Wednesday 18 January 2012

எமது ஈழத்துக் கலைஞர்களின் பிரமாண்டமான சினிமா தயாரிப்பு தயார்


எமது ஈழத்துக் கலைஞர்களின் பிரமாண்டமான சினிமா தயாரிப்பு தயார்

பிரித்தானியாவில் இருந்து எமது ஈழதுது இழைஞர்களால் தயாரிக்கப்பட்டு பொலிவூட் சினிமாவைவிட எந்த தரத்திலும் குறையாது மிக பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்ட ஓளிப்படப் பாடல் வெளியாகியுள்ளது, 

இப்பாடலை பிரித்தானியாவில் வைத்து, மன்னர் கால முறைப்படி, உயர் தொழிலநுட்ப்ப கருவிகளால், பல தெரிவு செய்யப்பட்ட இடங்களில் படமாக்கி யுள்ளனர், இப்பாடலை பார்க்கும் போது எமது கலைஞர்களும் உலகத்தரத்துக்கு இணையான படைபுக்களை தரமுடியும் என்ற நம்பிக்கை பிறக்கின்றது, 

இப்பாடலை நீங்களும் பார்த்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்



 
பாடலை பார்க்க : LINK


நன்றி




Tuesday 13 December 2011

எமது செய்திகள்

காலை 07.00 மணிக்கு செய்திச்சுருக்கம்

காலை 08.00 மணிக்கு பிரதான செய்திகள்

காலை 09.00 மணிக்கு செய்திச்சுருக்கம்
காலை 10.00 மணிக்கு செய்திச்சுருக்கம்
காலை 11.00 மணிக்கு செய்திச்சுருக்கம்

மதியம் 12.00 மணிக்கு பிரதான செய்திகள்

மதியம் 01.00  மணிக்கு செய்திச்சுருக்கம்
மதியம் 02.00 மணிக்கு செய்திச்சுருக்கம்

மதியம் 03.00 மணிக்கு பிரதான செய்திகள்

மாலை 04.00 மணிக்கு செய்திச்சுருக்கம்
மாலை 05.00 மணிக்கு செய்திச்சுருக்கம்
மாலை 06.00 மணிக்கு செய்திச்சுருக்கம்
மாலை 07.00 மணிக்கு செய்திச்சுருக்கம்

இரவு 08.00 மணிக்கு பிரதான செய்திகள்

எமது செய்திகளை www.ibctamil.fm, DAB, Hotbird மற்றும் உங்கள் கையடக்க தொலைபேசியிலும் கேட்கலாம்...

Thursday 17 November 2011

செய்திகள் 16/11


மீண்டும் பேச்சு?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான மற்றுமொரு பேச்சுவார்த்தை இன்று மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் அமெரிக்கா, கனடா மற்றும் லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றிருந்ததால் தடைபட்டிருந்த பேச்சுவார்த்தை இன்று மீண்டும் ஆரம்பமாகிறது.
இதன்படி இன்றைய பேச்சுவார்த்தையில் இதற்கு முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது கூட்டமைப்பு அரசிடம் முன்வைத்த கோரிக்கைகளுக்கான அரசின் பதில் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
அரச தரப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஜிவ விஜேசிங்க, சசின் வாஸ் குணவர்த்தன, அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா உள்ளிட்டோர் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது
************

தமிழருக்கு எதிரான அரசு
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சார்பாக ஒருபோதும் செயற்படுவதில்லை.
எப்போதுமே தமிழர்களின் எதிர்மறையான கண்ணோட்டத்தோடு நோக்குகிறது.
நாடாளுமன்றத்தில் கூட தமிழ் உறுப்பினர்கள் வேண்டப்படாத பிரஜைகள் போலவே நடத்தப்படுகின்றனர் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட தேருநர் இடாப்பு திருத்தம் தொடர்பாக கிறீன்கிறாஸ் விடுதியில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
30 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற யுத்தத்தால் தேர்தல் என்பதே மக்கள் மனதில் இருந்து மறைந்து போயிருந்தது.
யுத்த காலத்தில் தமிழர் பிரதேசங்களில் தேர்தல் நடத்தப்பட்ட போது அவை புறக்கணிக்கப்பட்டன அல்லது குண்டுத் தாக்குதல்கள் மூலம் குழப்பப்பட்டன.
இதனால் இன்னமும் மக்கள் தேர்தல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியே வாழ்கின்றனர்.
அத்துடன் இன்னமும் இயல்பு வாழ்வுக்கு திரும்ப முடியாமல், தம் சொந்த இடங்களுக்கு போக முடியாமல் அடிப்படை வசதிகள் அற்று வாழ்கின்ற மக்கள் வாக்களிப்பது பற்றிச் சிந்திப்பது என்பது இயலாத விடயம்தான்.
இவ்வாறு நீண்டகாலமாக வாக்களிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட்ட மக்கள் இனிவரும் காலங்களில் தமது ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்காகவேனும் வாக்களிக்கும் பண்பினை வளர்க்க வேண்டும்.
வாக்குரிமையின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு பிரஜையும் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.
வாக்காளர் பட்டியலில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது தவறான செயலாகும்.
அவர்கள் இலங்கை பிரஜைகள்தான் என்றும் தெரிவித்தார்.
************

