Tuesday 13 December 2011

எமது செய்திகள்

காலை 07.00 மணிக்கு செய்திச்சுருக்கம்

காலை 08.00 மணிக்கு பிரதான செய்திகள்

காலை 09.00 மணிக்கு செய்திச்சுருக்கம்
காலை 10.00 மணிக்கு செய்திச்சுருக்கம்
காலை 11.00 மணிக்கு செய்திச்சுருக்கம்

மதியம் 12.00 மணிக்கு பிரதான செய்திகள்

மதியம் 01.00  மணிக்கு செய்திச்சுருக்கம்
மதியம் 02.00 மணிக்கு செய்திச்சுருக்கம்

மதியம் 03.00 மணிக்கு பிரதான செய்திகள்

மாலை 04.00 மணிக்கு செய்திச்சுருக்கம்
மாலை 05.00 மணிக்கு செய்திச்சுருக்கம்
மாலை 06.00 மணிக்கு செய்திச்சுருக்கம்
மாலை 07.00 மணிக்கு செய்திச்சுருக்கம்

இரவு 08.00 மணிக்கு பிரதான செய்திகள்

எமது செய்திகளை www.ibctamil.fm, DAB, Hotbird மற்றும் உங்கள் கையடக்க தொலைபேசியிலும் கேட்கலாம்...

Thursday 17 November 2011

செய்திகள் 16/11


மீண்டும் பேச்சு?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான மற்றுமொரு பேச்சுவார்த்தை இன்று மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் அமெரிக்கா, கனடா மற்றும் லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றிருந்ததால் தடைபட்டிருந்த பேச்சுவார்த்தை இன்று மீண்டும் ஆரம்பமாகிறது.
இதன்படி இன்றைய பேச்சுவார்த்தையில் இதற்கு முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது கூட்டமைப்பு அரசிடம் முன்வைத்த கோரிக்கைகளுக்கான அரசின் பதில் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
அரச தரப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஜிவ விஜேசிங்க, சசின் வாஸ் குணவர்த்தன, அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா உள்ளிட்டோர் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது
************

தமிழருக்கு எதிரான அரசு
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சார்பாக ஒருபோதும் செயற்படுவதில்லை.
எப்போதுமே தமிழர்களின் எதிர்மறையான கண்ணோட்டத்தோடு நோக்குகிறது.
நாடாளுமன்றத்தில் கூட தமிழ் உறுப்பினர்கள் வேண்டப்படாத பிரஜைகள் போலவே நடத்தப்படுகின்றனர் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட தேருநர் இடாப்பு திருத்தம் தொடர்பாக கிறீன்கிறாஸ் விடுதியில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
30 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற யுத்தத்தால் தேர்தல் என்பதே மக்கள் மனதில் இருந்து மறைந்து போயிருந்தது.
யுத்த காலத்தில் தமிழர் பிரதேசங்களில் தேர்தல் நடத்தப்பட்ட போது அவை புறக்கணிக்கப்பட்டன அல்லது குண்டுத் தாக்குதல்கள் மூலம் குழப்பப்பட்டன.
இதனால் இன்னமும் மக்கள் தேர்தல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியே வாழ்கின்றனர்.
அத்துடன் இன்னமும் இயல்பு வாழ்வுக்கு திரும்ப முடியாமல், தம் சொந்த இடங்களுக்கு போக முடியாமல் அடிப்படை வசதிகள் அற்று வாழ்கின்ற மக்கள் வாக்களிப்பது பற்றிச் சிந்திப்பது என்பது இயலாத விடயம்தான்.
இவ்வாறு நீண்டகாலமாக வாக்களிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட்ட மக்கள் இனிவரும் காலங்களில் தமது ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்காகவேனும் வாக்களிக்கும் பண்பினை வளர்க்க வேண்டும்.
வாக்குரிமையின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு பிரஜையும் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.
வாக்காளர் பட்டியலில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது தவறான செயலாகும்.
அவர்கள் இலங்கை பிரஜைகள்தான் என்றும் தெரிவித்தார்.
************

அச்சுறுத்தும் அடியாட்களும் அஞ்சும் நீதியும்
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறினார் என்றும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்றும் கூறி அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளனர் என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், தனது நடவடிக்கை தொடர்பாக ஆராய விசேட தெரிவுக்குழு அமைக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இல்லை என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளமையானது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறுவதாகவுள்ளது என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், தெரிவுக்குழு அமைப்பதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்திடம் இல்லை எனக் கூறுவது நாடாளுமன்றை அவமதிக்கும் செயல் என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, நாடாளுமன்றிலுள்ள அரச தரப்பு உறுப்பினர்கள் 75 பேர் சரத் என். சில்வாவுக்கு எதிராக விசேட தெரிவுக்குழு ஒன்றை அமைக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.           
************

பிளவுபட்ட இலங்கை ஒத்துக் கொண்ட சிங்களம்
இலங்கை தொடர்ந்தும் இன மற்றும் மத ரீதியில் பிளவுபட்டே கிடக்கிறது.
போருக்குப் பின்னரான இந்தக் காலம் மிக முக்கியமானது.
இந்தக் காலத்தில், போரால் ஏற்பட்ட காயங்களை ஆற்ற உதவுவதற்கான வாய்ப்புகளை அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏற்படுத்த வேண்டும் என்று கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அமைதி முயற்சிகள் தோல்வியடைந்ததற்கான காரணங்களை விளக்கி நோர்வே வெளியிட்ட, அமைதிக்கான அடமானங்கள் என்ற அறிக்கை வெளியீட்டுக்காக ஒஸ்லோ மிலிந்த சென்றிருந்தார்.
அங்கு இந்திய ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், முக்கியமான புள்ளி ஒன்றில் தாம் நின்றுகொண்டிருப்பதாகவும், தங்கள் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் இன்னும் இருக்கிறது என்று தெரிவித்தார்.
சுதந்திரத்துக்குப் பின்னரான தமது அரசியல் நடவடிக்கைகள் இனங்களை ஒன்றுபடுத்துவதற்குப் பதில் பிளவுபடுத்தி விட்டது.
ஒரு குழு அல்லது மற்றொன்று மேலாதிக்கம் செலுத்துவதில் கவனம் செலுத்தின.
குறுகிய வட்டத்துக்குள் சுற்றிக்கொண்டிருக்கக்கூடாது தூர நோக்குள்ளவர்களாக இருக்கவேண்டும்.
சாதாரண சிங்கள மக்கள் இனவாதிகள் அல்லர் என்றே வெளியே இருப்பவர்கள் சிந்திக்கிறார்கள்.
தமிழர்களோ சிங்களவர்களோ தேசியம் பற்றிப் பேசுவதில் தவறில்லை.
ஆனால் அதனால் அவர்கள் அழிவுக்கு உள்ளாகக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
************

