Saturday 29 October 2011

செய்திகள் 29/10


தொடரும் பேச்சுக்கள்
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் வொசிங்டன் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு, அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களுடன் அங்கு தொடர்ச்சியான பேச்சுக்களை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரா.சம்பந்தன் தலைமையிலான இந்தக் குழுவில் மாவை.சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த 26ம் நாள் தொடக்கம் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருவதாகவும், அடுத்த மாதம் 4ம் நாள் வரை பேச்சுக்கள் தொடரும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தகவல் வெளியிட்டுள்ளதாக பிபிசி கூறியுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் பலரையும் இதுவரை சந்தித்திருப்பதாகவும், மேலும் சில முக்கிய செனெட் உறுப்பினர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போருக்குப் பிந்திய நல்லிணக்கம் குறித்து சிறிலங்கா அரசாங்கம் வெளி உலகுக்குக் கூறினாலும், உண்மையான நடப்புகள் அதற்கு நேர்மாறாக இருப்பது குறித்து சந்திப்புகளின் அமெரிக்க அதிகாரிகளுடன் விவாதித்தாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசியல்தீர்வு தொடர்பாக சிறிலங்கா அரசு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறதா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசு மீது அரசியல்தீர்வு குறித்து ஏற்கனவே அமெரிக்கா அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் இதை சிறிலங்கா அரசு சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறதா என்று சரியாகத் தெரியவில்லை.
அமெரிக்காவின் அழுத்தம் மட்டும் போதாது, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற, ஏனைய அனைத்துலக சமூகத்தின் அழுத்தமும் ஒத்துழைப்பும் தேவை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களச் சந்திப்புகளின் முடிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றுடன் அமெரிக்கச் சந்திப்புகளை முடித்துக் கொண்டு கனடா செல்லவுள்ள சுரேஸ் பிறேமச்சந்திரன் தவிர்ந்த ஏனைய மூவரும், மீண்டும் அமெரிக்கா திரும்பி வந்து பேச்சுக்களைத் நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
புலம்பெயர் சமூகத்துடனான சந்திப்புக்குச் கனடா செல்வதற்கு சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கு நுழைவிசைவு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
*********************

தீர்வின் அவசியம்
இலங்கை அரச தலைவர்கள் மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் ஒரு பக்கம் இருக்க, கொழும்புடன் பேசித் தமிழர்களுக்கு நீதியான தீர்வு ஒன்றை வென்றெடுப்பதில் கவனம் செலுத்தும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒபாமா நிர்வாகம் எடுத்துக் கூறி இருப்பதாக வொஷிங்ரனில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது போர்க் குற்றச்சாட்டால் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கை அரசின் பலவீனங்களைப் பயன்படுத்தி தமிழர்களின் நலன்களை வென்றெடுக்கப் பாருங்கள் என்பதே அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்களின் சாரம் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சென்றுள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையிலான சந்திப்புக்கள் நேற்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தன என்று கூட்டமைப்பினர் கூறினர்.
இந்தச் சந்திப்புகளில் ஆராயப்பட்ட விடயங்கள் குறித்து அனேகமாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்கத் தமிழ்த் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, வழக்கத்துக்கு மாறாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் தொடர்ச்சியாக மூன்று நாள்கள் சந்திப்புக்களை நடத்தியிருப்பது ஆச்சரியமளிப்பதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை, கூட்டமைப்பினருடனான சந்திப்புக்கள் அனைத்தையும் ராஜாங்கத் திணைக்களமே ஏற்பாடு செய்தது என்பதால் அங்கேயே அவர்களது சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.
அதற்காக அவை ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன்தான் நடக்கின்றன என்று கருதிக் கொள்ளத் தேவையில்லை என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் கூறின.
ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின்போது, இலங்கை அரசுடன் பேசி தீர்வைப் பெறுவதில் அதிக அக்கறை காட்டுமாறு கூட்டமைப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
போர்க் குற்றச்சாட்டு என்ற விடயத்தில் தமிழர் தரப்பு அழுங்குப் பிடியாக இல்லாமல் அதனைப் பயன்படுத்தி தமக்கான நலன்களை வென்றெடுப்பதில் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும் சர்வதேச நாடுகள் அதற்கே ஆதரவாகச் செயற்படும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
தாயகத்தில் உள்ள தமிழர்களின் அசைக்க முடியாத பிரதிநிதிகள் என்ற வகையில், தமிழர்களின் தலைமைத்துவ வகிபாகத்தை ஈழத் தமிழர்கள் மத்தியிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் கூட்டமைப்பு பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் அமெரிக்க அதிகாரிகளால் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
*********************

