Sunday 31 July 2011

செய்திகள் 31/07


தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார்?
யாழ்ப்பாணத்தில் உதயன் செய்தித்தாளின் செய்தியாசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலை பல்வேறு அமைப்புகளும் கண்டித்துள்ளன.
செய்தியாளர்கள் மீதான வன்முறை அலையை மீண்டும் ஆரம்பிக்கும் விதமாக இந்த சம்பவம் அமைந்துவிடலாம் என்று சுளுகுஎன்ற எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது.
அதிர்ச்சியளிக்கும் இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் துரிதமாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியிருக்கின்றது.
யாழ் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்தும் மயக்க நிலையில் உள்ள குகநாதனின் உடல் நிலை குறித்து 36 மணித்தியாலங்கள் கழிந்த பின்பே தெரிவிக்க முடியும் என வைத்தியர்கள் கூறியிருப்பதாக உதயன் செய்தித்தாளின் நிர்வாகப் பணிப்பாளராகிய ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்ற போதிலும் இதுவரையில் எவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை எனவும் சரவணபவன் கூறினார்.
மூத்த செய்தியாளராகிய குகநாதன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் கண்டித்திருக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரம் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருவதையே குகநாதன் மீதான இந்தத் தாக்குதல் எடுத்துக் காட்டுகின்றது என தெரிவித்துள்ள இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டு பிடித்து நீதியின் முன் நிறுத்துவதற்கு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருக்கின்றது.
இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் கொக்காவில் இராணுவ முகாமில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு ஒன்றை ஆரம்பித்து வைப்பதற்காக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அங்கு சென்றிருந்தார்.
குகநாதன் மீதான தாக்குதல் குறித்து கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டபோது, இந்த ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக்கொண்டு செய்தியாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன என்று கூறிவிட முடியாது என்று ரம்புக்வெல்ல பதிலளித்தார்.
எனினும் இத்தகைய சம்பவங்கள் குறித்து தாங்கள் அக்கறை செலுத்த வேண்டும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றும் ரம்புக்வெல்ல கூறினார்.
இதனை ஒரு சாதாரண சம்பவம் எனக் கூறி, அதனை புறந்தள்ளி விடுவதற்கு தான் முயற்சிக்கவில்லை என்றும் இத்தகைய தாக்குதல்கள் தொடர்பில் பல்வேறு கோணங்களில் ஆராயப்பட வேண்டிய தேவை இருப்பதாகவும் இலங்கை ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
எனினும் இந்தத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.
************
தமிழர்களின் கொலைக்கு நியாயம் கிடைக்குமா?
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடரில் சிறிலங்கா அதிபர் நியமித்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று சிறிலங்கா அரசுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவினது முறைப்படியான இந்த இராஜதந்திர நிலைப்பாடு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஊடாக கடந்தமாதம் கையளிக்கப்பட்டது.
இதற்கு சிறிலங்கா இன்னமும் அதிகாரபூர்வமாக பதில் எதையும் வெளியிடவில்லை.
ஆனால், பெரும்பாலும் அமெரிக்காவின் இந்த வேண்டுகோளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிக்கும் என்று தனது பெயரை வெளியிட விரும்பாத சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இந்தக் கோரிக்கைக்கு தாம் இணங்கினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தொடர்ச்சியான கண்காணிப்பில் இருக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சாத்தியங்கள் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
************
சீனாவுக்கு மீண்டும் மகிந்த!
அரசுமுறைப் பயணமாக மகிந்த ராஜபக்ச அடுத்த மாதம் சீனாவுக்குச் செல்லவுள்ள போதும் அதற்கான நாள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளன.
கடைசியாக கடந்த நவம்பர் மாதம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
பத்து மாதங்களுக்குள் இரண்டாவது பயணத்தை அவர் சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ளார்.
2007ம் ஆண்டுக்குப் பின்னர் மகிந்த ராஜபக்ச மூன்று தடவைகள் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிலங்காவின் பாரிய அபிவிருத்தித் திட்டங்களில் சீனா முதலீடுகளைச் செய்துள்ளதுடன், சிறிலங்காவுக்கு கடன் வழங்கும் நாடுகளில் முதன்மை இடத்தையும் சீனாவே வகித்து வருகிறது.
************
ஈரானிடம் உதவி கோரும் பசில்!
இலங்கை உட்பட பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் நாடுகளை அழிக்க மேற்குலக நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை தடுத்து நிறுத்த ஈரான் முன்வர வேண்டும் என சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஈரான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட காங்கேயனோடை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 70 வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பசில் ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.
ஈரானிய இஸ்லாமிய குடியரசின் நிதியுதவி மூலம் இலங்கையில் பாரிய வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிதியுதவி மூலம் இலங்கையில் பாரிய நீர் விநியோக திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 1000 கிராமங்களுக்கான மின்சாரத்தை பெற்றுக் கொடுக்கும் பாரிய திட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையின் அபிவிருத்திக்கு மட்டுமல்லாது மனிதாபிமான அடிப்படையிலும் பாரிய உதவிகளை ஈரானிய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
எனவே இவற்றைக் கொண்டு அனைவரும் ஒன்று சேர்ந்து இக்கிராமத்தை கட்டியெழுப்ப வேண்டும் என அவர் தனதுரையில் தெரிவித்தார்.
************
தமிழரிடம் பிடுங்கி சிங்களவரிடம் தாரை வார்ப்பு!
யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்களார்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்குமானால் அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கையின் தேர்தல்கள் ஆணையாளர், மஹிந்த தேசப்பிரிய உறுதிமொழி வழங்கியுள்ளார்.
2010 ம் ஆண்டின் வாக்காளர் கணக்கெடுப்பின்படி 320 ஆயிரம் வாக்காளர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
1989 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலேயே கடந்த அரசுத் தலைவர் தேர்தலும் பொதுத்தேர்தலும் நடத்தப்பட்டன.