அரசின் தொடரும் அடாவடி?
பொது நிறுவனங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் ஆய்வுகளுக்கு ஏற்ப நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை பதவி நீக்கம் செய்வதற்கு அரசு முடிவு செய்திருப்பதாக தெரிய வருகிறது.
இத் தெரிவுக் குழுவினால் நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களாக இனங்காணப்பட்ட 115 அரச நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னரே உத்தேச அமைச்சரவை மாற்றங்களை செய்வதற்கு அரசு முடிவு செய்திருப்பதாக தெரிய வருகிறது.
இந்த நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கிவருவதற்கு மேலாக சிலவற்றில் ஊழல்கள், அரசின் நிதிக் கொள்கைகளை உதாசீனம் செய்தல் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்று வருவது தெரிய வந்துள்ளதாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் கால்வாய் அமைப்பு சபை, இலங்கை போக்கு வரத்துச் சபை என்பன கூட இலாபத்தில் இயங்கவில்லை.
ஆனால் இவை பொதுமக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருகின்றன என்று அண்மையில் அமைச்சர் பசில் ராஜபக்ஸ நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டது நினைவு கூரத்தக்கது.               
************

பதவியேற்க பதவி விலகும் மனோ?
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் கட்சி அலுவல்களை மேற்கொள்வதன் பொருட்டு மனோ கணேசன் இராஜினாமா செய்வதாக தெரியவந்துள்ளது.
தனது இராஜினாமா குறித்து மனோ கணேசன் விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என அறியக்கிடைக்கிறது.
இதன்படி மனோ கணேசனின் வெற்றிடத்திற்கு கடந்த கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு அடுத்தபடியான வாக்குகளைப் பெற்ற ஒருவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி மனோ கணேசனுக்கு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐனநாயக மக்கள் முன்னணிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியில் தற்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று வெற்றிடமாகுமாயின் அதற்கு மனோ கணேசன் நியமிக்கப்பட வேண்டும் என்பது ஐனநாயக மக்கள் முன்னணியின் கோரிக்கையாகும்.
இக்கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி லண்டன் வந்துள்ள ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதும் இது குறித்து ஜனநாயக மக்கள் முன்னணி கலந்துரையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது
************

புலத்தின் பலத்தை தெரிந்து கொண்ட பீரிஸ்!
புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து செயற்பட சிறிலங்கா அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், அதேவேளை விடுதலைப் புலிகளின் ஈழம் திட்டத்துக்காக செயற்படுவோர் மீது அனைத்துலக சமூகம் வெளிப்படையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
காலி கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற 19 நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
புலம்பெயர் தமிழர்களை ஒதுக்க வேண்டிய தேவை சிறிலங்கா அரசாங்கத்துக்கு இல்லை.
போருக்குப் பிந்திய சூழலில் அவர்களுடன் இணைந்து செயற்படத் தயாராவே உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகள் உள்ளிட்ட 32 நாடுகள் விடுதலைப் புலிகளை தடை செய்துள்ள போதும், அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் கொடிகளை ஏந்திச் செல்வதைத் தடுப்பதில் அனைத்துலக சமூகம் தோல்வி கண்டுள்ளது.
விடுதலைப் புலிகள் 2009 மே மாதம் தமது மரபுவழி இராணுவ பலத்தை இழந்த போதிலும் வெளிநாடுகளில் தொடர்ந்து நிதி சேகரிக்கிறார்கள்.
இருந்தபோதும், விடுதலைப் புலிகளுக்கு தயவு காண்பிப்பதாக எந்தவொரு நாட்டையும் குறிப்பிட்டுக் குற்றம்சாட்ட விரும்பவில்லை.
மிக அண்மையில் பேர்த்தில் கொமன்வெல்த் மாநாட்டின்போது கூட விடுதலைப் புலிகளின் கொடியை ஏந்தியபடி போராட்டம் நடத்தினார்கள்.
பிரித்தானியாவில் உள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் கூட தொடர்ந்து புலிகளின் கொடிகளை பகிரங்கமாக ஏந்திச் செல்கிறார்கள் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் விசனம் வெளியிட்டுள்ளார்
************

Tuesday 15 November 2011

செய்திகள் 15/11


அமெரிக்காவின் கவலை
உலக நாடுகளிலிருந்து இலங்கை தனிமைப்படுத்தக்கூடிய அபாயம் காணப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்னீஸ் தெரிவித்திருந்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல், மனித உரிமைகளை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு என அவர் தெரிவித்துள்ளார்.
மியன்மாரை மேற்குலக நாடுகள் ஒதுக்கி தனிமைப்படுத்தியுள்ளதனைப் போன்று இலங்கை தனிமைப்படுத்தப்படுவதனை அமெரிக்கா விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2009ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 30ஆம் திகதி இந்த குறிப்பு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்ப வைக்கப்பட்டுள்ளது.
மிக நீண்ட காலம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பிரிவினைவாத யுத்தம் நடைபெற்றதாகவும், யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய தொலைநோக்குத் திட்டம் இலங்கை அரசிடம் காணப்படுகின்றதா என்பது கேள்விக்குரியே என அவர் குறிப்பிட்டுள்ளதாகத் விக்கிலீக்ஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.          
******************