அச்சுறுத்தும் அடியாட்களும் அஞ்சும் நீதியும்
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறினார் என்றும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்றும் கூறி அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளனர் என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், தனது நடவடிக்கை தொடர்பாக ஆராய விசேட தெரிவுக்குழு அமைக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இல்லை என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளமையானது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறுவதாகவுள்ளது என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், தெரிவுக்குழு அமைப்பதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்திடம் இல்லை எனக் கூறுவது நாடாளுமன்றை அவமதிக்கும் செயல் என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, நாடாளுமன்றிலுள்ள அரச தரப்பு உறுப்பினர்கள் 75 பேர் சரத் என். சில்வாவுக்கு எதிராக விசேட தெரிவுக்குழு ஒன்றை அமைக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.           
************

பிளவுபட்ட இலங்கை ஒத்துக் கொண்ட சிங்களம்
இலங்கை தொடர்ந்தும் இன மற்றும் மத ரீதியில் பிளவுபட்டே கிடக்கிறது.
போருக்குப் பின்னரான இந்தக் காலம் மிக முக்கியமானது.
இந்தக் காலத்தில், போரால் ஏற்பட்ட காயங்களை ஆற்ற உதவுவதற்கான வாய்ப்புகளை அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏற்படுத்த வேண்டும் என்று கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அமைதி முயற்சிகள் தோல்வியடைந்ததற்கான காரணங்களை விளக்கி நோர்வே வெளியிட்ட, அமைதிக்கான அடமானங்கள் என்ற அறிக்கை வெளியீட்டுக்காக ஒஸ்லோ மிலிந்த சென்றிருந்தார்.
அங்கு இந்திய ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், முக்கியமான புள்ளி ஒன்றில் தாம் நின்றுகொண்டிருப்பதாகவும், தங்கள் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் இன்னும் இருக்கிறது என்று தெரிவித்தார்.
சுதந்திரத்துக்குப் பின்னரான தமது அரசியல் நடவடிக்கைகள் இனங்களை ஒன்றுபடுத்துவதற்குப் பதில் பிளவுபடுத்தி விட்டது.
ஒரு குழு அல்லது மற்றொன்று மேலாதிக்கம் செலுத்துவதில் கவனம் செலுத்தின.
குறுகிய வட்டத்துக்குள் சுற்றிக்கொண்டிருக்கக்கூடாது தூர நோக்குள்ளவர்களாக இருக்கவேண்டும்.
சாதாரண சிங்கள மக்கள் இனவாதிகள் அல்லர் என்றே வெளியே இருப்பவர்கள் சிந்திக்கிறார்கள்.
தமிழர்களோ சிங்களவர்களோ தேசியம் பற்றிப் பேசுவதில் தவறில்லை.
ஆனால் அதனால் அவர்கள் அழிவுக்கு உள்ளாகக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
************

அரசின் தொடரும் அடாவடி?
பொது நிறுவனங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் ஆய்வுகளுக்கு ஏற்ப நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை பதவி நீக்கம் செய்வதற்கு அரசு முடிவு செய்திருப்பதாக தெரிய வருகிறது.
இத் தெரிவுக் குழுவினால் நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களாக இனங்காணப்பட்ட 115 அரச நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னரே உத்தேச அமைச்சரவை மாற்றங்களை செய்வதற்கு அரசு முடிவு செய்திருப்பதாக தெரிய வருகிறது.
இந்த நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கிவருவதற்கு மேலாக சிலவற்றில் ஊழல்கள், அரசின் நிதிக் கொள்கைகளை உதாசீனம் செய்தல் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்று வருவது தெரிய வந்துள்ளதாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் கால்வாய் அமைப்பு சபை, இலங்கை போக்கு வரத்துச் சபை என்பன கூட இலாபத்தில் இயங்கவில்லை.
ஆனால் இவை பொதுமக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருகின்றன என்று அண்மையில் அமைச்சர் பசில் ராஜபக்ஸ நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டது நினைவு கூரத்தக்கது.               
************

