கொண்டு சர்வதேச உலகிற்கு எமது எதிர்ப்பைக் காட்டி இனப்படுகொலையை வெளிப்படுத்த வருமாறு தமிழ் இளையோர் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
ஓவல் மைதானத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற இருக்கின்றது.
தமிழின அழிப்பை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறீலங்கா அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சனத் ஜயசூரிய இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக கலந்துகொள்ள இருக்கின்றார்.
இன அழிப்பு மேற்கொண்ட அரசாங்கத்தை நீதியின் முன் நிறுத்தும் ஒரு அங்கமாக சிறீலங்கா கிறிக்கெட் அணியையும், அதன் வீரர்களையும் பிரித்தானிய அரசாங்கமும், ஏனைய மேற்குலக நாடுகளும் புறக்கணித்து, தடை விதிக்க வேண்டும் என தமிழ் இளையோர்கள் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
சிறீலங்கா கிறிக்கெட் அணியைப் புறக்கணிக்க வேண்டும் எனக்கோரி கடந்த 25ஆம் நாள் லண்டனிற்கு வெளியேயுள்ள பிறிஸ்ரல் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்த பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினர், அதற்கு முன்னதாக கடந்த மே மாதம் கார்டிஃப், லோர்ட்ஸ் போன்ற பல இடங்களில் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
****************
விலக்கப்படுமா? விலைபேசப்படுமா?
பேச்சுவார்த்தையிலிருந்து தமிழ் கூட்டமைப்பு எப்போது விலகுமென அரசு ஏங்கித் தவிக்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசு தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன்தான் பேசித் தீர்க்க வேண்டுமென அமெரிக்கா பெயர் குறிப்பிட்டே அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
கூட்டமைப்புக்கு மக்கள் தந்த ஏகோபித்த ஆணையின் பிரதிபலனே இந்த முக்கியத்துவமாகும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.
காரைதீவு பிரதேச சபைத் தேர்தலுக்கான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் நேற்று முன்தினம் காரைதீவு விபுலானந்தா மணி மண்டப விபுலானந்தா கலாலயகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ஐ.நா கவுன்சில் இலங்கை நிலைமை பற்றிய கருத்தரங்கொன்றை அண்மையில் நடத்தியபோது அதில் பல நாடுகள் பங்குபற்றி இறுதியில் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
இந்தக்கருத்தரங்கில் பங்கு கொண்ட அமெரிக்கா தனது அறிக்கையில் இலங்கை தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசு தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேசித் தீர்க்க வேண்டுமென கட்சியின் பெயரை குறிப்பிட்டே கருத்தை வெளியிட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எப்போது முறித்துக் கொள்ளும் என அரசு ஏங்கித் தவிக்கின்றது. ஆனால் இதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியல் சாணக்கியம் மிக்கவர்களதும், சர்வதேசத்திலிருந்தும் நல்ல ஆலோனைகள் இந்த விடயத்தில் தமக்கு வழங்கப்பட்டதுடன் அவர்களது வழிநடத்தலும் தமக்கு உண்டு என்றும் தெரிவித்தார்.
பெரிய விலைகளை கொடுத்துத்துள்ள எமது தமிழினத்தின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கவே தாம் பாடுபடுவதாகவும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.
****************
நியாயம் செ(க)hல்லும் பிரதமர்!
அரசாங்கத்திற்கும் தமிழ் கூட்டமைப்புகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் அரசியல் தரப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டுமென்ற அவர்களினது கோரிக்கை நியாயமானதாகும் என பிரதமர் தி.மு. ஜயரத்ன தெரிவித்தார்.
நாட்டில் ஐந்து வகையிலான இனத்தவர்கள் வாழ்கின்றனர்.