பிரதமரின் கண்டனம்
சிறிலங்காவில் நோர்வேயின் சமாதான முயற்சிகள் தோல்வி கண்டதற்கு, விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசும் தமது கொள்கையில் கடைப்பிடித்த இறுக்கமான நிலைப்பாடே காரணம் என்று நோர்வேயின் மீளாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ள கருத்தை நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.ருத்ரகுமாரன் நிராகரித்துள்ளார்.
நோர்வேயின் நிலையுடன் சிறிலங்கா அரசுடன் நடத்தப்பட பேச்சுகளின் போது விடுதலைப் புலிகளின் சட்டஆலோசகராக பங்கேற்ற அவர், பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலே இந்தக் கருத்தை நிராகரித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இந்தப் பேச்சுக்களில் உளச்சுத்தியுடனேயே ஈடுபட்டனர்.
பேச்சுக்கள் நடக்கும்போதே, விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதம் என்ற கண்ணாடியின் ஊடாகப் பார்த்து, அவர்கள் கொண்டிருந்த சமபல நிலையைக் குலைத்த, அனைத்துலக சமூகம் தான் இந்தப் பேச்சுக்கள் தோல்வியடைந்ததற்குக் காரணம்.
விடுதலைப் புலிகள் இந்தப் பேச்சுக்களின் போது, பல விட்டுக் கொடுப்புகளைச் செய்தனர்.
போர்நிறுத்த மீறல்கள் விவகாரத்திலும், சிறிலங்கா அரசே பாரிய மீறல்களில் ஈடுபட்டது.
போர்நிறுத்த மீறல்கள் விடயத்தில், சிறிலங்கா போர்நிறுத்தக் கண்காணிப்பு குழு கூட, மீறல்கள் குறித்த எண்ணிக்கையை மேலோட்டமாகப் பார்க்கக் கூடாது, அதன் கீழுள்ள தார்ப்பரியத்தைப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது என்று அவர் கூறியுள்ளார்.
இனப்பிரச்சினை விவகாரத்தில் புலம்பெயர் தமிழர்கள் முன்னணி நிலையை எடுக்காமல், தலைமைத்துவத்தை,சிறிலங்காவில் வசிக்கும் தமிழர்கள் எடுக்க வேண்டும் என்று நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டதைப் பற்றிக் கருத்து தெரிவித்துள்ள வி.ருத்திரகுமாரன், புலம்பெயர் தமிழர்கள், உள்நாட்டில் களத்தில் வாழும் தமிழர்கள் என்ற பேதம் உண்மையானதல்ல.
சிறிலங்காவில் வாழும் தமிழர்களுக்கு தங்களது கருத்துக்களை சுதந்திரமாகக் கூறவும் செயல்படவும் தேவையான அரசியல் வெளி, இருக்கவில்லை.
சிறிலங்கா ஒரு ஜனநாயக ரீதியாகத் தோல்வியடைந்த நாடு என்று இந்த அறிக்கையே கூறுகிறது.
எனவே புலம்பெயர் தமிழர்கள், சிறிலங்கா பிரச்சினையில் குரல் கொடுப்பதில் தவறில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
******************

அரசு அதிருப்தி
விடுதலைப் புலிகளுடனான அமைதி முயற்சிகள் தோல்வியடைந்தமை தொடர்பாக நோர்வேயால் வெளியிடப்பட்டிருக்கும் கருத்துக்கு இலங்கை அரசு இராஜதந்திர ரீதியிலான அதிருப்தியை வெளியிடத் தீர்மானித்துள்ளது.
இலங்கை அமைதி முயற்சிகள் தோல்வியடைந்தமைக்கு அரசும், புலிகள் இயக்கமும் பொறுப்பேற்கவேண்டுமெனக் கடந்த வாரம் நோர்வேயின் அரச சார்பற்ற அமைப்பு ஒன்று தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.
அத்துடன், இது தொடர்பாக பல விமர்சனங்களையும் அது முன்வைத்திருந்தது.
இந்நிலையில், இந்த விமர்சனங்கள் இறைமையுள்ள அரசு ஒன்றின் நற்பெயருக்கு சர்வதேச ரீதியில் களங்கத்தை ஏற்படுத்துமென அரசு கருதுவதாக மூத்த அமைச்சர் ஒருவர் நேற்றுத் தெரிவித்தார்.
இதனடிப்படையில் இந்த விமர்சனங்கள் குறித்து நோர்வே அரசுக்கும் இந்த ஆய்வை நடத்திய நோறாட் அமைப்புக்கும் இராஜதந்திர ரீதியிலான அதிருப்தியை வெளியிட அரசு தீர்மானித்துள்ளது.
இன்னும் ஓரிரு தினங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நோர்வே வெளியிட்ட அறிக்கையில் சமாதான முயற்சியில் இலங்கையின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் அம்பலமானதால், பெரும் சங்டமான நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
******************

பல்கலைக்கழக மாணவர்களின் துணிவு
யாழ்.பல்கலைக்கழகத்தில் முன்னாள் இந்திய வெளிவிவகாரச் செயலர் சியாம் சரண் நிகழ்த்திய உரையை மாணவர்கள் புறக்கணித்துள்ளனர்.
கைலாசபதி கலையரங்கில் நேற்று பிற்பகல் இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கையும், இந்திய - சிறிலங்கா நட்புறவும் என்ற தலைப்பில் முன்னாள் இந்திய வெளிவிவகாரச் செயலாளரும், நாடுகளின் அபிவிருத்திக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் மையத்தின் தலைவருமான சியாம் சரண் உரையாற்றியிருந்தார்.
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ஜ.ஏ.சந்திரசிறி, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரி மகாலிங்கம், மற்றும் அரச, இராணுவ அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் வழமைக்கு மாறாக பெருமளவு இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
அதேவேளை பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.
குறைந்தளவிலான பல்கலைக்கழக விரிவுரையாளர்களே இதில் பங்குபற்றியிருந்தனர்.
இதனால் பெரும்பகுதி ஆசனங்கள் வெறுமையாகவே காட்சியளித்தன.
******************

எதேச்சதிகார அரசு
பாராளுமன்ற பெரும்பான்மை மூலம் நாட்டின் அனைத்து விடயங்களையும் மாற்றி அமைக்கக்கூடிய நிலை இன்று தோன்றியுள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைகளின் எண்ணிக்கையைக் கொண்டு அனைத்தையும் தீர்மானிப்பது கவலைக்குரிய விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
106 அரச நிறுவனங்களுக்கு 6ஆயிரத்து, 300 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனங்களை யாரிடம் பொறுப்புக் கொடுக்கப் போகிறார்கள் எனவும் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை உள்ளிட்ட நிறுவனங்கள் இமாலய நட்டத்தில் சென்றுக் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குருநாகலில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இக்கருத்துக்களை வெளியிட்டார்
******************

இராணுவ மயமாகும் கல்விக் கூடங்கள்
பல்கலைக்கழகங்களில் காவல்துறை காவலரண்களை அமைக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் காவல்துறை காவலரண் என்ற உயர் கல்வி அமைச்சரின் கூற்றுக்கு பதிலளிக்கும் வகையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஜ்சீவ பண்டார விடுத்துள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைகழகத்தில் உள் மோதல்களை தவிர்க்கும் பொருட்டு பல்கலைக்கழக பகுதியில் காவல்துறை காவலரண்களை அமைக்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் காவல்துறை என்ற பெயரில் குறித்த வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதற்கான முதல் கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் உயர் கல்வி அமைச்சர் கூறியுள்ளளார்.
இதற்கு முன்னர் 1984ம் ஆண்டு பல்கலைக்கழகங்களில் காவல்துறை காவலரண் ஏற்படுத்தப்பட்டு அதன்பின்னர் பல்கலைக்கழகத்தில் குற்றச் செயல்களை அரங்கேற்ற ஐதேக அரசு அப்போது செயற்பட்டது.
அதன்போது மாணவர்களின் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை போடப்பட்டது.
இரண்டு மாணவர்களுக்கு மேல் ஒன்றுகூட முடியாது, போஸ்ட்ர் கட்அவுட் காட்சிப்படுத்த முடியாது, அறிவுறுத்தல் மற்றும் கவிதைகூட எழுதி ஒட்ட முடியாத அளவிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிலர் கொலையும் செய்யப்பட்டனர்.
கடந்த காலங்களில் பல்கலைக்கழக விடயங்களில் அரசாங்கத்தின் தலையீட்டை உற்றுநோக்கும் போது 1984ம் ஆண்டு போன்ற திட்டத்தை செயற்படுத்த முனைவதாக தெரிகிறது.
மாணவர் செயற்பாடுகளை அழிக்கும் திட்டம் இதுவென்பதில் சந்தேகம் இல்லை.
எவ்வாறான கஸ்ட நிலை வந்தாலும் பல்கலைக்கழகத்திற்குள் அரசாங்கத்தின் காவல்துறை காவலரண்களை அமைக்க அனுமதி அளிக்க மாட்டோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
******************