அலறும் அரசாங்கம்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளல்லர் என ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அவர்களை ஐ.நா சபையின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசுவதென்பது யதார்த்தமற்ற செயற்பாடாகும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா.பொதுச்சபையின் மூன்றாவது குழுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐ.நா.சபையின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நியூயோர்க் சென்றுள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க கடந்த புதன்கிழமை ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
வியாழக்கிழமை ஐ.நா.பொதுச்சபையின் மூன்றாவது குழுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு உரையாற்றினார்.
பான் கீ மூனுடனான சந்திப்பில் ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான பொறுப்பாளர் லின் பஸ்கோ மற்றும் விஜய் நம்பியார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அமைச்சர் மகிந்த சமரசிங்கவுடன் ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹண பங்குபற்றியிருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்வரும் முதலாம் திகதி ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூனைச் சந்திக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து மஹிந்த சமரசிங்கவுடன் தொடர்புகொண்டு கேட்டபோது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை பான் கீ மூன் சந்திக்க மாட்டார் என்றே தாங்கள் நம்புவதாகவும் இதற்கான சந்தர்ப்பங்கள் அரிதாகவே உள்ளதெனத் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர்.
இன்னும் பல தமிழக் கட்சிகள் நாட்டில் உள்ளன என்பதை தாம் ஐ.நா.வின் பிரதிநிதிகளுக்கு விளக்கியுள்ளதாகவும் கூட்டமைப்பினரைச் சந்திப்பது யதார்த்தமற்ற விடயமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய குறுகிய மனப்பான்மை கொண்டவர்களிடம் இருந்து தமிழர்கள் நியாயமான தீர்வை எதிர்பார்ப்பது காலத்தை வீணடிக்கும் செயலென அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
*********************

இன்று கனாடவில் பொங்கு தமிழ்
கனடியத் தமிழர்களால் நிகழ்த்தப்படும் மூன்றாவது பொங்கு தமிழுக்கான இறுதி ஏற்பாடுகள் யாவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழர்கள் பெருமளவில் வாழும் கனடிய நகரங்கள் எங்கும் பொங்கு தமிழ் பற்றிய செய்திகள் பரவலாகி களைகட்டியுள்ளது.
சுமார் ஒரு வாரத்துக்கு முன்னரே இங்குள்ள பொது நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்திலும் பொங்கு தமிழை எழுச்சியூட்டும் சுவரொட்டிகள் அலங்கரித்திருந்தன.
காலமும் நேரமும் இதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாயினும், எங்கே நடைபெறும் என்பதை அப்போது அறிவிக்கப்படாததால், இது எங்கே நடைபெறுகின்றது என்ற கேள்வி தேசியத்தை நேசிக்கும் ஒவ்வொருவரிடமும் எழும்பியிருந்தது.
வாராவாரம் வித்தியாசமான சுவரொட்டிகளை வௌ;வேறு இடங்களில் காணக்கூடியதாக இருந்தது.
ஆர்வமுள்ள பல தொழிலதிபர்கள் தாமே முன்வந்து இது தொடர்பான துண்டுப் பிரசுரங்களையும் பல்லாயிரக்கணக்கில் அச்சடித்து விநியோகித்தார்கள்.
2004ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில், கனடாவின் முதலாவது பொங்கு தமிழ் எந்த இடத்தில் நடைபெற்றதோ, அதே குயின்ஸ் பார்க் திடலில் இன்று சனிக்கிழமை பகல் 2 மணி முதல் 6 மணி வரை பொங்கு தமிழ் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுக்குக் கட்டியம் கூறுவதுபோல இங்குள்ள சமூக வர்த்தகர்கள் பொங்கு தமிழ் பொறிக்கப்பட்ட மஞ்சள்-சிவப்பு வர்ணத்தினாலான பிளாஸ்டிக் பைகளில் தமது விற்பனைப் பொருட்களை வழங்கி தங்களுடைய தார்மீக ஆதரவைக் காட்டினர்.
இதனை ஏற்பாடு செய்துள்ள கனடியத் தமிழர் சமூகத்துக்கும் தமிழ் இளையோர் சமூகத்துக்கும் அங்குள்ள பொது அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள், பழைய மாணவர் மன்றங்கள், ஊர்ச் சங்கங்கள் என்பன ஒன்றுபட்டு முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றன.
*********************