இந்த வகையில் பேச்சுவார்த்தைகள் மூலம் வடக்கில் பெற்றுக் கொடுக்கப்படும் தீர்வுகள் ஏனைய இனங்களையும் பாதிக்காத வகையில் அமைய வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
நேற்று கண்டிக்கு விஜயம் செய்த பிரதமர் மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களின் ஆசியைப் பெற்ற பின்னர் ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
****************
போராட தயாராகுங்கள்!
எதிர்காலத்தில் தேவைப்பட்ட நேரத்தில் ஜனநாயக ரீதியான தர்ம முறைப்படியான போராட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு நமது தமிழ் இளைஞர்களும் மக்களும் தயாராக வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கின்றார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டம் கிழக்கு மாகாணத்தில் காரைதீவு விபுலானந்தா கலாலயத்தில் நடைப்பெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்தார்.
காரைதீவு பிரதேச சபைக்கான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் செ.இராசையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளைக் கண்டும் குறிப்பாக சனல் 4 போன்ற காட்சிகளை கண்டும் உலகம் இன்று கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டார்.
துன்பத்தை அதிகம் தாங்கும் இனம் தான் இறுதியில் வெற்றி பெற்று வந்த உலக வரலாறுகள் உண்டு என்பதை எளிதில் மறந்து விடமுடியாது.
முள்ளிவாய்க்கால் போர் முடிவுக்குப் பின்னர் எமது மக்கள் ஹிரோசிமாவில் அன்று வீசப்பட்ட அணு குண்டின் பாதிப்பைவிடவும் மிக மோசமான பாதிப்பை தமிழ் மக்கள் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர்.
வட கிழக்கில் எமது பலத்தை திட்டமிட்டு பலவீனமாக்கும் வகையில் இராணுவ அடக்குறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ் மக்களின் வளங்களைக்கொள்ளையடிப்பதற்காக திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் இங்கு இடம்பெறுகின்றன.
வளம் கொழிக்கும் எமது விவசாய நிலங்கள் கூட இன்று இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு பெரும்பான்மை இனத்தினருக்கு வழங்கும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
****************
அரசிடமே தீர்வு - ஐதேக
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை அரசாங்கமே வழங்க வேண்டுமே தவிர பாராளுமன்றம் வழங்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இது மஹிந்த சிந்தனையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கண்டி மாவட்ட ஐ.தே.க. வின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
தீர்வு வழங்குவதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழு அவசியமே இல்லையென்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
இது தொடர்பாக லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கருத்து தெரிவிக்கையில், 13 ஆவது திருத்தத்தை முன்னெடுப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழு அவசியமில்லை.
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படுமென மஹிந்த சிந்தனை எதிர்கால இலக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத் தலைவருக்கான தேர்தலில் இதற்காக மக்கள் ஆணையும் கிடைத்தது.
அத்தோடு அமைச்சர் திஸ்ஸ விதாரண ஆணைக்குழு, சர்வகட்சி நிபுணர்கள்குழு என்பன அரசுத் தலைவரால் அமைக்கப்பட்டன.
அந்த ஆணைக்குழுக்களும் அரசியல்தீர்வு தொடர்பான பரிந்துரைகளை அரசுத் தலைவரிடம் கையளித்தன.
இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தாமும் ஏற்றுக் கொண்டதாகவும், அதனடிப்படையில் அரசியல் தீர்வை வழங்க முடியும் என்றும் கூறிய அவர், அத்தோடு அரசாங்கத்திற்கு அதற்கான பெரும்பான்மை பலமும் பாராளுமன்றத்தில் உள்ளது எனச் சுட்டிக்காட்டினார்.
எனவே தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க பாராளுமன்றத் தெரிவுக் குழு அவசியமில்லை.
அரசாங்கத்தினாலேயே அரசியல் தீர்வை வழங்க முடியும்.
சர்வதேசத்தையும் இந்தியாவையும் ஏமாற்றுவதற்கும் காலத்தை இழுத்தடிக்கவுமே பாரளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
****************
தீர்வு திட்டம் ஒப்படைக்கப்படுமாம்!