சர்வதேச மயப்படும் போராட்டம்
கடந்த காலங்களில் தமிழர்களின் விடுதலைப்போராட்டம் வெறும் இந்தியாவிற்கும், கொழும்பிற்கும் இடையிலேயே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால் இப்போது புலம்பெயர்ந்து வாழும் இளையோர் அமைப்பினர் ஊடாகவும் மாணவர்கள் ஊடாகவும் போராட்டம் சர்வதேசமயமாக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கனடாவில் வாழுகின்ற தமிழ் மாணவர் ஒருவர் 17 வயதிலே வைத்தியர் பட்டம் பெற்றுள்ளதோடு தானாக புற்றுநோயை குணப்படுத்தக்கூடிய ஒரு கருவியை உருவாக்கியுள்ளார்.
இதைப்பார்த்த கனடா நாட்டின் புற்றுநோய் நிபுணர் ஒருவர் அதிர்ச்சியடைந்ததுடன் தான் கூட இந்த வயதுக்கு இவ்வாறான சாதனையை புரியவில்லை என்று கூறியதுடன் இந்த கருவியை வைத்து எதிர்காலத்தில் புற்றுநோயை குணப்படுத்தலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சாதனைகள் தமிழர்களை பெருமையடைய வைத்துள்ளது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு அம்பிலாந்துறை கலைமகள் வித்தியாலயத்தில் மாணவர் கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தினர் நடாத்திவரும் இரவு நேரவகுப்பு ஆரம்பிக்கப்பட்டதன் 105வது நாள், பரிசளிப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்தார்.
******************

Monday 14 November 2011

செய்திகள் 14/11


அச்சுறுத்தும் ஆணைக்குழு
பாதுகாப்பு அச்சுறுத்தல், இரகசியத்தன்மை ஆகிய அடிப்படைக் காரணங்களைக் கருத்திற்கொண்டே கணிசமானளவு மக்கள் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கூறவில்லை.
அந்த ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த விதவைப் பெண்ணுக்கு சி.ஐ.டி. அழைப்பாணை விடுத்துள்ளதன் மூலம் இந்த விடயம் உலகுக்கு அம்பலமாகியுள்ளது.
இதனை ஒருபோதும் ஏற்கமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அரசுத் தலைவரிடம் கையளிக்கப்படவுள்ள நிலையில், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதானது பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது என்றும் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த கல்முனையைச் சேர்ந்த 45 வயதான விதவைப் பெண்ணான இரத்தினம் பூங்கோதை என்பவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் தான் வழங்கிய சாட்சியம் தொடர்பாக விசாரிப்பதற்கு சி.ஐ.டியினர் தன்னை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர் என்ற விடயத்தை குறித்த பெண் நேற்று உறுதிப்படுத்தினார்.
ஒட்டுமொத்த உலகின் பார்வையும் இலங்கையின் பக்கம் திரும்பியுள்ள நிலையிலும், அறிக்கை வெளியாக இன்னும் சில நாள்களே எஞ்சியுள்ள நிலையிலும் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம் வழங்கியவர் தொடர்பான இரகசியம் கசிந்துள்ளதானது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களிடம் சாட்சியங்களைத் திரட்டும்போது இரகசியத்தன்மை 100 சதவீதம் பேணப்படும் என உறுதியளிக்கப்பட்டே நல்லிணக்க ஆணைக்குழு சாட்சியங்களைத் திரட்டியது.
ஆனால், இப்போது இரகசியம் எப்படி அம்பலமானது என்று அரசியல் ஆய்வாளர்கள் கேள்விக்கணைகளைத் தொடுக்கின்றனர்.
நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த பொதுமக்கள் தொடர்பான பெயர், அவர் தொடர்பான விவரம் கசிந்துள்ளதானது அறிக்கை மீதுள்ள நம்பகத்தன்மையை திசை திருப்பியுள்ளது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த இரத்தினம் பூங்கோதை என்பவருக்கு சி.ஐ.டியினர் விசாரணை அழைப்பாணை விடுத்துள்ளதானது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அதேவேளை, பல்வேறு கோணங்களில் சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் கருத்துக்கேட்டபோது நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கினால் இரகசியத்தன்மை பேணப்படாது என்றும் அதேபோன்று பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என மக்கள் கருதினர் எனத் தெரிவித்தார்.
இந்தக் காரணிகளைக் கருத்திற்கொண்டே கணிசமானோர் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் தங்களுக்கு நேர்ந்த அவலங்களைக் கூறுவதற்கு முன்வரவில்லை.
மக்கள் அன்று நினைத்த எதிர்வு கூறிய உண்மைகள், நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பெண்ணிடம் சி.ஐ.டியினர் விசாரணை மேற்கொள்ளவுள்ள விடயம் அம்பலப்படுத்தியுள்ளது. இதனை ஒருபோதும் ஏற்கமுடியாது எனவும் தெரிவித்தார்.
**************

சுவீகரித்ததை மீள ஒப்படைக்கத் தயார்?
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டால் சுவீகரிக்கப்பட்ட சொத்துக்களை மீளவும் உரிமையாளர்களிடம் வழங்கும் என பதில் எதிர்க்கட்சித் தலைவர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
அவசரமான சட்ட மூலமொன்றின் மூலம் அரசாங்கம் நட்டமடையும் சொத்துக்களை சுவீகரித்துக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சொத்துக்களை திடீரென சுவீகரித்து கொண்ட நடவடிக்கை ஓர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகவே கருதப்பட வேண்டும்.
அரசாங்கத்தின் இந்த எதேச்சாதிகார நடவடிக்கை குறித்து தற்போது வெளிநாட்டு விஜயம் செய்துள்ள கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டுத் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தி வருவதாக ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதன் பின்னர் இது தொடர்பில் கட்சி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
**************