பதவியேற்க பதவி விலகும் மனோ?
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் கட்சி அலுவல்களை மேற்கொள்வதன் பொருட்டு மனோ கணேசன் இராஜினாமா செய்வதாக தெரியவந்துள்ளது.
தனது இராஜினாமா குறித்து மனோ கணேசன் விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என அறியக்கிடைக்கிறது.
இதன்படி மனோ கணேசனின் வெற்றிடத்திற்கு கடந்த கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு அடுத்தபடியான வாக்குகளைப் பெற்ற ஒருவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி மனோ கணேசனுக்கு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐனநாயக மக்கள் முன்னணிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியில் தற்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று வெற்றிடமாகுமாயின் அதற்கு மனோ கணேசன் நியமிக்கப்பட வேண்டும் என்பது ஐனநாயக மக்கள் முன்னணியின் கோரிக்கையாகும்.
இக்கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி லண்டன் வந்துள்ள ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதும் இது குறித்து ஜனநாயக மக்கள் முன்னணி கலந்துரையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது
************

புலத்தின் பலத்தை தெரிந்து கொண்ட பீரிஸ்!
புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து செயற்பட சிறிலங்கா அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், அதேவேளை விடுதலைப் புலிகளின் ஈழம் திட்டத்துக்காக செயற்படுவோர் மீது அனைத்துலக சமூகம் வெளிப்படையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
காலி கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற 19 நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
புலம்பெயர் தமிழர்களை ஒதுக்க வேண்டிய தேவை சிறிலங்கா அரசாங்கத்துக்கு இல்லை.
போருக்குப் பிந்திய சூழலில் அவர்களுடன் இணைந்து செயற்படத் தயாராவே உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகள் உள்ளிட்ட 32 நாடுகள் விடுதலைப் புலிகளை தடை செய்துள்ள போதும், அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் கொடிகளை ஏந்திச் செல்வதைத் தடுப்பதில் அனைத்துலக சமூகம் தோல்வி கண்டுள்ளது.
விடுதலைப் புலிகள் 2009 மே மாதம் தமது மரபுவழி இராணுவ பலத்தை இழந்த போதிலும் வெளிநாடுகளில் தொடர்ந்து நிதி சேகரிக்கிறார்கள்.
இருந்தபோதும், விடுதலைப் புலிகளுக்கு தயவு காண்பிப்பதாக எந்தவொரு நாட்டையும் குறிப்பிட்டுக் குற்றம்சாட்ட விரும்பவில்லை.
மிக அண்மையில் பேர்த்தில் கொமன்வெல்த் மாநாட்டின்போது கூட விடுதலைப் புலிகளின் கொடியை ஏந்தியபடி போராட்டம் நடத்தினார்கள்.
பிரித்தானியாவில் உள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் கூட தொடர்ந்து புலிகளின் கொடிகளை பகிரங்கமாக ஏந்திச் செல்கிறார்கள் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் விசனம் வெளியிட்டுள்ளார்
************

Tuesday 15 November 2011

செய்திகள் 15/11


அமெரிக்காவின் கவலை
உலக நாடுகளிலிருந்து இலங்கை தனிமைப்படுத்தக்கூடிய அபாயம் காணப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்னீஸ் தெரிவித்திருந்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல், மனித உரிமைகளை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு என அவர் தெரிவித்துள்ளார்.
மியன்மாரை மேற்குலக நாடுகள் ஒதுக்கி தனிமைப்படுத்தியுள்ளதனைப் போன்று இலங்கை தனிமைப்படுத்தப்படுவதனை அமெரிக்கா விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2009ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 30ஆம் திகதி இந்த குறிப்பு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்ப வைக்கப்பட்டுள்ளது.
மிக நீண்ட காலம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பிரிவினைவாத யுத்தம் நடைபெற்றதாகவும், யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய தொலைநோக்குத் திட்டம் இலங்கை அரசிடம் காணப்படுகின்றதா என்பது கேள்விக்குரியே என அவர் குறிப்பிட்டுள்ளதாகத் விக்கிலீக்ஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.          
******************