இந்தநிலையில் அரசியல் அமைப்பின்படியே தாம் செயற்பட்டதாக மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.
1989 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகினர்
அது, 2000 ம் ஆண்டு 10 ஆகவும் 2004 ல் 9 ஆகவும் குறைவடைந்தன.
அதுபோல எதிர்வரும் காலங்களில் வாக்காளர் எண்ணிக்கையைப் பொறுத்தே பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
************
உண்மையான சாட்சிகளே - சனல்-4!
சனல் 4 இறுதியாக வெளியிட்ட காணொளியில் தோன்றிய சாட்சியாளாகள் நம்பகமான தகவல்களையே வழங்கியுள்ளதாக சனல்4 ஊடகத்தின் ஊடகவியலாளர் ஜொனதன் மில்லர் தெரிவித்துள்ளார்.
உறுதிப்படுத்தாமல் சாட்சியங்கள் தொடர்பான தரவுகள் ஒளிபரப்புச் செய்யப்படமாட்டாது.
கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் செய்தித்தாளுக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு தரப்பினரின் குற்றச்சாட்டுக்களை எவ்வித உறுதிப்படுத்தலுமின்றி வெறுமனே ஒளிபரப்புச் செய்வதில்லை.
சாட்சியாளர்கள் தொடர்பில் தாமும் தமது செய்தி ஆசிரியர்களும் பூரண திருப்தி கொண்டுள்ளதாக மில்லர் குறிப்பிட்டுள்ளார்.
சாட்சியாளர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்ளப்பட்டது என்பதனை கூற முடியாது, அவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக் கூடும்.
சாட்சியாளர்களின் குரல்கள் ஒளிபரப்புச் செய்யப்படவில்லை எனவும் பின்னணி பேசியவர்களே அவர்களது சாட்சியங்களுக்கு குரல் கொடுத்துள்ளதாகவும் மில்லர் தெரிவித்துள்ளார்.
எல்லா வழிகளையும் பயன்படுத்தி போராட்டத்தை முடிவுறுத்துமாறு சவேந்திர சில்வா 58 படையணிக்கு கட்டளையிட்டதாக சாட்சியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தவிற்கு அமைய சவேந்திர சில்வா விசேட கூட்டமொன்றை கூட்டி படையினருக்கு இந்த அறிவிப்பினை விடுத்ததாக சாட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சனல்4 ஊடகத்திற்கு எதிராக பிரிட்டன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், ஊடகங்களின் சுதந்திரத்தில் தலையீடு செய்யப் போவதில்லை என பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
************
காலம் கடந்த ஞானமா? தற்காத்துக் கொள்ளும் தந்திரமா?
போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை கவனமாக ஆராயவேண்டும் என்று இந்திய வெளியுறவு செயலாளர் நிரூபமா ராவ் கோரியுள்ளார்.
இலங்கையின் அரச பத்திரிகையான சண்டே ஒப்சேவர் இந்த செய்தியை பிரசுரித்துள்ளது.
இலங்கை தம்மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் சம்பவங்கள் மற்றும் சனல் 4 காணொளியின் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இன்றுடன் நிரூபமா ராவ், இந்திய வெளியுறவு செயலாளர் பதவியில் இருந்து விலகி, இந்தியாவின் அமெரிக்காவுக்கான தூதுவராக பதவியேற்கவுள்ளார்.
இந்தநிலையில் இலங்கை சென்றிருக்கும் அவரிடம் சனல் 4 காணொளி தொடர்பாக கேட்டபோது, இந்த சம்பவங்கள் போர் வலயத்துக்குள் இடம்பெற்றுள்ளன.
எனினும் அவற்றை நியாயப்படுத்த முடியாது. இந்தநிலையில் இலங்கை கவனமாக அது தொடர்பில் ஆராயவேண்டும் என்று நிரூபமா கூறியுள்ளார்.
இந்தவிடயத்தில் மூன்றாம் தரப்பின் தலையீடு அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
************
அரசியலான தஞ்சக் கோரிக்கை!
அவுஸ்திரேலிய கடல் படையினரால் கடந்த ஞாயிற்றுக் கிழமை இடைமறித்து பிடிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் 54 பேர் விரைவில் மலேசியாவிடம் கையளிக்கப்பட உள்ளார்கள்.
அவுஸ்திரேலியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் கடந்த 25 ஆம் திகதி அகதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
புதிதாக வருகின்ற முதல் 800 அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களும் மலேசியாவிடம் கையளிக்கப்படுவார்கள் என்பது இவ்வொப்பந்தத்தின் அம்சமாகும்.
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் முதலில் வந்த சட்டவிரோத பயணிகள் குழு இதுவே ஆகும்.
இக்குழுவினர் விரைவில் மலேசியாவிடம் கையளிக்கப்படுவார்கள் என்று அவுஸ்திரேலிய உள்நாட்டு அமைச்சு அறிக்கை மூலம் அறிவித்து உள்ளது.
************



Saturday 30 July 2011

செய்திகள் 30/07


பிரித்தானியா பதிலடி!
பொறுப்பற்ற வீடியோவை ஒளிபரப்பிய சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ கூறியமைக்கு பிரித்தானிய அரசாங்கம் உடனடியாக கருத்து வெளியிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகரலாயம், ஊடகங்களின் உள்ளடக்கங்களை பிரித்தானிய அரசாங்கம் கட்டுப்படுத்துவதில்லை எனத் தெரிவித்துள்ளது.
சனல் 4 என்பது சுயாதீனமான ஒரு ஒளிபரப்பாளராகும்.
ஒவ்வொரு ஜனநாயகத்திலும் சுதந்திர ஊடகம் முக்கியமானது என பிரிட்டன் நம்புகிறது.
ஊடக நிறுவனங்கள் பொருத்தமான ஒழுக்க மற்றும் சட்ட ரீதியான தராதரங்களை பேணுவதை உறுதிப்படுத்துவதற்கான வலுவான பொறிமுறையை பிரிட்டன் கொண்டுள்ளது.