அச்சுறுத்தப்படும் மாணவர்கள்
பல்கலைக்கழக வளாகங்களினுள் காவல்துறை காவலரண்கள் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பல்கலைக்கழக வளாகங்களினுள் கலகங்கள் ஏற்படுவதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறு காவலரணங்கள் அமைக்கப்பட உள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி .திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக காவல் நிலையங்கள் என்ற பெயரில் இந்த காவலரண்கள் இயங்கும்.
ஆண் பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
காவலரண்களை அமைப்பது குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக வளவில் மாணவர்களுக்கு இடையில் ஏற்படக் கூடிய மோதல் நிலைமைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு பொறுப்பை தனியார் பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கியமைக்கு மாணவர் அமைப்புக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் காவல்துறையினர் பல்கலைக்கழகங்களினுள் கடமையாற்றுவது தொடர்பில் மாணவர்கள் அமைப்புக்களும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் அதிருப்தி வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
**************

புரட்சிக்கு அழைப்பு
இலங்கையில் சோசலிஸ புரட்சிக்கு ஜே வி பியின் கிளர்ச்சியாளர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.
அத்துடன் கட்சியின் ஸ்தாபக தலைவர்களை போன்று உயிர்தியாகம் செய்யவும் கட்சி உறுப்பினர்கள் தயாராகவேண்டும் என்று கிளர்ச்சியாளர்கள் கோரியுள்ளனர்.
கார்த்திகை வீரர்கள் தினத்தை ஜே வி பி நேற்று இரண்டு பிரிவாக அனுஸ்டித்தது.
சோமவன்ச தலைமையிலான குழு தனியாகவும் கிளர்ச்சிக்குழு தனியாகவும் இந்த நிகழ்வை அனுஸ்டித்தன.
கிளர்ச்சிக்குழுவின் நிகழ்வில் உரையாற்றிய சோசலிஸ மாணவர் அமைப்பின் அமைப்பாளர் சமிந்திர கொஸ்வத்த, முதலாளித்துவ நடைமுறையை தோற்கடிக்க இன்று உண்மை புரட்சி அவசியம் என்று குறிப்பிட்டார்.
அதற்கான போராட்டத்திற்கு ஆயத்தம் மேற்கொள்ளப்படவேண்டும்.
இதன்போது 1971 மற்றும் 1989 ஆண்டுகளில் இடம்பெற்றது போன்ற உயிர்களை தியாகம் செய்வதற்கு தயாராகவேண்டும் என்றும் கொஸ்வத்த தெரிவித்தார்.
சோமவன்ச தலைமையிலான ஜே வி பியின் நடவடிக்கைகளையும் அவர் கண்டித்தார்.
அத்துடன் கடந்த காலங்களில் ஜே வி பி தலைவர்கள், படைத்தரப்பினருடன் மோதிய சம்பவங்ளையும் அவர் நினைவுகூர்ந்தார்.
**************

விபசார விடுதி முற்றுகை
யாழ். நகரப்பகுதியில் நடத்திச் செல்லப்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்றை முற்றுகையிட்ட காவல்துறையினர் அங்கிருந்த எட்டு ஆண்களையும், ஜந்து பெண்களையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.
யாழ். நகரப்பகுதியில் உள்ள சுமங்கலி என்ற தனியர் விடுதியில் நீண்ட நாட்களாக விபச்சார நடவடிக்கை நடைபெற்று வந்துள்ளது.
யாழ்.காவல்துறையினரின் வேட்டையில் இந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டு உரிமையாளர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடுதி தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் ஒருவரினால் நடத்தப்பட்டு வந்துள்ளதாக யாழ்.காவல் நிலையத் தலைமை காவல் அதிகாரி சமன் சிகேர தெரிவித்துள்ளார்.
விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று திங்கட்கிழமை யாழ்.நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
**************

சேவைப் புறக்கணிப்பு
தபால் மா அதிபர் எம்.கே.பி.திஸாநாயக்கவை உடனடியாக பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி தபால் சேவை தொழிற்சங்கங்களின் ஒன்றியம் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.
கொழும்பு மத்திய தபாலகத்தின் ஊழியர்கள் இன்று அதிகாலை முதல் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதாக ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் கே.எம்.சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் திஸாநாயக்க தபால் மா அதிபராகக் கடமை புரிவாராயின் அவர் தபால் சேவையாளர்கள் மீது அடாவடித்தனமாக நடந்து கொள்வார் என பண்டார சுட்டிக்காட்டினார்.
எனவே தபால் மா அதிபரை உடனடியாக பணிநீக்கம் செய்து தகுதியான ஒருவரை நியமிக்க வலியுறுத்தி மத்திய தபாலகத்திற்கு முன்னால் இன்று உண்ணாவிரதப் போராட்டத்ததை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
**************

தீர்ப்பை நினைத்து கவலை கொள்ளும் முன்னாள் நீதிபதி!
ஆழிப்பேரலை அனர்த்த காலத்தில் நடைபெற்ற ஹெல்பிங் அம்பாந்தோட்டை நிதி மோசடி வழக்கில் மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்காவிட்டால், அன்றே அவர் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பார்.
இதில் கேள்விக்கே இடமில்லை என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா கருத்து வெளியிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் தமக்கெதிராகச் சுமத்தப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் மனம் திறந்து கருத்துகளை கூறியுள்ளார்.
தனது பதவிக்காலத்தில் இடம்பெற்ற விடயங்களைப் பற்றி விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென்ற அழுத்தத்தை அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவே வழங்கி வருகிறார் என்று குற்றஞ்சாட்டிய முன்னாள் பிரதம நீதியரசர், நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைத்து தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியாதென்றும் சுட்டிக்காட்டினார்.
**************