பிரதமரின் கண்டனம்
சிறிலங்காவில் நோர்வேயின் சமாதான முயற்சிகள் தோல்வி கண்டதற்கு, விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசும் தமது கொள்கையில் கடைப்பிடித்த இறுக்கமான நிலைப்பாடே காரணம் என்று நோர்வேயின் மீளாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ள கருத்தை நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.ருத்ரகுமாரன் நிராகரித்துள்ளார்.
நோர்வேயின் நிலையுடன் சிறிலங்கா அரசுடன் நடத்தப்பட பேச்சுகளின் போது விடுதலைப் புலிகளின் சட்டஆலோசகராக பங்கேற்ற அவர், பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலே இந்தக் கருத்தை நிராகரித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இந்தப் பேச்சுக்களில் உளச்சுத்தியுடனேயே ஈடுபட்டனர்.
பேச்சுக்கள் நடக்கும்போதே, விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதம் என்ற கண்ணாடியின் ஊடாகப் பார்த்து, அவர்கள் கொண்டிருந்த சமபல நிலையைக் குலைத்த, அனைத்துலக சமூகம் தான் இந்தப் பேச்சுக்கள் தோல்வியடைந்ததற்குக் காரணம்.
விடுதலைப் புலிகள் இந்தப் பேச்சுக்களின் போது, பல விட்டுக் கொடுப்புகளைச் செய்தனர்.
போர்நிறுத்த மீறல்கள் விவகாரத்திலும், சிறிலங்கா அரசே பாரிய மீறல்களில் ஈடுபட்டது.
போர்நிறுத்த மீறல்கள் விடயத்தில், சிறிலங்கா போர்நிறுத்தக் கண்காணிப்பு குழு கூட, மீறல்கள் குறித்த எண்ணிக்கையை மேலோட்டமாகப் பார்க்கக் கூடாது, அதன் கீழுள்ள தார்ப்பரியத்தைப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது என்று அவர் கூறியுள்ளார்.
இனப்பிரச்சினை விவகாரத்தில் புலம்பெயர் தமிழர்கள் முன்னணி நிலையை எடுக்காமல், தலைமைத்துவத்தை,சிறிலங்காவில் வசிக்கும் தமிழர்கள் எடுக்க வேண்டும் என்று நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டதைப் பற்றிக் கருத்து தெரிவித்துள்ள வி.ருத்திரகுமாரன், புலம்பெயர் தமிழர்கள், உள்நாட்டில் களத்தில் வாழும் தமிழர்கள் என்ற பேதம் உண்மையானதல்ல.
சிறிலங்காவில் வாழும் தமிழர்களுக்கு தங்களது கருத்துக்களை சுதந்திரமாகக் கூறவும் செயல்படவும் தேவையான அரசியல் வெளி, இருக்கவில்லை.
சிறிலங்கா ஒரு ஜனநாயக ரீதியாகத் தோல்வியடைந்த நாடு என்று இந்த அறிக்கையே கூறுகிறது.
எனவே புலம்பெயர் தமிழர்கள், சிறிலங்கா பிரச்சினையில் குரல் கொடுப்பதில் தவறில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
******************

அரசு அதிருப்தி
விடுதலைப் புலிகளுடனான அமைதி முயற்சிகள் தோல்வியடைந்தமை தொடர்பாக நோர்வேயால் வெளியிடப்பட்டிருக்கும் கருத்துக்கு இலங்கை அரசு இராஜதந்திர ரீதியிலான அதிருப்தியை வெளியிடத் தீர்மானித்துள்ளது.
இலங்கை அமைதி முயற்சிகள் தோல்வியடைந்தமைக்கு அரசும், புலிகள் இயக்கமும் பொறுப்பேற்கவேண்டுமெனக் கடந்த வாரம் நோர்வேயின் அரச சார்பற்ற அமைப்பு ஒன்று தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.
அத்துடன், இது தொடர்பாக பல விமர்சனங்களையும் அது முன்வைத்திருந்தது.
இந்நிலையில், இந்த விமர்சனங்கள் இறைமையுள்ள அரசு ஒன்றின் நற்பெயருக்கு சர்வதேச ரீதியில் களங்கத்தை ஏற்படுத்துமென அரசு கருதுவதாக மூத்த அமைச்சர் ஒருவர் நேற்றுத் தெரிவித்தார்.
இதனடிப்படையில் இந்த விமர்சனங்கள் குறித்து நோர்வே அரசுக்கும் இந்த ஆய்வை நடத்திய நோறாட் அமைப்புக்கும் இராஜதந்திர ரீதியிலான அதிருப்தியை வெளியிட அரசு தீர்மானித்துள்ளது.
இன்னும் ஓரிரு தினங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நோர்வே வெளியிட்ட அறிக்கையில் சமாதான முயற்சியில் இலங்கையின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் அம்பலமானதால், பெரும் சங்டமான நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
******************