எதிர்க்கும் ஸ்ரீலங்கா
பொதுநலவாய நாடுகளில் மனித உரிமைகள் பேணப்படுவதை உறுதிப்படுத்தும் விதமாக சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமிக்க சில நாடுகள் எடுத்துள்ள முயற்சியை இலங்கை எதிர்க்குமென்று அந்நாட்டு அரச பேச்சாளர் கூறியுள்ளார்.
ஆலோசனைக் குழுவொன்று தாயாரித்துள்ள அறிக்கையொன்று, பொதுநலவாய நாடுகளில் இடம்பெறக்கூடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எப்படியான அணுகுமுறைகளை கைக்கொள்ள வேண்டும் என்று 100க்கும் அதிகமான ஆலோசனைகளை முன்வைத்துள்ளது.
இதன்படியான, மனித உரிமைகள் பற்றிய சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமிக்கும் யோசனைக்கு இலங்கை உள்ளிட்ட நாடுகள் தமது எதிர்பபைத் தெரிவிக்கும் என்று மகிந்த ராஜபக்ஷவின் பேச்சாளரான பந்துல ஜயசேகர சுட்டிக்காட்டினார்.
54 நாடுகள் அங்கம் வகிக்கும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சனைகளை ஆராய வேண்டும், குறிப்பாக இலங்கையில் நடைபெற்றதாக்க கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்துகின்றன.
*********************

உதவும் ஜப்பான்
வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் அரசாங்கம் மேலதிக நிதியுதவி அளிக்கவுள்ளது.
டீ. ஏ. எஸ். எச். எனும் கண்ணிவெடி அகற்றும் அரசசார்பற்ற நிறுவனத்தின் ஊடாக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
இந்நிதியுதவி தொடர்பாக ஜப்பான் தூதரகத்துக்கும், டீ. ஏ. எஸ். எச். நிறுவனத்துக்கும் இடையில் ஒப்பந்த மொன்று எதிர்வரும் திங்கட்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது.
வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளின் முக்கியத்துவத்தை அறிந்தே நிதியுதவி வழங்கவிருப்பதாக ஜப்பான் தூதரகம் அறிவித்துள்ளது.
அதேநேரம், வடபகுதியில் முன்னெடுக்கப்படும் மீளிணைவு மற்றும் நல்லிணக்கப் பணிகளுக்கு 122 மில்லியன் ஜப்பான் யென்களை வழங்க ஜப்பான் அரசாங்கம் முன்வந்துள்ளது.
குடியகல்வுக்கான சர்வதேச நிறுவனத்தில் ஊடாக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
*********************