தாக்குதலுக்குள்ளான ஜே.வி.பி
ஜே.வி.பியின் உறுப்பினர்கள் ஏழு பேர் மீது ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர் ஒருவர் தலைமையிலான குழு நடத்தியிருக்கும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல், அரசமைப்பில் குறிப்பிட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் மீதான தாக்குதலாகவே கருதவேண்டியுள்ளது என்று ஜே.வி.பி. விடுத்திருக்கும் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி உறுப்பினர்கள் தாக்கப்பட்டமை குறித்து கண்டனம் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கட்சிக்காக உயிர்நீத்த தோழர்களின் ஞாபகார்த்த விழாவுக்கான சுவரொட்டிகளை நேற்றுமுன்தினம் நொச்சியாகம நகரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த தமது கட்சி உறுப்பினர்கள் ஏழு பேர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
நொச்சியாகம பிரதேச சபையின் உப தலைவர் நளின் திஸாநாயக்க உட்பட்ட குழுவினர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
பொல்லுகளால் கடும் தாக்குதலுக்கு இலக்கான தோழர் கருணாரத்ன கடுமையான காயங்களுடன் நொச்சியாகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
இந்தத் தாக்குதல் குறித்து முறைப்பாடு செய்ய சென்றபோதும் நொச்சியாகம காவல்துறையினர் அதனை ஏற்றக்கொள்ளவில்லை.
இதனால் அநுராதபுரம் வைத்தியசாலை காவல்துறை பிரிவில் முறைப்பாட்டைச் செய்யவேண்டியேற்பட்டது.
மனிதச் சுதந்திரம், ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்டத்தின் நியாயாதிக்கத்தை முற்றுமுழுதாக ஒழித்துக்கட்டியிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ அரசு, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வீதியில் கொலை செய்து மோதிக்கொள்ளும் நிலைமையை உருவாக்கி, குற்றவாளிகளைப் பாதுகாக்கும் முன்மாதிரியை நாட்டின்முன் வைத்துள்ளது.
இதனால் உத்வேகமடைந்துள்ள பிரதேச ரீதியான அரசியல் காடையர்கள் இவ்வாறான வன்முறைகளைச் செய்வது ஒன்றும் புதுமையான விடயமல்ல.
இவ்வாறான சூழ்நிலையில், நாட்டின் சட்டத்தை மீறுதல், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை இல்லாமற் செய்யும் அரசின் முயற்சியை தோல்வியடையச் செய்யவேண்டியதன் அவசியத்தை தாம் வலியுறுத்த விரும்புவதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
**************

Sunday 13 November 2011

செய்திகள் 13/11


மகாநாட்டை புறக்கணித்த நாடுகள்
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சும், கடற்படையும் இணைந்து ஒழுங்கு செய்துள்ள காலி கடல்சார் பாதுகாப்பு மாநாட்டைப் புறக்கணிக்க பிரித்தானியாவும், தென்னாபிரிக்காவும் கடைசிநேரத்தில் முடிவு செய்துள்ளன.
அத்துடன் இந்த மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை ஒன்றை சமர்ப்பிக்கவிருந்த சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் அரசியல் விஞ்ஞானப் பிரிவின் உதவிப் பேராசிரியர் கலாநிதி லோறன்ஸ் பிரபாகர், தனது கட்டுப்பாட்டை மீறிய காரணங்களால் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்க முடியாதுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையே பிராந்திய கடல்சார் ஒத்துழைப்பு தொடர்பான இந்திய கடற்படையின் கண்ணோட்டம் தொடர்பாக இந்திய கடற்படையின் சார்ப்பில் முதன்மை நடவடிக்கை பணிப்பாளர் கப்டன் பாலகிருஸ்ணன் ஆய்வுக்கட்டுரை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளார்.
முன்னதாக இந்தியக் கடற்படையின் மூத்த அதிகாரி ஒருவரே இந்த ஆய்வுரையை சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தியத் தரப்பில் மூத்த கடற்படை அதிகாரிகள் பங்கேற்காததும், பிரித்தானியா, தென்னாபிரிக்கா ஆகியன வெளியேறியதும் சிறிலங்காவுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
நாளை தொடங்கவுள்ள இந்தக் கருத்தரங்கில் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், பிரான்ஸ், அவுஸ்ரேலியா, ஜப்பான், மாலைதீவு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பங்காளாதேஸ், கென்யா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தென்கொரியா, மலேசியா, ஓமான், கட்டார் ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளன.
நாளை காலை இந்தக் கருத்தரங்கை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
***************

அச்சத்துடன் அவதானிக்கும் அரசு
பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி இலங்கை தொடர்பில் ஒளிபரப்ப தயாராக்கிக் கொண்டிருக்கும் அடுத்த காணொளி தொடர்பில் அவதானித்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சனல் 4வின் புதிய காணொளி தொடர்பில் கூடிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என வெளிவிவகார அமைச்சின் பொது மக்கள் தொடர்பு மற்றும் பொதுத் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் சரத் திஸாநாயக்க தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.
சனல் 4 இதற்கு முன்னர் வெளியிட்ட காணொளிகள் பொய் என நிரூபிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக வெளிவந்த இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படத்தின் 2வது பாகத்தினை சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பவுள்ளது.
இலங்கையின் கொலைக்களம்; தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் எனும் தலைப்பில் அதன் அடுத்த பாகத்திற்குரிய ஆவணப்படத்தினைத் தயாரிக்குமாறு சனல் 4 தொலைக்காட்சியின் செய்திகள் மற்றும் சமகால விவகாரங்களுக்கான பிரிவின் தலைவர் னுழசழவால டீலசநெஇ ஐவுN தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இப்புதிய ஆவணப்படத்தில் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள்; விசாரணைக்கு உட்படுத்தப்படுவதோடு, போர்க்குற்றங்கள் பற்றி யாரெல்லாம் அறிந்திருந்தார்கள், போர்க்குற்றங்களைத் தடுக்க உலகம் ஏன் தவறியது என்பது குறித்தும் ஆராயப்படுவதாக சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் துழn ளுழெறஇனால் வழங்கப்படவுள்ள புதிய இலங்கையின் கொலைக்களம்: தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் ஆவணப்படத்தில், போரின் இறுதி நாட்களில் என்ன நிகழ்ந்தது என்பதை வலுவான ஆதாரங்கள் நேரடிச் சாட்சியங்கள், காணொளி மற்றும் ஒளிப்படங்கள் மூலமாக ஆவணப்படத்தின் நெறியாளர் ஊயடடரஅ ஆயஉசயநயால் தொகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
***************

நியாயம் கோரியே பயணம்
ஜே.வி.பி. காலத்தின்போது தமது மக்களுக்காக இன்றைய அரசுத் தலைவர் சர்வதேச அரங்கிற்குச் சென்று குரல் கொடுத்தார்.
அது போலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்காக நீதிகோரி வெளிநாட்டுப் பயணத்தை ஆரம்பித்தனர் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்ட குழுவின் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேசரி வார இதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கம் அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழு அன்றைய அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்படிக்கை ஏன் தோல்வி கண்டது. போர் ஏன் ஏற்பட்டது என்பது குறித்தே கவனம் செலுத்துகின்றது.
போர்க் குற்றச்சாட்டுகள் குறித்தோ, காணாமல் போனோர் குறித்தோ ஆராய்ந்து தீர்வு காண முற்படவில்லை.
எனவே, தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க சர்வதேச விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் எனக் கூறிய அவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து அலட்டிக் கொள்பவர்கள் 12 சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் கண்ட தீர்வு என்ன என்பது குறித்துக் கூற முன்வர வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கூட்டமைப்பினரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து அழுது புலம்புவதை விடுத்து இன விவகாரத்துக்கான தீர்வினைக் காண இந்தச் சக்திகள் முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
***************