ஆனால் ஊடகங்களின் உள்ளடக்கங்களை அரசாங்கம் கட்டுப்படுத்துவதில்லை என பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சுயாதீன ஒழுங்குபடுத்துனரான ழுகஉழஅ, சுயாதீன பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு மற்றும் வழக்கமான அவதூறு தொடர்பான சட்டங்கள் என்பன ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் பிரித்தானிய பொறிமுறையில் அடங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் மூலம் பிரித்தானியா ஒருபோதும் தமது நாட்டு ஊடகங்களை தாம் கட்டுப்படுத்துவது இல்லை என்பதனை இலங்கைக்கு வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.
இதனை இலங்கையும் பின்பற்றலாமே என்ற மறைமுகக் கருத்தையும் இது உணர்த்தி நிற்கிறது.
கோத்தபாயவின் கருத்துக்கு பிரித்தானிய அரசு கொடுத்த பதிலடி இதுவாகும்.
********************
புலம்பும் சவேந்திர சில்வா
தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதன் பொறுப்பை சனல் 4 ஊடகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தமது பயணங்கள் தொடர்பில் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டனின் சனல் 4 ஊடகவியலாளர்கள் திடீரென தம்மிடம் நேர்காணல் ஒன்றை நடத்தியதாகவும், இதன் மூலம் புலிகள் தரவுகளை திரட்டி வருவது புலனாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
சனல் 4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட காணொளி உண்மைக்குப் புறம்பானது, அதில் தோன்றியவர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
45 நிமிடங்கள் நேர் காணல் நடத்திய போதிலும், இரண்டு நிமிடங்கள் மட்டுமே ஒளிபரப்புச் செய்யப்பட்டது எனவும் முடியுமென்றால் நேர் காணலை முழுமையாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை வழி நடாத்தும் ருத்ரகுமாரன், தனது வாசஸ்தலத்திலிருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் வாழ்ந்து வருகின்றார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
********************
பாதுகாப்பு அச்சுறுத்தல்
சிறீலங்காவில் உள்ள ஜக்கியநாடுகள் சபை அலுவலகத்திற்கும் அதன் துணைஅலுவலகங்களுக்கும் மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சிறீலங்காவிற்கான ஜ.நாபிரதிநிதி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஜ.நா அலுவலக அதிகாரியால் அதன் தலைமை அலுவலகத்திற்கு இந்ததகவல் விடுக்கப்பட்டுள்ளது.
மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் ஜ.நா அமைப்பிற்கு ஒத்துழைப்பு வழற்குமாறு சிறீலங்கா அரசை ஜ.நா தலைமையகம் கேட்டுக்கொள்ளவேண்டும் என முறையிடப்பட்டுள்ளது.
ஜ.நா நிபுணர்குழு அறிக்கை மற்றும் சனல்-4 தொலைக்காட்சியின் புதிய காணொளி வெளியிட்டுள்ளதை தொடர்ந்து சிறீலங்காவில் உள்ள ஜ.நா அலுவலகங்களுக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
********************
உலக உணவுத் திட்ட உதவி
வடக்கு, கிழக்கு பகுதிகளில் தாய், சேய் நலன் மற்றும் போஷாக்குணவு வழங்கல் என்பவற்றுக்காக உலக உணவுத் திட்டம் 4 கோடியே 86 இலட்சத்து 24,632 அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளது.
வடக்கில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ். மாவட்டங்களிலும் கிழக்கில் தெரிவுசெய்யப்பட்ட சில பகுதிகளிலும் நீண்டகால, நிவாரண அடிப்படையிலான வேலைத் திட்டங்களுக்கென வழங்கப்படும் உலக உணவு திட்டத்தின் நிதி உதவியின் ஊடாக 3 லட்சத்து, 71ஆயிரம் பேர் நன்மையடையவுள்ளனர்.
அவசர அனர்த்த நிவாரண செயற்பாடுகளுக்கென உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்படும் நிதியின் ஊடாக கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும், வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களில் சுமார் 5 இலட்சம் பேர் நன்மையடையவுள்ளனர்.
தாய், சேய் நலன் மற்றும் போஷாக்குணவு திட்டம், தெரிவு செய்யப்பட்ட ஆரம்ப பாடசாலை மாணவர்களின் சத்துணவு வழங்குதல், உணவுக்கான வேலை திட்டத்தை நடைமுறைப்படுத்தல், முகாம்களில் தங்கியுள்ள இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உலர் உணவு பெற்றுக் கொடுத்தல் போன்ற திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
********************
விசாரணை நடத்தக் கோரிக்கை
காணாமல் போய் 17 மாதங்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட மனித உரிமை நடவடிக்கையாளரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
பட்டானி ராசிக் என்ற புத்தளத்தை தளமாகக்கொண்ட இந்த மனித உரிமை நடவடிக்கையாளர், கடந்த 2010 ஆம் ஆண்டு பொலநறுவையில் வைத்து காணாமல் போனார்.
இந்தநிலையில் அவர் மட்டக்களப்பு ஓட்டமாவடியில் உள்ள வீடு ஒன்றின் புதைக்குழியில் இருந்து நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனையடுத்து, இது தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரத்தின் பேச்சாளர் ரவீனா சம்தாசனி, இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் அவசியமானது. ஏற்கனவே இவ்வாறான பல காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில், இன்னமும் உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று ரவீனா வலியுறுத்தினார்.
குறித்த மனித உரிமைகள் நடவடிக்கையாளரின் கொலை தொடர்பிலான சந்தேகநபர்கள், அரசியல் செல்வாக்கு காரணமாக கடந்த ஒரு வருடத்துக்கு பின்னர் கடந்த சில வாரங்களுக்கு முன்பே கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த கொலையின் பிரதான சந்தேகநபர், இலங்கையின் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை முன்னாள் அமைச்சரின் நெருங்கிய நண்பர் என்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இந்தக்கொலை விசாரணையில் காட்டிய முனைப்பை காவல்துறையினர், ஏனைய காணாமல் போனோர் விடயத்திலும் காட்டவேண்டும் என்று மன்னிப்பு சபை கேட்டுள்ளது.