பல்கலைக்கழக மாணவர்களின் துணிவு
யாழ்.பல்கலைக்கழகத்தில் முன்னாள் இந்திய வெளிவிவகாரச் செயலர் சியாம் சரண் நிகழ்த்திய உரையை மாணவர்கள் புறக்கணித்துள்ளனர்.
கைலாசபதி கலையரங்கில் நேற்று பிற்பகல் இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கையும், இந்திய - சிறிலங்கா நட்புறவும் என்ற தலைப்பில் முன்னாள் இந்திய வெளிவிவகாரச் செயலாளரும், நாடுகளின் அபிவிருத்திக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் மையத்தின் தலைவருமான சியாம் சரண் உரையாற்றியிருந்தார்.
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ஜ.ஏ.சந்திரசிறி, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரி மகாலிங்கம், மற்றும் அரச, இராணுவ அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் வழமைக்கு மாறாக பெருமளவு இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
அதேவேளை பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.
குறைந்தளவிலான பல்கலைக்கழக விரிவுரையாளர்களே இதில் பங்குபற்றியிருந்தனர்.
இதனால் பெரும்பகுதி ஆசனங்கள் வெறுமையாகவே காட்சியளித்தன.
******************

எதேச்சதிகார அரசு
பாராளுமன்ற பெரும்பான்மை மூலம் நாட்டின் அனைத்து விடயங்களையும் மாற்றி அமைக்கக்கூடிய நிலை இன்று தோன்றியுள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைகளின் எண்ணிக்கையைக் கொண்டு அனைத்தையும் தீர்மானிப்பது கவலைக்குரிய விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
106 அரச நிறுவனங்களுக்கு 6ஆயிரத்து, 300 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனங்களை யாரிடம் பொறுப்புக் கொடுக்கப் போகிறார்கள் எனவும் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை உள்ளிட்ட நிறுவனங்கள் இமாலய நட்டத்தில் சென்றுக் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குருநாகலில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இக்கருத்துக்களை வெளியிட்டார்
******************

இராணுவ மயமாகும் கல்விக் கூடங்கள்
பல்கலைக்கழகங்களில் காவல்துறை காவலரண்களை அமைக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் காவல்துறை காவலரண் என்ற உயர் கல்வி அமைச்சரின் கூற்றுக்கு பதிலளிக்கும் வகையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஜ்சீவ பண்டார விடுத்துள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைகழகத்தில் உள் மோதல்களை தவிர்க்கும் பொருட்டு பல்கலைக்கழக பகுதியில் காவல்துறை காவலரண்களை அமைக்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் காவல்துறை என்ற பெயரில் குறித்த வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதற்கான முதல் கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் உயர் கல்வி அமைச்சர் கூறியுள்ளளார்.
இதற்கு முன்னர் 1984ம் ஆண்டு பல்கலைக்கழகங்களில் காவல்துறை காவலரண் ஏற்படுத்தப்பட்டு அதன்பின்னர் பல்கலைக்கழகத்தில் குற்றச் செயல்களை அரங்கேற்ற ஐதேக அரசு அப்போது செயற்பட்டது.
அதன்போது மாணவர்களின் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை போடப்பட்டது.
இரண்டு மாணவர்களுக்கு மேல் ஒன்றுகூட முடியாது, போஸ்ட்ர் கட்அவுட் காட்சிப்படுத்த முடியாது, அறிவுறுத்தல் மற்றும் கவிதைகூட எழுதி ஒட்ட முடியாத அளவிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிலர் கொலையும் செய்யப்பட்டனர்.
கடந்த காலங்களில் பல்கலைக்கழக விடயங்களில் அரசாங்கத்தின் தலையீட்டை உற்றுநோக்கும் போது 1984ம் ஆண்டு போன்ற திட்டத்தை செயற்படுத்த முனைவதாக தெரிகிறது.
மாணவர் செயற்பாடுகளை அழிக்கும் திட்டம் இதுவென்பதில் சந்தேகம் இல்லை.
எவ்வாறான கஸ்ட நிலை வந்தாலும் பல்கலைக்கழகத்திற்குள் அரசாங்கத்தின் காவல்துறை காவலரண்களை அமைக்க அனுமதி அளிக்க மாட்டோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
******************