அதிகாரப் பகிர்வு குறித்த 12 அம்ச யோசனைத் திட்டமொன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக வட மாகாணத்தில் அமுல்படுத்தக் கூடிய வகையிலான 12 அம்ச யோசனைத் திட்டமொன்றை அரசாங்கம் ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தின் போது இந்த யோசனைத் திட்டம் ஒப்படைக்கப்பட உள்ளது.
கடந்த 23ம் திகதி அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பினருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது கூட்டமைப்பினர் 51 அம்ச யோசனைத் திட்டமொன்றை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் 12 அம்ச யோசனைத் திட்டமொன்றை முன்வைக்க உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு இந்த யோசனைத் திட்டத்தின் மூலம் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
****************
குற்றவாளியே குற்றத்தை விசாரிக்க உடன்படும் ஏமாற்று உலகம்!
பிரிட்டனைத் தளமாகக் கொண்ட சனல்4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய சிறிலங்காவின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நேர்மையானவையாக இருந்தால் அவை குறித்துக் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை செய்யும் என்று அரசு பொதுநலவாய நாடுகளின் செயலகத்துக்கு அறிவித்துள்ளது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சால் அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கையில், சனல்4 தொலைக்காட்சியின் குற்றச்சாட்டுக்களில் உண்மை இருப்பின் சட்டபூர்வமான வழி வகைகளுக்கு ஊடாகத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருப்பதாகப் பொதுநலவாய நாடுகள் செயலகத்தின் பேச்சாளர் நேற்றுத் தெரிவித்தார்.
இலங்கை அரசின் இந்த நடவடிக்கையைப் பொது நலவாய நாடுகள் அமைப்பு வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, சிறிலங்காவின் கொலைக்களம் குறித்து பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலகம் கவலை வெளியிட்டிருந்தது.
இது தொடர்பான செய்திகள் வெளியாகி இருந்த நிலையிலேயே, குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற உறுதிமொழி பொதுநல வாய நாடுகள் அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
****************
பிளவுபடுத்தும்  முயற்சிகள்?
இலங்கையைப் பிளவுபடுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள சில சர்வதேச சக்திகள் அதற்காக இந்தியா மீதும் அழுத்தங்களைக் கொடுக்கின்றன என ஸ்ரீலங்காப் பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்திருக்கின்றார்.
சில நாடுகள் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு இலங்கையை அவமானப்படுத்த முயன்றுகொண்டிருக்கின்றன.
இந்த நாடுகள் இலங்கையில் தலையிடுமாறு இந்தியாவுக்கும் அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பாக சர்வதேச சமூகம் பேசிக்கொண்டிருக்கின்றது.
ஆனால், கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்ற போரினால் ஏற்பட்ட அழிவுகளையிட்டு அவர்கள் பேசுவதற்குத் தயாராகவில்லை எனவும் கண்டியில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது பிரதமர் தெரிவித்தார்.
இவ்வாறான சம்பவங்கள் வெளிநாடுகளிலும் இடம்பெற்றிருக்கின்றன.
ஆனால், இவற்றையிட்டு யாரும் பேசிக்கொள்வதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில் நாட்டைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசுத் தலைவர் மேற்கொண்டுவருகின்றார் எனவும் அவர் தெரிவித்தார்.
****************
நட்டஈடு கோரும் இனவாதம்
100 மில்லியன் டொலர்கள் நஷ்டஈடு கோரி சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக மூன்று நாடுகளில் இயங்கும் புலம்பெயர் சிங்களவர் அமைப்புகள் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளன.
கண்கண்ட சாட்சிகள் யாருமின்றி, சனல்4 தொலைக்காட்சியானது போர்க்குற்றங்கள் தொடர்பான போலிக் காணொளிகளை வெளியிட்டு இலங்கையர்களுக்கு அவமானத்தை உண்டுபண்ணியதாக குற்றம் சாட்டியே பிரஸ்தாப வழக்குத் தொடரப்படவுள்ளது.