வலியுறுத்தும் ரணில்
அவைரும் ஏற்றுக்கொள்ளும் அதிகாரப் பகிர்விற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இணக்கம் தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தை எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இதனை அடிப்படையாக கொண்ட எந்தவொரு திட்டத்தினையும் முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்பை ஐக்கிய தேசிய கட்சி வழங்குமென அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சர்வதேச நடவடிக்கைகளுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான 33 அமர்வில் பங்கேற்கும் முகமாக கொழும்பிற்கு சென்றுள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்க்கட்சி தலைவர் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளது.
உலகிலுள்ள அனைத்து பாராளுமன்றங்களுக்கும் இதனை விட அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே தனதும் தமது கட்சியினதும் எண்ணமென ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாட்டின் பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்தினூடாக தீர்வினைப் பெறவேண்டிய அவசியம் தமக்குள்ளதாகவும் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட போதிலும் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், அரசாங்கமும் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்ததையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்ட அவர், இந்த வருட இறுதிக்குள்ளாவது அதற்கான உறுதியான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
அரசாங்கம் தமது வார்த்தை அளவில் இதனை வரையறுக்காமல் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்தி அவற்றை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அடிப்படையில் தமிழ் கூட்டமைப்பிற்கான அதிகாரப் பகிர்வினை வழங்குவதனை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமென ரணில் விகரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
*********************



செய்திகள் 28/10


மகாநாடு ஆரம்பம்
பொதுநலவாய நாடுகள் அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்களுடைய மாநாடு இன்றைய தினம் ஆரம்பமாகின்றது.
தேசிய மற்றம் பூகோளமயமான மீள் மலர்ச்சி என்ற தொனிப்பொருளில் இன்றைய மாநாடு நடத்தப்படவுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இந்த மாநாடு ஆரம்பமாகிறது.
பொதுநலவாய நாடுகளின் தலைவர் பதவி, அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லர்ட்டுக்கு இன்று வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
*********************

மகிந்தவை குறிவைக்கும் ஊடகங்கள்
அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சிமாநாடு இன்று ஆரம்பமாகி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும்.
இந்த மாநாட்டில் 54 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த உச்சிமாநாட்டை முன்னிட்டு பல்வேறு அமர்வுகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள நிலையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மீதே ஊடகங்களின் கண் பதிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வழக்கமாக கொமன்வெல்த் அமர்வுகளில் பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் மீதே ஊடகங்களின் கண் இருக்கும்.
ஆனால் இம்முறை போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, சர்ச்சைகளுக்குள்ளாகியிருக்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, பிரித்தானிய மகாராணிக்கு இணையாக ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
இதற்கு முன்னர் சிறிலங்காவுக்கு இத்தகைய ஊடக முக்கியத்துவம் கொமன்வெல்த் அமர்வுகளிலோ, பிராந்திய நாடுகளின் அமர்வுகளிலோ கிடைத்ததில்லை என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றின் செய்தி ஆசிரியர் சமிந்திர பெர்னான்டோ குறிப்பிட்டுள்ளார்.
போர்க்குற்றச்சாட்டுகள் கொமன்வெல்த் மாநாட்டில் சிறிலங்காவையும், மகிந்த ராஜபக்சவும் அனைத்துலக ஊடகங்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.
சிறிலங்கா விவகாரத்தை குறிப்பாக போர்க்குற்ற விவகாரத்தை, அவுஸ்ரேலிய ஊடகங்களும், அனைத்துலக ஊடகங்களும் அதிக முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு கோணங்களில் அலசி வருகின்றன.
அத்துடன் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை அவுஸ்ரேலியா அரசு தடுத்ததும் அங்கு விமர்சனங்களை தோற்றிவித்துள்ளது.
சிறிலங்கா அரசுக்கு எதிராக மென்போக்குடன் நடந்து கொள்வதாக அவுஸ்ரேலிய அரசியல் தலைவர்கள், முன்னாள் இராஜதந்திரிகள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
தி வெஸ்ரேன் ஒஸ்ரேலியன் ஊடகத்தில் சிறிலங்கா மூலம் பிரிசோதிக்கப்படும் கொமன்வெல்த்தின் பெறுமானம் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ள லண்டனைத் தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபையின் பொதுச்செயலர் சலில் செற்றி, கொமன்வெல்த்தின் ஒருபகுதி நாடுகள் சிறிலங்கா விவகாரத்தில் குருட்டுக் கண்ணுடன் செயற்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
*********************