சர்வதேச மயப்படும் போராட்டம்
கடந்த காலங்களில் தமிழர்களின் விடுதலைப்போராட்டம் வெறும் இந்தியாவிற்கும், கொழும்பிற்கும் இடையிலேயே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால் இப்போது புலம்பெயர்ந்து வாழும் இளையோர் அமைப்பினர் ஊடாகவும் மாணவர்கள் ஊடாகவும் போராட்டம் சர்வதேசமயமாக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கனடாவில் வாழுகின்ற தமிழ் மாணவர் ஒருவர் 17 வயதிலே வைத்தியர் பட்டம் பெற்றுள்ளதோடு தானாக புற்றுநோயை குணப்படுத்தக்கூடிய ஒரு கருவியை உருவாக்கியுள்ளார்.
இதைப்பார்த்த கனடா நாட்டின் புற்றுநோய் நிபுணர் ஒருவர் அதிர்ச்சியடைந்ததுடன் தான் கூட இந்த வயதுக்கு இவ்வாறான சாதனையை புரியவில்லை என்று கூறியதுடன் இந்த கருவியை வைத்து எதிர்காலத்தில் புற்றுநோயை குணப்படுத்தலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சாதனைகள் தமிழர்களை பெருமையடைய வைத்துள்ளது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு அம்பிலாந்துறை கலைமகள் வித்தியாலயத்தில் மாணவர் கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தினர் நடாத்திவரும் இரவு நேரவகுப்பு ஆரம்பிக்கப்பட்டதன் 105வது நாள், பரிசளிப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்தார்.
******************

Monday 14 November 2011

செய்திகள் 14/11


அச்சுறுத்தும் ஆணைக்குழு
பாதுகாப்பு அச்சுறுத்தல், இரகசியத்தன்மை ஆகிய அடிப்படைக் காரணங்களைக் கருத்திற்கொண்டே கணிசமானளவு மக்கள் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கூறவில்லை.
அந்த ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த விதவைப் பெண்ணுக்கு சி.ஐ.டி. அழைப்பாணை விடுத்துள்ளதன் மூலம் இந்த விடயம் உலகுக்கு அம்பலமாகியுள்ளது.
இதனை ஒருபோதும் ஏற்கமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அரசுத் தலைவரிடம் கையளிக்கப்படவுள்ள நிலையில், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதானது பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது என்றும் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த கல்முனையைச் சேர்ந்த 45 வயதான விதவைப் பெண்ணான இரத்தினம் பூங்கோதை என்பவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் தான் வழங்கிய சாட்சியம் தொடர்பாக விசாரிப்பதற்கு சி.ஐ.டியினர் தன்னை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர் என்ற விடயத்தை குறித்த பெண் நேற்று உறுதிப்படுத்தினார்.
ஒட்டுமொத்த உலகின் பார்வையும் இலங்கையின் பக்கம் திரும்பியுள்ள நிலையிலும், அறிக்கை வெளியாக இன்னும் சில நாள்களே எஞ்சியுள்ள நிலையிலும் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம் வழங்கியவர் தொடர்பான இரகசியம் கசிந்துள்ளதானது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களிடம் சாட்சியங்களைத் திரட்டும்போது இரகசியத்தன்மை 100 சதவீதம் பேணப்படும் என உறுதியளிக்கப்பட்டே நல்லிணக்க ஆணைக்குழு சாட்சியங்களைத் திரட்டியது.
ஆனால், இப்போது இரகசியம் எப்படி அம்பலமானது என்று அரசியல் ஆய்வாளர்கள் கேள்விக்கணைகளைத் தொடுக்கின்றனர்.
நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த பொதுமக்கள் தொடர்பான பெயர், அவர் தொடர்பான விவரம் கசிந்துள்ளதானது அறிக்கை மீதுள்ள நம்பகத்தன்மையை திசை திருப்பியுள்ளது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த இரத்தினம் பூங்கோதை என்பவருக்கு சி.ஐ.டியினர் விசாரணை அழைப்பாணை விடுத்துள்ளதானது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அதேவேளை, பல்வேறு கோணங்களில் சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் கருத்துக்கேட்டபோது நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கினால் இரகசியத்தன்மை பேணப்படாது என்றும் அதேபோன்று பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என மக்கள் கருதினர் எனத் தெரிவித்தார்.
இந்தக் காரணிகளைக் கருத்திற்கொண்டே கணிசமானோர் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் தங்களுக்கு நேர்ந்த அவலங்களைக் கூறுவதற்கு முன்வரவில்லை.
மக்கள் அன்று நினைத்த எதிர்வு கூறிய உண்மைகள், நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பெண்ணிடம் சி.ஐ.டியினர் விசாரணை மேற்கொள்ளவுள்ள விடயம் அம்பலப்படுத்தியுள்ளது. இதனை ஒருபோதும் ஏற்கமுடியாது எனவும் தெரிவித்தார்.
**************