இலங்கையில் தற்போது வரையில் 5ஆயிரத்து 653 காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைகள் தேங்கியுள்ளன.
********************
காவல்துறையின் தடுப்பில் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்
காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார்.
போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த சன்ன இசாகர என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
உயிரிழந்த சந்தேக நபரின் உறவினர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் சம்பவம் குறித்து முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன்படி சந்தேக நபரின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
எனினும், மாரடைப்பினால் சந்தேக நபர் இயற்கை மரணமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
********************
தேர்தலை நடத்தக் கோரி வழக்கு
கொழும்பு மாநகர சபைத் தேர்தலை உடன் நடத்தும்படி தேர்தல்கள் திணைக்களத்திற்கு உத்தரவிடும்படி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை செப்டெம்பர் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆர்வலரான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவும் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் இருவரும் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
கொழும்பு மாநகர சபைக்காக இறுதியாக நடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களின் பதவிக்காலம் ஜூன் 2, 2006 ஆம் திகதி ஆரம்பமாகியது.
மாநகர சபை கட்டளைச்சட்டம், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கட்டளைச்சட்டம் என்பவற்றுக்கு அமைய கொழும்பு மாநகர சபைக்கான தேர்தல் ஜூன் 2 2010 ஆம் திகதிக்கு முன் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என மனுதாரர் தெரிவித்துள்ளார்.
********************
கடத்தப்பட்ட சிறுமி மீட்பு
சாவகச்சேரி நுணாவில் மேற்குப் பகுதியில் பத்து தினங்களுக்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 15 வயதுச் சிறுமியை காவல்துறையினர் மீட்டதுடன் அவரைக் கடத்திச் சென்ற நபரையும் கைது செய்துள்ளனர்.
இந்தச் சிறுமி காணாமற்போனது தொடர்பாக அவரது பெற்றோரால் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து மேற்கொண்ட முயற்சியின் பயனாக பத்து தினங்களின் பின்னர் அவர் மீட்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.
நுணாவில் மேற்கைச் சேர்ந்த நபரையும் மீட்கப்பட்ட சிறுமியையும் காவல்துறையினர் நேற்றுமுன் தினம் சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிவான் மா. கணேசராஜா இந்த நபரை ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் சிறுமியை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பணித்தார்.
********************



Friday 29 July 2011

செய்திகள் 29/07


தூங்கிக் கிடக்கும் மூன்?
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்குற்றங்கள் குறித்து விசாரணை செய்வது இலங்கை அரசாங்கத்தின் கடமை எனவும் அதனை கண்காணிப்பது ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிலுள்ள சனல் 4 தொலைக்காட்சி நேற்று முன்தினம் இரவு வெளியிட்ட இலங்கையின் போர்குற்ற ஆதார காணொளி குறித்து நேற்று ஐநா அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கேள்வி எழுப்பப்பட்டது.
சனல் 4 காணொளி குறித்து ஐநா நடவடிக்கை எடுக்குமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஐநா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்க்கி, சனல் 4 கூறிய விடயங்கள் நிபுணர் குழு அறிக்கையிலும் உள்ளடக்கப்பட்டுள்ளதென தெரிவித்தார்.
நடவடிக்கை எடுப்பது குறித்த விடயங்களை ஐக்கிய நாடுகளின் நிர்வாக பிரிவுகளிடம் ஒப்படைப்பது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக மார்டின் நெசர்க்கி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் கொலைக்களங்கள் காணொளியை, ஐநா பொதுச்செயலாளரின் சிரேஷ்ட ஆலோசகர்கள் பார்த்துள்ள நிலையில், பொதுச் செயலாளர் பார்த்தாரா இல்லையா என்பது தொடர்பில் தன்னால் கூறமுடியாது என மார்ட்டின் கூறியுள்ளார்.
**************
தீர்மானம் எப்போது?
மனிதாபிமான உதவிகள் தவிர்ந்த இலங்கைக்கான ஏனைய உதவிகளை நிறுத்திக் கொள்வது தொடர்பில் இன்னும் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான உதவிகளை ரத்து செய்யும் யோசனைத் திட்டம் தொடர்பில் சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்படும் வரையில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படமாட்டாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
**************
தீர்வுக்கு அழுத்தம் கொடுத்த தமிழர்கள்
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்களின் பாரம்பரிய தாயகத்தின் இறைமை ஆட்சி,அதிகாரம் தங்களிடமே இருக்க வேண்டும் என்பதை கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தெட்டத்தெளிவாக இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெரிவித்துள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை, சேருவில பிரதேச சபை ஆகியவற்றுக்கான தேர்தல்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் ஏனைய வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று கடந்த புதன்கிழமை மாலை சம்பந்தனின் வாசஸ்தலத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப்பொதுச் செயலாளரும் மாவட்டக் கிளையின் தலைவருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
அப்போது உரையாற்றிய சம்பந்தன், தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய அரசியல் தீர்வு ஒன்றை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் எடுத்துள்ளது.
எதிர்வரும் வாரங்கள், மாதங்களில் இது விடயம் முக்கியமானதாக அமையப்போகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கைப் பொறுத்த வரை இறைமைக்கு மதிப்புக்கொடுத்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு இருக்க வேண்டும் எனவும், நாட்டின் சமமான பிரஜைகளாக பாதுகாப்புடன் கௌரவமாக வாழ வழி செய்யப்பட வேண்டும் என்பதை தெட்டத்தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
எப்போதுமே இல்லாத வகையில் சர்வதேச சமூகம், ஐ.நா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய யூனியன் ஆகியன இலங்கை பல்லின நாடு என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அங்கு தமிழ் மக்கள் சம உரிமை பெற்று வாழ்வதற்கு உரித்துடையவர்கள், அவர்கள் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறியுள்ளன.
பாராளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை காண வேண்டும் என்று சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்த காரணமாகத் தான் அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தை ஆரம்பமானது.
அரசாங்கமும் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை மூலம் காணப்படும் தீர்வு எதுவாக இருப்பினும் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாரென்று பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
ஏனைய அரசியல் கட்சிகளும் இந்த நிலைப்பாட்டையே எடுக்கப்போகின்றார்கள்.
தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை சர்வதேச சமூகம் பரிபூரணமாக ஏற்றுக் கொள்கிறது.
தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும்; இல்லாவிடில் மீண்டும் ஒரு நெருக்கடி ஏற்படக் கூடும் என்று சர்வதேச சமூகம் எண்ணுகிறது.
தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய அரசியல் தீர்வு உருவாகவேண்டும்; உருவாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
**************
கைது செய்யப்பட்ட சர்வதேச ஊடகவியலாளர்கள்
யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நெதர்லாந்து ஊடகவியலாளர்கள் இருவரும் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சனல் 4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட இலங்கையின் கொலைக்களங்கள் காணொளி தொடர்பாக சாட்சியங்களை திரட்டும் நேக்கில் இவர்கள் இருவரும் நெதர்லாந்திலிருந்து வந்திருந்தனர்.
இவர்கள் நெதர்லாந்தின் வானொலி ஊடகவியலாளர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலாப்பயணிகள் போல் இவ் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் யாழ்பாணத்தில் சிற்றூண்டிச்சாலை ஒன்றிலிருந்த முன்னாள் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் சிலருடன் ரகசியமான முறையில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம் சுற்றுலாப்பயணிகள் என ஆரம்பத்தில் காவல்துறையினரிடம் கூறிய போதும் பின்பு விசாரணைகளின் போது அரசல்லாத ஒரு இயக்கத்தினால் தம்மை வடக்கிற்கு சென்று தகவல் திரட்டும்படி அனுப்பியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
**************
தீர்வுக் குழுவின் நிலை என்ன?
அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் அடுத்தவாரம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் பின்னரே இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை தயாரிப்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இடம்பெறும் பேச்சுவார்த்தையின்போது பாராளுமன்ற தெவுக்குழு தொடர்பில் அந்தக் கட்சி முன்வைக்கும் யோசனை குறித்து ஆழமான முறையில் கவனத்திற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை தயாரிப்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தற்போதைய நிலைமை குறித்து விபரிக்கையிலேயே ஆளும் கட்சியின் பிரதம கொறடா இவ்வாறு கூறினார்.
இதேவேளை பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எடுக்கின்ற தீர்மானத்திலேயே தமது கட்சியின் தீர்மானம் தங்கியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.
இந்நிலையிலேயே தெரிவுக்குழு தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்பின் யோசனைகள் பெரிதும் முக்கியத்துவம் பெறுகின்றன.
எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பின் பின்னர் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
**************
நிலை தடுமாறும் அரசு!
வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்ற சகல உள்ளூராட்சி சபைகளுக்கும் தேவையான நிதி உட்பட சகல வசதி வாய்ப்புக்களையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும் என அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதி வழங்கப்படும்.
அபிவிருத்தி செயற்பாடுகளை இனி அவர்களே முன்னெடுக்க முடியும். எனினும், தேவையான நிதியையும் வசதிகளையும் அரசு செய்து கொடுக்கும். இது அரசின் கடமையுமாகும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிலையில் எதிர்வரும் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசுக்கும், கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் உள்ளூராட்சி சபைகளின் விடயங்களும் முக்கிய இடம்பெறும் என்றும் தெரியவருகிறது.
**************
பதவி பறிபோகும் நிலையிலும் நண்பனைக் காக்க முயற்சி
இலண்டன் வந்துள்ள எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நேற்றைய தினம் பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்ஸை சந்தித்துள்ளார்.
இதன் போது இலங்கையின் நடப்பு விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் வடக்கில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, 13ஆம் திருத்தச் சட்டம் மற்றும் அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பில், அரசாங்கம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இடையில் இடம்பெறுகின்ற பேச்சவார்த்தைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
**************
நல்லிணக்க ஆணைக்குழுவின் நிலைப்பாடு?
இலங்கையில் நடந்ததாக கூறப்படும் யுத்த குற்றம் தொடர்பில் சனல் 4 அலைவரிசையின் மூன்றாவது வீடியோ அண்மையில் வெளியிடப்பட்டுள்ள நிலைமையில், பலரும் நினைப்பது போல சனல் 4 இன் வீடியோக்களுக்கு தனது அறிக்கையில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படமாட்டாது என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு கூறியுள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வந்த பின்னர் யுத்தக் குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து தீர்மானிக்கும் என அரசாங்கம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமது அறிக்கை, வழங்கப்பட்ட ஆணைக்குள் அமையும் விடயங்களில்தான் முக்கிய கவனத்தை செலுத்தும். தமது அறிக்கை இந்த பிரச்சினைக்குரிய வீடியோ பற்றிய கருத்துக்களை கூறினாலும் அதற்கு முக்கியத்துவம் வழங்க மாட்டாது என ஆணைக்குழு கூறியுள்ளது.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, சனல் 4 அலைவரிசையின் முதலாவது வீடியோவை ஆராய்வதற்கு கணினி நிபுணரான சத்துர டி சில்வாவின் சேவையை பெற்றிருந்தது.
இரண்டாவது வீடியோவை ஆணைக்குழு ஆராயவுள்ளது. மூன்றாவது வீடியோவை ஆணைக்குழு இன்னும் பார்வையிடவில்லை.
இதேவேளை, ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை, யுத்த குற்றம் தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கை தொடர்ந்தும் தாமதிக்குமாயின், அதன் மீது சர்வதேச சமுதாயம் நடவடிக்கை எடுக்கும் நோக்கில் உள்ளது என கூறியுள்ளார்.