ஸ்ரீலங்காவை புறக்கணிக்குமாறு அவுஸ்திரேலியாவிடம் கோரிக்கை
கனடாவைப் பின்பற்றி சிறிலங்காவில் நடைபெறும் அடுத்த கொமன்வெல்த் மாநாட்டை அவுஸ்ரேலியாவும் புறக்கணிக்க வேண்டும் என்று அவுஸ்ரேலியாவின் கிறீன் கட்சியின் தலைவர் பொப் பிறவுண் அழைப்பு விடுத்துள்ளார்.
மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றுக்கு உரிய பதிலை சிறிலங்கா அளிக்காது போனால், அடுத்த கொமன்வெல்த் மாநாட்டை அவுஸ்ரேலியாவும் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த கொமன்வெல்த் கூட்டம் சிறிலங்காவில் நடைபெற்றால், போர்க்குற்றங்கள், குடிமக்களின் உரிமைகள் குறித்து செய்வதற்கு ஒன்றுமேயில்லாது போய்விடும்.
அத்துடன் கொமன்வெல்த்தில் அவற்றின் கதையும் முடிந்து விடும்.
சிறிலங்காவை சரியான திசைக்கு கொண்டு வரமுடியாது போனால் கொமன்வெல்த் பற்றி பெரியதொரு கேள்வியை எழுப்பும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
*********************

பிளவுபட்ட பொதுநலவாயம்
உறுப்பு நாடுகள் மத்தியில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் பொதுலவாய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் நேற்று பேர்த்தில் சந்திப்பை நடத்தினர்.
எனினும் அதில் இணக்கம் எதனையும் காண முடியவில்லை.
இந்தநிலையில் உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கும் இந்த பிரச்சினை தொடர்பில் தீர்மானம் எடுக்கமுடியாமல் போகலாம் என்று ரொயட்டர் செய்திசேவை தெரிவித்துள்ளது.
உறுப்பு நாடுகளின் மத்தியில் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்காக ஒரு ஆணையாளரை நியமிப்பது தொடர்பிலேயே இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த யோசனையை கனடா, அவுஸ்திரேலியா உட்பட்ட 11 நாடுகள் முன்வைத்தன.
எனினும் இலங்கை, இந்தியா உட்பட்ட சில நாடுகள் இதனை எதிர்க்கின்றன.
இலங்கையை பொறுத்தவரை தற்போது சர்வதேசத்தின் முன்னால் தாம் காட்டிக் கொண்டிருக்கும் தமது நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு இந்த ஆணையாளர் நியமிப்பினால் பாதிப்பு ஏற்படும் என்று எண்ணுகிறது.
அதனாலேயே இத் தீர்மானத்தினை நிராகரிக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை மேற்குலகை இலங்கையின் விடயத்தில் தலையிடமல் பாதுகாப்பதில் திடமாக உள்ளது.
இதன் அடிப்படையிலேயே மனித உரிமைகள் ஆணையாளர் யோசனையை சில நாடுகளின் தலைவர்கள் எதிர்க்கின்றனர்.
இதேவேளை இந்தவிடயத்தில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் தீர்மானம் எடுக்காவிட்டால் அது மாநாட்டின் தோல்விக்கு சமன் என்று இந்திய உயர்நீதிமன்ற நீதியரசர் அஜித் பிரகாஸ் தெரிவித்துள்ளார்.
*********************

மாணவர்களின் பகிஸ்கரிப்பு முடிவு
யாழ். சமூகப்பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க தமது வகுப்பு பகிஷ்கரிப்புப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று மாலை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆம் திகதி முதல் மாணவர்களால் மேற் கொள்ளப்பட்டு வந்த வகுப்பு பகிஷ்கரிப்பு போரட்டமானது இன்றுடன் முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது.
கடந்த இரண்டு வாரங்களாக மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தமாறு வலியுறுத்தி மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் சிவில் சமூக பிரதிநிதிகள் குழு மாணவர் ஒன்றியத்திற்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தது.
மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பை இடைநிறுத்தி விரிவுரைகளுக்கு செல்லுமாறு கோரி இருந்ததற்கு அமைவாகவும், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்கவும், தமது மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் தொடர் பகிஷ்கரிப்பால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும் இப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வதற்கு சிவில் சமூக பிரதி நிதிகள் இணக்கம் தெரிவித்ததினாலும், தமது விரிவுரை பகிஷ்கரிப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
*********************

இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர்
புனர்வாழ்வு நிலையங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களின் மேலும் 700 பேர் இருப்பதாக புனர்வாழ்வு ஆணையாளர் திணைக்களம் தெரிவிக்கிறது.
வவுனியா, வெலிகந்த புனர்வாழ்வு நிலையங்களில் அவர்களுக்கான புனர்வாழ்வு நவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் சந்தன ராஜகுரு குறிப்பிட்டார்.
இன்னும் சில தினங்களில் அவர்களையும் சமூகமயப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் நாயகம் தெரிவிக்கிறார்.
புனர்வாழ்வு நிலையங்களில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சுமார் 100 முன்னாள் பெண் உறுப்பினர்களும் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
*********************

முறையான சட்டம் கோரும் துறவி?
நாட்டில் முறையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரெலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சரியான சட்டக் கட்டமைப்பு அமுல்படுத்தாத வரையில் நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய தேர்தல் முறைமையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக விருப்பு வாக்கு முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு ஏனைய அரசாங்கங்களுக்கு கிடைக்காத மாபெரும் அதிகாரம் காணப்படுவதாகவும் அதனை நல்லவிதமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முல்லேரிய சம்பவம் போன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தேர்தல் முறைமையின் கீழ் வாக்காளர்களுக்கு எவ்வித மரியாதையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் பிரதிநிதிகள் கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதாகவும், மக்கள் சேவையாற்றுவதில் அவர்களுக்கு நாட்டமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
*********************