சுவீகரித்ததை மீள ஒப்படைக்கத் தயார்?
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டால் சுவீகரிக்கப்பட்ட சொத்துக்களை மீளவும் உரிமையாளர்களிடம் வழங்கும் என பதில் எதிர்க்கட்சித் தலைவர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
அவசரமான சட்ட மூலமொன்றின் மூலம் அரசாங்கம் நட்டமடையும் சொத்துக்களை சுவீகரித்துக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சொத்துக்களை திடீரென சுவீகரித்து கொண்ட நடவடிக்கை ஓர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகவே கருதப்பட வேண்டும்.
அரசாங்கத்தின் இந்த எதேச்சாதிகார நடவடிக்கை குறித்து தற்போது வெளிநாட்டு விஜயம் செய்துள்ள கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டுத் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தி வருவதாக ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதன் பின்னர் இது தொடர்பில் கட்சி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
**************

அச்சுறுத்தப்படும் மாணவர்கள்
பல்கலைக்கழக வளாகங்களினுள் காவல்துறை காவலரண்கள் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பல்கலைக்கழக வளாகங்களினுள் கலகங்கள் ஏற்படுவதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறு காவலரணங்கள் அமைக்கப்பட உள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி .திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக காவல் நிலையங்கள் என்ற பெயரில் இந்த காவலரண்கள் இயங்கும்.
ஆண் பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
காவலரண்களை அமைப்பது குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக வளவில் மாணவர்களுக்கு இடையில் ஏற்படக் கூடிய மோதல் நிலைமைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு பொறுப்பை தனியார் பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கியமைக்கு மாணவர் அமைப்புக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் காவல்துறையினர் பல்கலைக்கழகங்களினுள் கடமையாற்றுவது தொடர்பில் மாணவர்கள் அமைப்புக்களும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் அதிருப்தி வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
**************

புரட்சிக்கு அழைப்பு
இலங்கையில் சோசலிஸ புரட்சிக்கு ஜே வி பியின் கிளர்ச்சியாளர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.
அத்துடன் கட்சியின் ஸ்தாபக தலைவர்களை போன்று உயிர்தியாகம் செய்யவும் கட்சி உறுப்பினர்கள் தயாராகவேண்டும் என்று கிளர்ச்சியாளர்கள் கோரியுள்ளனர்.
கார்த்திகை வீரர்கள் தினத்தை ஜே வி பி நேற்று இரண்டு பிரிவாக அனுஸ்டித்தது.
சோமவன்ச தலைமையிலான குழு தனியாகவும் கிளர்ச்சிக்குழு தனியாகவும் இந்த நிகழ்வை அனுஸ்டித்தன.
கிளர்ச்சிக்குழுவின் நிகழ்வில் உரையாற்றிய சோசலிஸ மாணவர் அமைப்பின் அமைப்பாளர் சமிந்திர கொஸ்வத்த, முதலாளித்துவ நடைமுறையை தோற்கடிக்க இன்று உண்மை புரட்சி அவசியம் என்று குறிப்பிட்டார்.
அதற்கான போராட்டத்திற்கு ஆயத்தம் மேற்கொள்ளப்படவேண்டும்.
இதன்போது 1971 மற்றும் 1989 ஆண்டுகளில் இடம்பெற்றது போன்ற உயிர்களை தியாகம் செய்வதற்கு தயாராகவேண்டும் என்றும் கொஸ்வத்த தெரிவித்தார்.
சோமவன்ச தலைமையிலான ஜே வி பியின் நடவடிக்கைகளையும் அவர் கண்டித்தார்.
அத்துடன் கடந்த காலங்களில் ஜே வி பி தலைவர்கள், படைத்தரப்பினருடன் மோதிய சம்பவங்ளையும் அவர் நினைவுகூர்ந்தார்.
**************

விபசார விடுதி முற்றுகை
யாழ். நகரப்பகுதியில் நடத்திச் செல்லப்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்றை முற்றுகையிட்ட காவல்துறையினர் அங்கிருந்த எட்டு ஆண்களையும், ஜந்து பெண்களையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.
யாழ். நகரப்பகுதியில் உள்ள சுமங்கலி என்ற தனியர் விடுதியில் நீண்ட நாட்களாக விபச்சார நடவடிக்கை நடைபெற்று வந்துள்ளது.
யாழ்.காவல்துறையினரின் வேட்டையில் இந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டு உரிமையாளர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடுதி தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் ஒருவரினால் நடத்தப்பட்டு வந்துள்ளதாக யாழ்.காவல் நிலையத் தலைமை காவல் அதிகாரி சமன் சிகேர தெரிவித்துள்ளார்.
விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று திங்கட்கிழமை யாழ்.நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
**************