அவுஸ்திரேலியா, கனடா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இயங்கும் புலம்பெயர் சிங்களவர் அமைப்புகள் மூன்று ஒன்றிணைந்தே பிரிட்டன் நீதிமன்றத்தில் பிரஸ்தாப வழக்கைத் தாக்கல் செய்யவுள்ளன.
அதன் பிரதிவாதிகளாக சனல்4 தொலைக்காட்சி சேவையின் ஜோன் ஸ்னோ மற்றும் காணொளியின் தயாரிப்பாளர் கெல்லம் மக்ரே ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சனல்4 தொலைக்காட்சி சேவையானது போலியான காணொளியொன்றை ஒளிபரப்பியமை, அவர்களுடைய நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு கண்கண்ட சாட்சிகள் யாரும் இல்லாமை, மற்றும் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போர்க்குற்றங்களை மறைக்கத் துணை புரிந்தமை ஆகியனவே சனல்4 வுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளாகும்.
வழக்கில் வாதிகள் தரப்பில் ஐந்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர்.
இதற்கிடையே சனல்4 காணொளி தொடர்பில் தன்னுடன் பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா விடுத்த சவாலை சனல்4 தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் கெல்லம் மக்ரே அல்லது அம்னெஸ்டி இன்டர்நெசனல் அமைப்பு ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
****************

Monday 27 June 2011

செய்திகள் 27/06


ஆதாரங்களை ஆராயும் பொது நலவாயம் நடவடிக்கை எடுக்குமா?
இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பிலான சனல் 4 ஊடக காணொளி குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக லண்டனை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பொதுநலவாய நாடுகள் செயலகம் அறிவித்துள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடான இலங்கை இந்த குற்றச்சாட்டுக்களை கடுமையாக நிராகரித்து வரும் நிலையில் பொதுநலவாய செயலகம் இவ்வாறான அறிவிப்பை விடுத்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காணொளி தொடர்பில் பல்வேறு கருத்துகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் பொதுநலவாய செயலகத்தின் பேச்சாளர் தெவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் நிலைப்பாடு குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக் கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சனல் 4 காணொளிக்கு ஆதரவான நிலைப்பாட்டையே பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ் சர்மா வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் ஆண்டில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளதுடன் 2018 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியை அம்பாந்தோட்டையில் நடத்துவதற்கு அரசாங்கம் தீவிர முயற்சி மேற் கொண்டு வரும் பின்னணியில் பொதுநலவாய நாடுகள் செயலகம் இந்தக் கருத்துகளை வெளியிட்டுள்ளமை இலங்கைக்கு பாரிய சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
****************
முறுகல் முற்றுமா?
இந்தியாவுடன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஆடும் ஆட்டத்தின் நேரடி விளைவாகவே இந்திய துடுப்பாட்ட அணி வீரர்களை சிறிலங்காவுக்கு அனுப்ப இந்திய துடுப்பாட்டச்சபை மறுத்திருக்கக் கூடும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று சந்தேகம் எழுப்பியுள்ளது.
சிறிலங்கா துடுப்பாட்டச்சபை நடத்தவுள்ள, சிறிலங்கா பிறீமியர் லீக் போட்டிகளில் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் பங்கேற்பதற்கு இந்திய துடுப்பாட்டச்சபை தடைவிதித்துள்ளது.
இந்தியாவின் இந்த முடிவு சிறிலங்காவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து இந்திய துடுப்பாட்டச் சபையுடன் சிறிலங்கா துடுப்பாட்டச்சபை அதிகாரிகள் பேச்சுக்களை நடத்திய போதும் இணக்கப்பாடு ஏற்படவில்லை.