**************




Thursday 28 July 2011

செய்திகள் 28/07


யார் குற்றவாளி!
சிறிலங்கா அதிபரால் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டு சரணடையும் தமிழ்ப் போராளித் தலைவர்களின் கதையை முடித்து விடுமாறு சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, பிரிகேடியர் சவீந்திர சில்வாவுக்குப் பணித்திருந்ததாக சனல்-4 தொலைகாட்சியிடம் சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.
அதேவேளை, 58வது டிவிசனில் பணியாற்றிய மற்றொரு சிறிலங்கா இராணுவ அதிகாரி, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வேலையை முடித்து விடுமாறு பிரிகேடியர் சவீந்திர சில்வாவுக்கு கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டிருந்ததாக சாட்சியம் அளித்துள்ளார்.
இது படையினர் கொலைகளைச் செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சனல்-4 தொலைக்காட்சி சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான மேலும் இரண்டு புதிய சாட்சிகளின் செவ்விகளை நேற்று வெளியிட்டுள்ளது.
இதில் இறுதிக்கட்டத் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தின் 58வது டிவிசன் படைப்பிரிவில் பங்கெடுத்த பெர்னான்டோ என்ற படை அதிகாரி, சிறிலங்கா படையினரால் பெண்களும் சிறுவர்களும் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை விபரித்துள்ளார்.
அவர் சனல்-4 தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியில் அரசபடையினரால் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் சிறிய ஆயுதங்களால் இலக்கு வைக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
தான் வெளியில் இருந்து பார்க்கும் போது அவர்களை வெறுமனே கொடூரமான விலங்குகள் என்று தான் நினைப்பதாகவும் அவர்களுடைய இதயங்களில் மனித உணர்வு இல்லை. விலங்குகள் போன்று தான் உணர்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் பொதுமக்கள் மீது கண்டபடி சுட்டார்கள். பொதுமக்களைக் குத்தினார்கள். அவர்களின் நாக்குகளை அறுத்தார்கள். பெண்களின் மார்பகங்களை வெட்டினார்கள்.
இவற்றையெல்லாம் தான் தனது கண்களால் பார்த்ததாகவும் சிறுவர்கள் இறந்து கிடந்ததை கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பெருமளவு சிறுவர்கள் இறந்து கிடந்தார்கள். அவர்கள் அப்பாவிகள். பெருமளவு முதியவர்களும் கொல்லப்பட்டுக் கிடந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.
நீரேரியைக் கடந்து வந்தபோது பெண்கள், சிறுவர்கள் என்று பொதுமக்கள் மீது படையினர் சுட்டார்கள்.
அவர்கள் புலிப்போராளிகள் அல்ல. சாதாரண பொதுமக்கள். சாதாரண குடிமக்கள் கொல்லப்பட்டதை தனது கண்களால் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தாயும் மூன்று குழந்தைகளுமாக ஒரு சிறிய குடும்பம் தப்பிச் சென்று கொண்டிருந்ததை தான் கண்டதாகவும், அவர்களில் ஒரு சிறுவனின் காலில் சூடுபட்டு கிழே விழுந்தார்.
அந்தக் குழந்தையை தான் கைகளால் தூக்கியபோது தாயார் கதறி அழுதார் எனவும் அந்தத் துன்பத்தின் மத்தியிலும் தன்னை நன்றியுணர்வோடு பார்த்தனர் எனவும் குறிப்பிட்டார்.
ஒரு நாள் ஆறு படையினர் தமிழ்ப் பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்வதை தனது கண்களால் கண்டதாகவும், தான் ஒரு நடைப்பிணம் போலவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு தமிழ் பெண்ணை வன்புணர்வு செய்ய வேண்டுமானால் அவளை அவர்களால் அடிக்க முடியும். அவளது பெற்றோர் அதைத் தடுக்க முனைந்தால் அவர்களை அடிக்கவோ கொல்லவோ முடியும். அங்கு அவர்களின் ஆட்சி தான் இருந்தது.
போர் முனையில் இருந்த படையினரின் இதயங்கள் கற்களாகிப் போயிருந்தன.
இரத்தம், கொலைகள், மரணம் என்று பார்த்துப் பார்த்து அவர்கள் மனிதஉணர்வுகளை இழந்து விட்டார்கள்.
அவர்களை தன்னால் காட்டேறிகள் என்று தான் கூற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
தலை மற்றும் பிற உடற்பாகங்கள் இல்லாத பெண்களின் உடல்களை தான் கண்டதாகவும், இறந்து கிடந்த தாய் மற்றும் குழந்தையின் சடலங்களையும் பார்த்தேன், ஆனால் குழுந்தையின் தலை இருக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
போரின் இறுதிக் கட்டத்தில் பெரும் எண்ணிக்கையான சிறுவர்களும், பெண்களும், ஆண்களும் கொல்லப்பட்டனர்.
புதுமாத்தளனில் மட்டும் 1500இற்கும் அதிகமான பொதுமக்கள் இறந்து கிடந்ததை தான் கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
புதுமாத்தளனில் 1500 சடலங்களை தான் கண்டதாகவும், ஆனால் அதுபோல 50,000 இற்கும் அதிகமான மக்களுக்கு நடந்திருக்கும் என்று தான் நினைப்பதாகவும் கூறியுள்ளார்.
**********************
பாடங்களை கற்றுக் கொள்ளுமா?
தென்னாபிரிக்காவிடமிருந்து மட்டுமே இலங்கை பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியுமென்று சர்வதேச நெருக்கடிக் குழுவின் தலைவரான லூயிஸ் ஆர்பர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவ தென்னாபிரிக்காவால் செய்யக்கூடியது என்ன என்ற தலைப்பில் லூயிஸ் ஆர்பரின் கருத்தை பிரிட்டனின் த சன்டே டைம்ஸ் பத்திரிகை கடந்த 24 ஆம் திகதி பிரசுரித்திருந்தது.