சேவைப் புறக்கணிப்பு
தபால் மா அதிபர் எம்.கே.பி.திஸாநாயக்கவை உடனடியாக பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி தபால் சேவை தொழிற்சங்கங்களின் ஒன்றியம் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.
கொழும்பு மத்திய தபாலகத்தின் ஊழியர்கள் இன்று அதிகாலை முதல் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதாக ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் கே.எம்.சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் திஸாநாயக்க தபால் மா அதிபராகக் கடமை புரிவாராயின் அவர் தபால் சேவையாளர்கள் மீது அடாவடித்தனமாக நடந்து கொள்வார் என பண்டார சுட்டிக்காட்டினார்.
எனவே தபால் மா அதிபரை உடனடியாக பணிநீக்கம் செய்து தகுதியான ஒருவரை நியமிக்க வலியுறுத்தி மத்திய தபாலகத்திற்கு முன்னால் இன்று உண்ணாவிரதப் போராட்டத்ததை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
**************

தீர்ப்பை நினைத்து கவலை கொள்ளும் முன்னாள் நீதிபதி!
ஆழிப்பேரலை அனர்த்த காலத்தில் நடைபெற்ற ஹெல்பிங் அம்பாந்தோட்டை நிதி மோசடி வழக்கில் மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்காவிட்டால், அன்றே அவர் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பார்.
இதில் கேள்விக்கே இடமில்லை என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா கருத்து வெளியிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் தமக்கெதிராகச் சுமத்தப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் மனம் திறந்து கருத்துகளை கூறியுள்ளார்.
தனது பதவிக்காலத்தில் இடம்பெற்ற விடயங்களைப் பற்றி விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென்ற அழுத்தத்தை அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவே வழங்கி வருகிறார் என்று குற்றஞ்சாட்டிய முன்னாள் பிரதம நீதியரசர், நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைத்து தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியாதென்றும் சுட்டிக்காட்டினார்.
**************

தாக்குதலுக்குள்ளான ஜே.வி.பி
ஜே.வி.பியின் உறுப்பினர்கள் ஏழு பேர் மீது ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர் ஒருவர் தலைமையிலான குழு நடத்தியிருக்கும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல், அரசமைப்பில் குறிப்பிட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் மீதான தாக்குதலாகவே கருதவேண்டியுள்ளது என்று ஜே.வி.பி. விடுத்திருக்கும் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி உறுப்பினர்கள் தாக்கப்பட்டமை குறித்து கண்டனம் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கட்சிக்காக உயிர்நீத்த தோழர்களின் ஞாபகார்த்த விழாவுக்கான சுவரொட்டிகளை நேற்றுமுன்தினம் நொச்சியாகம நகரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த தமது கட்சி உறுப்பினர்கள் ஏழு பேர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
நொச்சியாகம பிரதேச சபையின் உப தலைவர் நளின் திஸாநாயக்க உட்பட்ட குழுவினர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
பொல்லுகளால் கடும் தாக்குதலுக்கு இலக்கான தோழர் கருணாரத்ன கடுமையான காயங்களுடன் நொச்சியாகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
இந்தத் தாக்குதல் குறித்து முறைப்பாடு செய்ய சென்றபோதும் நொச்சியாகம காவல்துறையினர் அதனை ஏற்றக்கொள்ளவில்லை.
இதனால் அநுராதபுரம் வைத்தியசாலை காவல்துறை பிரிவில் முறைப்பாட்டைச் செய்யவேண்டியேற்பட்டது.
மனிதச் சுதந்திரம், ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்டத்தின் நியாயாதிக்கத்தை முற்றுமுழுதாக ஒழித்துக்கட்டியிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ அரசு, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வீதியில் கொலை செய்து மோதிக்கொள்ளும் நிலைமையை உருவாக்கி, குற்றவாளிகளைப் பாதுகாக்கும் முன்மாதிரியை நாட்டின்முன் வைத்துள்ளது.
இதனால் உத்வேகமடைந்துள்ள பிரதேச ரீதியான அரசியல் காடையர்கள் இவ்வாறான வன்முறைகளைச் செய்வது ஒன்றும் புதுமையான விடயமல்ல.
இவ்வாறான சூழ்நிலையில், நாட்டின் சட்டத்தை மீறுதல், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை இல்லாமற் செய்யும் அரசின் முயற்சியை தோல்வியடையச் செய்யவேண்டியதன் அவசியத்தை தாம் வலியுறுத்த விரும்புவதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
**************