தோற்றுப் போன ஸ்ரீலங்கா
இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல மில்லியன் ரூபாய்கள் முதலிடப்பட்ட முயற்சி ஒன்று தோல்வியடைந்துள்ளதாக சண்டே லீடர் தெரிவித்துள்ளது.
பொதுநலவாய நாடுகளின் 2018 ஆண்டுக்குரிய விளையாட்டுப் போட்டிகளை இலங்கையின் அம்பாந்தோட்டையில் நடத்துவதற்கான வாக்கெடுப்பு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்காக இலங்கை அரசாங்கத்தினால் சுமார் 300 தொடக்கம் 400 மில்லியன் ரூபாய்கள் வரை செலவிடப்பட்டன.
முன்னாள் கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரன், முன்னாள் அழகுராணி அனார்கலி, உட்பட்ட பல கிரிக்கட் மற்றும் ஏனைய துறைகளை சார்ந்தோர் இதற்கான பிரசாரங்களில் ஈடுபட்டனர்.
2018 பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவது குறித்து அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய இருநாடுகளுக்கிடையே 71 நாடுகளின் அமைப்பில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் 27 வாக்குகளை மாத்திரமே இலங்கையால் பெறமுடிந்தது.
இந்த வாக்கெடுப்பின் பிரசாரங்களுக்காக இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சு, பிரித்தானியாவின் பொது உறவுகள் நிறுவனம் ஒன்றின் உதவியை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
***************

சுவீகரிப்பு ஆரம்பம்
நட்டமடைந்துள்ள தனியார் நிறுவனங்களை அரசமயப்படுத்தி அதனை மீள்கட்டியெழுப்புவது தொடர்பான சட்டம் எதிர்வரும் வாரத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த சட்டத்திற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ் கடந்த வெள்ளிக்கிழமை கையொப்பம் இட்டதோடு அது அதிகாரபூர்வமான சட்டமாக மாறியுள்ளதென அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 8ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்ட நட்டமடைந்துள்ள தனியார் நிறுவனங்களை அரசமயப்படுத்தி அதனை மீள்கட்டியெழுப்புவது தொடர்பான சட்டம் மூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி குறித்த சட்டம் எதிர்வரும் புதன்கிழமை அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளது.
இதன்போது நட்டமடைந்துள்ளதாக இனங்காணப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களுக்கு உரிய அதிகாரிகளையும் உதவி அதிகாரிகளையும் நியமிக்கும் நடவடிக்கை இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது
***************

சமாதானத்தை காணவில்லை
ஆயுதங்களைக் கொண்டு யுத்தத்தில் வெற்றிபெற்றிருந்தாலும் நாட்டில் இன்னும் நிரந்தர சமாதானம் உருவாகவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் இணை பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாட்டை ஒன்றிணைக்க வேண்டுமாயின் மத படிப்பினைகளுக்கு அமைய புத்திசாதுர்யமான திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டதன் மூலம் சில தரப்பினரே அதன் பலாபலன்களை அனுபவிப்பதாக சசுனட அருண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்
***************

நீதி கோரி கனடாவில் முறைப்பாடு
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் குடும்பத்தினர் நீதி வேண்டி கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹாப்பரிடம் முறையிடவுள்ளனர்.
இதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாக பாரத லக்ஸ்மனின் சகோதரியான சுவர்ணா பிரேமசந்திர கனடாவில் இருந்து தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைக்கு இணங்கி ஹாப்பரை சந்திப்பதற்கு கனேடிய பிரதமர் காரியாலயம் இணக்கமான பதிலை வழங்கியுள்ளதாக சுவர்ணா குறிப்பிட்டுள்ளார்.
தமது சகோதரரின் கொலைக்கு பாதாள உலக கோஷ்டியினர் காரணம் என்பதற்கு ஆதாரங்கள் வெளிப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமது சகோதரரின் கொலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை அரசாங்கம் இன்னும் சந்தேகநபராக பெயரிடவில்லை.
தமது சகோதரரின் கொலை தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் செயலாளரிடம் முறையிட்டுள்ளதாகவும் சுவர்ணா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த கொலை தொடர்பில் நீதியை வேண்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சட்டத்தரணிகள் கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்துவார்கள் என்றும் சுவர்ணா தெரிவித்தார்.
***************

Saturday 12 November 2011

செய்திகள் 12/11


வன்மையான கண்டனம்
தமிழர் பிரதேசமான மன்னார் மாவட்டத்துக்கு சிங்கள அரச அதிபரை நியமிப்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை மிக வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நியமனத்தை அரசாங்கம் உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
நூறு வீதம் தமிழ் மக்களை கொண்ட மன்னார் மாவட்டத்துக்கு அரச அதிபராக தமிழர் ஒருவரே நியமிக்கப்பட வேண்டும் என கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சிங்களவரை நியமித்திருப்பதால் சாதாரண மக்களின் குறைபாடுகள் எவ்வாறு அரசாங்கத்தை சென்றடையும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளது.
மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கான அரச அதிபர்கள் இடமாற்றத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கம் நடைறைப்படுத்தியிருக்கின்றது.
இதன் பிரகாரம் மன்னார் மாவட்ட அரச அதிபராக சரத் ரவீந்திர என்ற பெரும்பான்மையைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.
வடக்கில் அரச அதிபர்களாக சிங்களவர்களை இணைக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பினையே வெளியிட்டு வந்தது.
தமது எதிர்ப்பினை தாம் பாராளுமன்றத்திலும் வெளிப்படுத்தியிருந்ததையடுத்து இந்த இடமாற்றங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தன என சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் தற்போது அரசாங்கம் தனது திட்டத்தை அமுல்படுத்தி மன்னார் மாவட்டத்துக்கு சிங்களவர் ஒருவரை அரச அதிபராக நியமித்துள்ளது.
மன்னார் மாவட்டம் நூறு வீதம் தமிழர்களைக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் அங்கு சிங்களவரை நியமித்திருப்பதன் மூலம் அந்த மக்களின் குறைபாடுகள் வெளிக்கொணரப்பட முடியாத நிலையொன்று ஏற்பட்டுள்ளது.
தற்போது நியமனம் பெற்றுள்ள அரச அதிபரின் தமிழ் மொழிப் புலமை எவ்வாறு உள்ளது என்பது தெரியாது. இதனால் சாதாரண மக்களின் நிலைமை மோசமாகியுள்ளது.
எனவே அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய தாம் மிக வன்மையாகக் கண்டிப்பதாக குறிப்பிட்டார்.
அதுமட்டுமல்லாது தமிழர் பிரதேசங்களில் சிங்கள அதிபர்களை உள்வாங்கும் திட்டத்தை அரசாங்கம் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்பதுடன் தற்போது மன்னார் மாவட்டத்துக்கு அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ள நியமனத்தை உடனடியாக ரத்து செய்து அங்கு தமிழ் மொழி மூல அரச அதிபர் ஒருவரை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைப்பதாக தெரிவிததார்.
எமது மக்களின் குறைநிறைகளைக் கண்டறிய தமிழ் மொழி மூல அரச அதிபரே அவசியம் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
****************