கடந்த கால உண்மையை வெளியிடுவதற்கான உறுதியான முயற்சி இல்லாமல் பல தசாப்த கால உள்நாட்டு மோதலை வெற்றிகொள்ள ஆரம்பிக்க முடியாது என்பதுடன், நல்லிணக்கத்தையும் அர்ப்பணிப்புடன் முன்நகர்த்த இயலாது என்பதை எந்தவொரு நாடொன்றிலும் பார்க்க தென்னாபிரிக்கா நன்கறிந்துள்ளது.
அந்தப் பாடத்தை இலங்கை கற்றுக்கொள்ள முடியும்.
அதிகளவு ஜனநாயகம் மற்றும் சமத்துவமான சமூகம் என்பனவற்றை நோக்கியதான வலி நிறைந்த பாதையில் மெதுவாக பயணிப்பதிலும் பார்க்க அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் யுத்தத்தின் பின்னரான கொள்கைகள் நாட்டின் அரசியல் நிறுவனங்களை பாதிக்கச் செய்வதாகவும் இனப் பிளவுகளை ஆழமாக்குவதாகவும் காணப்படுகின்றன.
நல்லிணக்கத்தை நோக்கிய முன்னேற்றமானது எப்போதுமே நெருக்கடியானதாக இருக்கப்போகின்றது.
தசாப்த காலங்கள் நீடித்த அரசியல் வன்முறையும் உள்நாட்டு யுத்தமும் இலங்கையின் இன சமூகங்களை துருவமயப்படுத்தியிருப்பதுடன் நிறுவனங்களையும் அரசியல்மயமாக்கியுள்ளன.
குறிப்பாக சட்டம் ஒழுங்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளன.
மோதல்களினால் பல்லாயிரக்கணக்கானோர் இறந்தும் காயமடைந்தும் அல்லது இடம்பெயர்ந்தும் பீதி, புரிந்துணர்வின்மை என்பனவற்றுடன் இருக்கின்றனர்.
இந்த சவால்களுக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக அரசாங்கமானது சிறுபான்மையினர் தொடர்பாக அவர்களின் பொருளாதார அரசியல் எதிர்காலத்தைத் துண்டிக்கும் நடவடிக்கைகளை அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.
தென்னாபிரிக்காவின் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவுக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவுக்கும் இடையில் பொருத்தமற்ற விதத்தில் நியாயபூர்வத் தன்மையை ஏற்படுத்தும்.
அந்த ஒப்பீட்டுத்தன்மைக்கு தென்னாபிரிக்கா எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.
வெளிப்படையாகக் கூறினால் அத்தகைய ஒப்பீட்டுத் தன்மையானது ஏளனப்படுத்துவதானதொன்றாகும்.
மீண்டும் ஏற்படாமல் தனது வன்முறை வரலாறு தொடர்பாக நீதியான முறையில் பொறுப்புக்கூறும் தன்மை இலங்கைக்குத் தேவைப்படுகிறது.
இதற்குக் குறைந்த எதற்கும் இலங்கை மக்கள் இணங்கியிருக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
**********************
கருத்தில் கவனம் வேண்டும்!
உறுப்பினரொருவர் தெரிவித்த கூற்றை கொண்டு அது கட்சியினுடைய கருத்தாக கருதுவது தவறானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் லண்டனில் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தவற்றை கூட்டமைப்பின் கருத்தாகவோ நிலைப்பாடாகவோ எடுப்பது தவறெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
லண்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அவர் தெரிவித்தவை அவரது கருத்தாகவுள்ளது.
இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகவோ நிலைப்பாடாகவோ எடுத்துக்கொள்ள முடியாது.
அவ்வாறு எண்ணுவது தவறானதாகும். ஒவ்வொருவருக்கும் தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கு சுதந்திரம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
தமது கட்சி ஒரு தீர்மானத்தை எடுப்பதாயின் கட்சியிலுள்ள எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களுடைய கருத்தையும் கவனத்தில் கொண்டு முடிவினை மேற்கொள்கின்றது என்பதை சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவரோ அல்லது விரோதமானவரோ அல்ல. அவர் அதில் உறுதியாகவுள்ளார் என்பது தனக்கு தெரியும் எனவும் கூட்டிக்காட்டியுள்ளார்.
அவர் அந் நிகழ்வொன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கே பதிலளித்துள்ளார்.
அவர் தனது உரையில் அவ்வாறு தெரிவிக்கவில்லையென குறிப்பிட்டு கூற விரும்புவதாகவும், எனவே அவருக்குள்ள கருத்துச் சுதந்திரத்தினை கொண்டு கட்சி தீர்மானம் என்பது பிழையானது. விமர்சிப்பது தவறானது எனவும் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 4 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்குமிடையில் 10 ஆவது பேச்சுவார்த்தை இடம் பெறுகின்றது.
முழு இலங்கைக்கான தீர்வு தொடர்பில் பேசவில்லை.
வடக்கு, கிழக்கு தீர்வு குறித்தே பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது.
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமது பிரதிநிதிகள் என்பதை நிரூபித்துள்ளனர்.
எனவே தெரிவுக்குழுவெனவும் வேறு வழிகளிலும் இழுத்தடிக்காது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசாங்கம் முன்வைக்க வேண்டுமெனவும் கோருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
**********************
வெற்றியை ஏற்க வேண்டும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை கொச்சைப்படுத்துவதால் அரசுக்கு சர்வதேச அழுத்தம் ஏற்படும் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன எச்சரித்துள்ளார்.
நடைபெற்ற உள்ளூராட்சி சபைத்தேர்தல்களில் எப்படியாவது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடனேயே அரசு செயற்பட்டது.
இதற்காக அரசுத் தலைவர், அமைச்சர்கள், அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வடக்குக்குப் படையெடுத்துச் சென்றனர்.
அங்கு சென்று அப்பட்டமாகத் தேர்தல் விதிகளை மீறி செயற்பட்டனர்.