இந்திய வீரர்களை அனுப்ப முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்தநிலையிலேயே இது அரசியல் ரீதியான முடிவாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அயல்நாடான இந்தியாவின் புவிசார் அரசியல் பிணைப்பையும், விருப்பங்களையும் புறக்கணித்து சீனாவுடன் சிறிலங்கா நெருங்கிச் செல்வது இந்தியாவை எரிச்சலடைய வைத்துள்ளது.
அத்துடன் 13வது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் அழுத்தத்தையும், சிறிலங்கா அதிபர் நிராகரித்துள்ளார்.
இந்தநிலையிலேயே இந்திய துடுப்பாட்ட வீரர்களை சிறிலங்காவுக்கு அனுப்ப முடியாது என்று இந்தியா அறிவித்துள்ளது.
எனவே இதன் பின்னணியில் அரசியல் ரீதியான முடிவுகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சிறிலங்காவுக்கு முதலாவது எச்சரிக்கையை வழங்கும் விதத்திலேயே இந்தியா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் ஆங்கில ஊடகம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
அதேவேளை, சிறிலங்காவின் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, இந்தியாவின் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்திய வீரர்கள் சிறிலங்கா பிறீமியர் லீக் போட்டிகளுக்கு தேவையில்லை.
அவர்கள் இல்லாமலேயே போட்டிகள் நடத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
****************
தீர்மானம் நிறைவேறுமா?
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் மீண்டும் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பேரவையின் அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான யோசனைத் திட்டமொன்று முன்வைக்கப்பட உள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது.
பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
தமிழ் புலம்பெயர் மக்களின் விருப்பத்திற்கு அமைய இந்த நாடுகளை அமெரிக்கா வழிநடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தச் சவாலை முறியடிப்பதற்காக அரசாங்கம் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் பல நாடுகளின் ஆதரவை திரட்டும் பாரிய நடவடிக்கை ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சும், வெளிவிவகார அமைச்சும் இரு வேறு அறிக்கைகளை தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அறிக்கைகள் அரசுத் தலைவருக்கும் நாடாளுமன்றிற்கும் முதலில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
****************
அமெரிக்க விஜயம்!
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய அமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொண்டு நேற்று புறப்பட்டு சென்றார் என தெரிவிக்கப்படுகிறது.
அவர் அங்கு 5 நாட்கள் வரையில் தங்கி இருப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த காலப்பகுதியில் அமெரிக்காவின் செனட்சபை உறுப்பினர்களையும், ராஜதந்திரிகளையும் அவர் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பின் போது சிறிலங்காவின் இன்றைய அரசியல் நிலரவம் தொடர்பில் அவர் செனட் சபை உறுப்பிர்களுடன் கலந்துரையாடுவார் எனவும் தெரிய வருகிறது.
சர்வதேச ஜனநாயகவாதிகள் அமைப்பின் பிரதி தலைவராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க அந்த அமைப்பின் கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளார்.
இந்த நிலையில், அவர் நாட்டில் இல்லாத காலப்பகுதியில், கருஜெயசூரிய கட்சியின் பதில் தலைவராக செயற்படவுள்ளார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
****************
மாற்றம் கோரும் மாறாத பேரினவாதம்!
தமிழ் அரசியல் தலைமைத்துவங்கள் கொள்கை ரீதியாக மாற்றமடைந்து தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வரவேண்டும் என ஜாதிக கெல உறுமய தெரிவித்துள்ளது.
1949 ஆம் ஆண்டுகளில் இருந்து கடைப்பிடிக்கப்பட்ட தவறான கொள்கைகளினால் தமிழ் மக்கள் பேரழிவுகளுக்கு உட்பட்டு பின்னடைவுகளை சந்தித்துள்ளார்கள் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெவித்தார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் அமைப்பிற்கு அப்பால் சென்று தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முற்படக்கூடாது எனவும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டாலும் தமிழீழ கோரிக்கைக்கு இலங்கையில் இடம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
****************
அரசிடம் திட்டமில்லை - சொல்வது ஜே.வி.பி
தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கான எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை என்று ஜே.வி.பி ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளது.