தள்ளிப் போகும் அறிக்கை
விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் அரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய அரசுத் தலைவர் விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 20ம் திகதி உத்தியோகபூர்வதாக அரசுத் தலைவரிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் ஊடக அதிகாரி லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 15ம் திகதி முழுமையாக நிறைவுக்கு வரும் நிலையில் 20ம் திகதி அது அரசுத் தலைவரிடம் கையளிக்கப்பட வேண்டும் என அரசுத் தலைவரின் செயலாளர் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய அரசுத் தலைவர் விசாரணை ஆணைக்குழு 2010 மே மாதம் 15ம் திகதி நியமிக்கப்பட்டது.
இவ்வாணைக்குழு 27 பொது சந்திப்புக்களையும் சுமார் 40 இடங்களில் 12 வெளிக்கள விஜயத்திலும் ஈடுபட்டதோடு வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல பகுதி மக்களிடமும் சாட்சியங்களைப் பெற்றிருந்தது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் நேரடி சாட்சியம் அளித்ததோடு 5100 கடிதம் மூலமான சாட்சியங்களும் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றது.
சுமார் 11 மாதங்களாகச் செயற்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையை தயாரித்து எதிர்வரும் 20ம் திகதி அரசுத் தலைவரிடம் கையளிக்கவுள்ளது.
****************

நிராகரிப்பு நாடகம் அரங்கேறியது
இலங்கை வருமாறு அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மாலைதீவில் நேரில் சந்தித்து விடுத்த அழைப்பை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்துள்ளார்.
தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்குவது உட்பட இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை, இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினை ஆகியவற்றுக்கு நல்லதொரு தீர்வு ஏற்படும்வரை தன்னால் இலங்கைக்கு வர இயலாது என்று அரசுத் தலைவர் மஹிந்தவிடம் நேரில் தெரிவித்துள்ளார்.
தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற இலங்கை அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை மாலைதீவில் தனியாகச் சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்.
இந்தச் சந்திப்பின்போது இலங்கைத் தமிழர்களின் மீள்குடியமர்வு மற்றும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் விளக்கம் கேட்டார் எனக் கூறப்படுகிறது.
****************

கடல்சார் பாதுகாப்பு
காலி நகரில் அடுத்தவாரம் நடைபெறவுள்ள கடல்சார் பாதுகாப்பு கருத்தரங்கில் பங்கேற்க, அமெரிக்கப் பாதுகாப்பு திணைக்களத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவுக்கான பிரதி உதவிச்செயலர் றொபேட் ஸ்கெர் சிறிலங்கா செல்லவுள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை இந்த இரண்டு நாள் கடல்சார் பாதுகாப்பு கருத்தரங்கு காலியில் உள்ள வெளிச்ச வீட்டு விடுதியில் ஆரம்பமாகவுள்ளது.
முதல்நாள் கருத்தரங்கில் அமெரிக்காவின் பாதுகாப்புத் திணைக்கள பிரதி உதவிச் செயலர் றொபேட் ஸ்கெர், பூகோள மற்றும் பிராந்திய கடல்சார் பாதுகாப்பில் பொதுவான மூலோபாயத்தின் முக்கியத்துவம் என்ற பொருளில் ஆய்வு ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார்.
ஆசிய விவகாரங்களில் நிபுணரான இவர் முன்னதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பணியாற்றியிருந்தார்.
இந்தநிகழ்வில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும் உரையாற்றவுள்ளார்.
காலி கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கில் அவுஸ்ரேலியா, பிரான்ஸ், ஜப்பான், பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இந்தியா, பிரித்தானியா, சீனா, அமெரிக்கா, மாலைதீவு, ஐக்கிய அரசு எமிரேட்ஸ், பங்களாதேஸ், கென்யா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தென்கொரியா, இந்தோனேசியா, மலேசியா, ஓமான், கட்டார் ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளன.
கடல்சார் பாதுகாப்பு மற்றும் அது சார்ந்த சவால்கள் குறித்த ஆய்வுகளை இந்தியா, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சமர்ப்பிக்கவுள்ளனர்.
இரண்டாவது நாள் அமர்விலும், அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த பிரிகேடியர் ஜெனரல் மைக்கேல் கிலென் கொம்ரன் ஆய்வு ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
****************

தோற்றது ஸ்ரீலங்கா
2018ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் உரிமையினை அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரம் வென்றெடுத்துள்ளது.
இதனால் ஹம்பாந்தோட்டையில் 2018ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் இலங்கையின் கனவு வீணாகியுள்ளது.
இலங்கையின் ஹம்பாந்தோட்டை நகரமும் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரமும் 2018ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் உரிமையினை பெறுவதற்குப் போட்டியிட்டன.
இது தொடர்பான பொதுநலவாய விளையாட்டுச் சம்மேளனத்தின் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இவ்வாக்கெடுப்பில் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் 2018ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய போட்டிகளை நடத்துவதற்கு 43 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.
இலங்கையில் குறித்த போட்டியினை நடத்துவதற்கு 27 உறுப்பினர்கள் மாத்திரமே வாக்களித்திருந்தனர்.
பொதுநலவாய போட்டிகளை நடத்தும் உரிமையினை ஐந்தாவது தடவையாக அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
****************

18வது மகாநாடு எங்கு நடந்தென்ன?
18வது சார்க் உச்சி மாநாட்டை நேபாளத்தின் கத்மன்டு நகரில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலைத்தீவில் நிறைவுற்ற 17வது சார்க் உச்சி மாநாட்டின் இறுதியில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இம்முறை சார்க் மாநாட்டில் வலய ஒத்துழைப்புக்கள் குறித்து நான்கு பொது உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
****************

தொடரும் கடத்தல்கள்
மிறிஹாண ஜுபிலி கணுவ பிரதேசத்தில் உள்ள புத்தக கடை உரிமையாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் வெள்ளை வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
ஜுபிலி கணுவ சந்தியில் நேற்று இரவு 8.35 அளவில் கோட்டே வீதியில் உள்ள புத்தக கடையை மூடிவிட்டு வெளியில் வந்தபோது தனது கணவரை வெள்ளை வானில் வந்தவர்கள் பலவந்தமாக இழுத்துச் சென்றதாக கடத்தப்பட்டவரின் மனைவியான யு.கே.ராஜிகா சுரங்கனி தெரிவித்துள்ளார்.
ஈ.எம்.துஸார சமிந்த பண்டார என்ற நபரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
****************