அதுமட்டுமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகத் திட்டமிட்டபடி வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டனர்.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் 26 சபைகளில் போட்டியிட்டு 20 சபைகளைக் கைப்பற்றி அமோக வெற்றியீட்டியது.
இதனை சாதாரண வெற்றி எனக் கருதிவிட முடியாது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாகும்.
தமிழ் மக்கள் தாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னாலேயே நிற்கின்றோம் என்றும் அவர்களே தங்களின் ஏகப் பிரதிநிதிகள் என்றும் இந்தத் தேர்தலில் முழு உலகத்துக்கும் எடுத்துக் காட்டியுள்ளனர்.
ஆனால், அரசோ இன்னும் பழைய நிலைப்பாட்டிலேயே உள்ளது.
கூட்டமைப்பினர்தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது.
வடக்கில் தமக்கு ஏற்பட்ட படுதோல்வியை அப்படியே மூடி மறைக்க அரசுத் தலைவரும், அரச தரப்பினரும் முனைகின்றனர்.
இதற்காகக் கூட்டமைப்பினரின் வெற்றியை கொச்சைப்படுத்துகின்றனர்.
அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு நடை பெற்றுவரும் பேச்சுகளை இழுத்தடிப்பதற்கான அரசின் சதிகளில் இதுவும் ஒன்றாகும்.
எனவே, அரசு சர்வதேசத்துக்கு அளித்துள்ள உறுதிமொழிகளின்படி தமிழ் மக்களுக்கு விரைவில் அரசியல் தீர்வை வழங்க முன்வரவேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரூடாகவே அத்தீர்வு தங்களுக்கு வழங்கப்படவேண்டும் என்பதை தமிழ் மக்கள் தேர்தல்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதுவே சர்வதேசத்தின் எதிர்பார்ப்புகளாகும்.
இந்நிலையில், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும், சர்வதேசத்தின் கருத்துகளுக்கும் மதிப்பளித்து அரசு, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை வழங்க முன்வரவேண்டும்.
மாறாக கூட்டமைப்பினரின் வெற்றியைக் கொச்சைப்படுத்தி அரசியல் தீர்வு வழங்குவதற்கு காலத்தை இழுத்தடித்தால் சர்வதேச அழுத்தம் அரசுக்கு அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார
**********************
மாணவர்களைக் காணவில்லை
யாழ். வைத்தியஸ்வரக் கல்லூரியில் தரம் 9 கல்வி கற்கும் மாணவர்கள் இருவர் கடந்த 26 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக யாழ். காவல் நிலையத்தில் அவர்களது பெற்றோர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இம் மாணவர்கள் இருவரும் பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்து பாடசாலை ஒப்படை ஒன்று இருப்பதாகவும் அதற்கு தாங்கள் களவேலை செய்யவேண்டும் என்று கூறிவிட்டு 26 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு வெளியேறிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவர்கள் இருவரும் இன்றுவரை வீடு திரும்பவில்லை என பெற்றோரின் முறைப்பாட்டிலிருந்து தெரியவந்துள்ளது.
இம் மாணவர்களை கண்டுபிடித்து தருமாறு யாழ். காவல் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக யாழ். காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
**********************
மீள்குடியேற்றம்
விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெயர்ந்த மக்களுக்காக அமைக்கப்பட்ட மெனிக் பாம் முகாமில் தற்போதும் 9ஆயிரத்து 287 பேர் அகதிகளாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைவிட மேலும் சுமார் 100 பேர் யாழ்ப்பாணத்திலுள்ள ராமாவில் முகாமில் தங்கை வைக்கப்பட்டுள்ளனர்.
மெனிக்பாம் முகாமில் தஞ்சமடைந்தவர்களில் சுமார் 2லட்சத்து 70ஆயிரம் பேர் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு மீள்குயேற்றப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்ற போதிலும், இதில் பெரும்பாலானவர்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாதவர்களாகவே தொடர்ந்தும் உள்ளார்கள்.
விடுவிக்கப்பட்டவர்களில் 2 இலட்சத்து 33ஆயிரத்து 628 இடம்பெயர்ந்த மக்கள் வவுனியா, மன்னார், திருணோமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.
9ஆயிரத்து 851 இடம்பெயர்ந்த மக்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்புப் பகுதி மக்களை மீளக்குயேற்றுவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் அனுமதி மறுத்துவருவதாகத் தெரிகின்றது.
மெனிக் பாம் முகாமில் தற்போதுள்ளவர்கள் பெரும்பாலும் புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
**********************
உண்மைத் தரவுகளா?
வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தின் எல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள தெல்லிப்பழையில் 11ஆயிரத்து 879 குடும்பங்களை சேர்ந்த 38ஆயிரத்து 637 பேர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கு இன்னும் 6ஆயிரத்து 928 குடும்பத்தை சேர்ந்த 25ஆயிரத்து 114 பேர் மீளக்குடியேற்றப்பட வேண்டியுள்ளதாகவும் சட்டமா அதிபர் - உயர் நீதிமன்றத்திற்கு நேற்று புதன்கிழமை அறிவித்தார்.
யாழ். குடாநாட்டில் வௌ;வேறு பிரதேசங்களில் குடியேற்றப்பட்ட குடும்பங்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான புள்ளிவிபரங்களைக் கொண்ட யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் கடிதமொன்றை பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சவீந்தர பெர்ணான்டோ நீதிமன்றில் சமர்ப்பித்தார்.
எதிர்பார்க்கப்பட்ட மீள்குடியேற்றத்தில் 80 வீதத்திற்கு மேல் பூரணமாகியுள்ளதையிட்டு திருப்தி தெரிவித்த மனுதாரரின் சட்டத்தரணிகள், மீள்குடியேற முடியாதுள்ள சில தனியாட்கள் பற்றியே தாம் அக்கறைப்படுவதாக தெரிவித்தனர்.
இவ்வாறான தனியாட்கள் விபரத்தை கொண்ட பிரேரணை ஒன்றை தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
**********************