அதிகாரப் பகிர்வு குறித்து எதிர்வரும் 29ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எழுத்து மூலம் பதில் அளிப்பதாக அரசு கூறியது வெறும் பம்மாத்து என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின்சில்வா தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர் வடக்கு கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வாக 13ஆம் திருத்தச் சட்டத்துக்கு அப்பால் தீர்வு முன்வைக்கப்படும் என்று அமைச்சர் கெஹலியரம்புக்வெல கூறியதைச் சுட்டிக்காட்டினார்.
அவர் கூறிய சில தினங்களில் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் இல்லாத 13ஆம் திருத்தச்சட்டம் தீர்வாக முன்வைக்கப்படும் என்று அரசுத் தலைவர் கூறியதையும் சுட்டிக்காட்டி இந்த இருவரின் கூற்றும் ஒன்றுக்கொன்று முரண் படுகிறது. இது சர்வதேசத்தையும், உள்நாட்டு மக்களையும் ஏமாற்றும் செயல் எனத் தெரிவித்தார்.
தீர்வு யோசனை முன்வைக்கப்படும் என்று அரசுத் தலைவருக்கான தேர்தலின்போது அரசு கூறியது.
ஆனால், அது முன்வைக்கப்படவில்லை. பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் காலத்திலும் இதே வாக்குறுதி வழங்கப்பட்டது.
எனினும், அத்தேர்தலின் பின்னரும் அது முன்வைக்கப்படவில்லை.
இப்போது அரசியல் தீர்வுபற்றி அரசு கூறி வருகின்றது.
இதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்படும் என்று அரசுத் தலைவர் கூறினார்.
தெரிவுக்குழு தேவையில்லை. அரசின் தீர்வை நாட்டு மக்களுக்குக் காண்பித்தால் போதும். மக்கள் அவர்களின் கருத்தைக் கூறுவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுவரை நடைபெற்ற பேச்சுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிடம் முன்வைத்திருக்கும் கோரிக்கைக்கு 29ஆம் திகதி பதிலளிக்கப்படும் என்று அரசு கூறியது.
ஆனால், அரசிடம் எந்தவிதமான பதிலும், தீர்வும் கிடையாது என்றும் ரில்வின் சல்வா தெரிவித்துள்ளார்.
****************
போர் முடியவில்லை?
பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் முடிவு பெற்றுவிட்டது என எண்ணிவிடக் கூடாது என்று அரசுத் தலைவரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அரசுத் தலைவருக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும் எதிராக புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்கள் சதிகளை மேற்கொண்டுவருகிறது என லலித் வீரதுங்க தெரிவித்தார்.
ஒரு யுத்தம் முடிவு பெற்றாலும் சர்வதேசத்திலிருந்து வரும் மற்றுமொரு யுத்தத்தினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் மொனராகலையில் நடைபெற்ற படையினருக்கான வீடுகள் கையளிப்பு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
****************
அஞ்சும் இராணுவம்!
இனிவரும் காலங்களில் தான் இராணுவத்தினர் பாரிய சவால்களை எதிர்கொள்வதற்கான சூழல்கள் ஏற்படக் கூடும் என கூட்டுப்படைகளின் பிரதம அலுவலர் ரொஷான் குணதிலக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் தியத்தலாவை இராணுவ முகாமில் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறிய இராணுவத்தினருக்கான வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கூட்டுப் படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க அவ்வாறு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இன்றைய சூழலை விட எதிர்காலத்தில் இராணுவத்தினர் பல பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடலாம்.
அதன்போது தேவையற்ற நெருக்கடிகளை உருவாக்கிக் கொள்ளாத வகையில் இராணுவத்தினரின் செயற்பாடுகள் அமைந்திருக்க வேண்டும் என்றும் கூட்டுப்படைகளின் பிரதம அலுவலர் ரொஷான் குணதிலக்க மேலும் வலியுறுத்தியுள்ளார்.
****************