தற்கொலை ஏற்படுத்தியுள்ள சர்ச்சை
அவுஸ்ரேலியாவின் சிட்னி வில்லாவூட் தடுப்பு நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவுஸ்ரேலியாவின் அகதிகள் பற்றிய கொள்கை குறித்த கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
சுட்டிவிகடன் என்று நண்பர்களால் அழைக்கப்பட்ட 27 வயதான ஜெயசங்கர் ஜெயரட்ணம் என்ற இளைஞர் கடந்த புதன்கிழமை அதிகாலை, அதிகளவிலான தூக்க மாத்திரைகளை அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
கடந்து ஆண்டு மார்ச் மாத இறுதிப் பகுதியில் இருந்து இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவரது தஞ்சக் கோரிக்கை கடந்த ஓகஸ்ட் மாதமே ஏற்கப்பட்டு விட்டது.
ஆனால் அவுஸ்ரேலிய புலனாய்வு அதிகாரிகளின் அறிக்கை கிடைப்பது தாமதமாகியதால் தான் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அவுஸ்ரேலிய அதிகாரிகள் அகதிகள் விடயத்தில் வேண்டா வெறுப்புடன் நடந்து கொள்வதால் தான் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அவுஸ்ரேலிய பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவின் அறிக்கைக்காக இவருடன் இன்னமும் 461 பேர் வில்லாவூட் தடுப்பு நிலையத்தில் காத்திருந்ததாக அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவன் தெரிவித்துள்ளார்.
ஜெயசங்கரை உரிய நேரத்தில் வெளியே சென்று வாழ அனுமதித்திருந்தால் இந்தச் சம்பவத்தை தடுத்திருக்கலாம் என்று ஜெயசங்கரின் சட்டவாளர் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வு மிகவும் சோகமானது. ஆனால் துரதிஸ்டவசமாக இது ஆச்சரியமளிக்கக் கூடியதல்ல என்று அகதிகள் நடவடிக்கைக் கூட்டமைப்பின் பரப்புரையாளர் ஜெமீமா மௌபிறே தெரிவித்துள்ளார்.
தடுப்பு நிலையங்களை மூடிவிட்டு அகதிகளை சமூகத்தில் இணைக்குமாறு தாம் அரசாங்கத்திடம் கோரி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகளவிலான தூக்க மாத்திரைகளை அருந்தியே ஜெயசங்கர் தற்கொலை செய்துள்ளதாக அவரது நண்பர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அதுபற்றிக் கருத்து வெளியிட குடிவரவு அமைச்சர் பொவன் மறுத்து விட்டார்.
இந்தத் தற்கொலையை அடுத்து அவுஸ்ரேலியாவின் அகதிகள் கொள்கை குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அவுஸ்ரேலியாவில் தஞ்சம் கோரிய ஆறு பேர் கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதத்துக்குப் பின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இவர்களில் நால்வர் வில்லாவூட் நிலையத்தில் தற்கொலை செய்துள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட ஜெயசங்கர் பற்றிய அறிக்கை கொமன்வெல்த் ஆலாட்சி அதிகாரி பணியகத்துக்கு ஆறு நாட்கள் முன்னதாகவே கிடைத்திருந்தாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அதுபற்றிய விசாரணைகள் தொடங்கப்படாதிருந்தன.
இவரது மரணம் வில்லாவூட் தடுப்பு நிலையத்தில் உள்ள தமிழ் அகதிகளை மட்டுமன்றி ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஜெயசங்கர் தடுப்பு நிலையத்தில் இருந்த போது தமிழ்ப் பெண் ஒருவரைக் காதலித்தாகவும், அவரை விரைவில் திருமணம் செய்வதற்குத் திட்டமிட்டிருந்ததாகவும் அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.
இவரது தாய், தந்தையர் இறந்து விட்டதாகவும், எப்போதும் சகோதரன் மற்றும் சகோதரி பற்றியே கவலைப்படுவார் என்றும் நண்பர்கள் மேலும் கூறியுள்ளனர்.
ஜெயசங்கரின் தாய் சிறிலங்காப் படையினரால் கொல்லப்பட்டதாக அவரது நண்பர் ரமேஸ் தெரிவித்துள்ளார்.
இவரது மரணம் பற்றிய தகவலை சிறிலங்காவிலுள்ள சகோதரனிடம் தெரிவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை என்று கூறிவந்த அவுஸ்ரேலிய அதிகாரிகள், நேற்று அந்தத் தகவல் பரிமாறப்பட்டு விட்டதாக இன்று அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே, அவுஸ்ரேலியாவின் வடக்கிலுள்ள டாவின் தடுப்பு நிலையத்தில் நேற்றிரவு மற்றொரு அகதி தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.
ஈரான் நாட்டைச் சேர்ந்த இவர் ஏனையவர்களால் காப்பாற்றப்பட்டு டாவின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
*********************

தடுமாறும் ஐதேக
கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன மற்றும் மேல்மாகாணசபை உறுப்பினர் சிரால் லக்திலக்க ஆகியோரின் உறுப்புரிமையை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நிராகரித்துள்ளது.
நேற்று நடைபெற்ற செயற்குழுக்கூட்டத்தில் இதற்கான யோசனையை கட்சியின் பிரதிதலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்தார்.
எனினும் இக் கோரிக்கையை நிராகரித்த கட்சியின் செயற்குழு, இருவரும் முன்னாள் சட்டமா அதிபர் திலக் மாரப்பனவின் தலைமையிலான குழுவினால் ஒழுக்காற்று விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவர் என்று அறிவித்தது.
இந்தநிலையில் குறித்த இரண்டு உறுப்பினர்களும் மன்னிப்பு கோரினால், அவர்களுக்கு எதிராக தடையை நீக்கிக்கொள்ளலாம் என்ற யோசனையை தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ளார்.
இது சாத்தியமாகும் பட்சத்தில் இருவரினதும் கட்சி உறுப்புரிமை மீண்டும் வழங்கப்படும் என்று கட்சியின் செயற்குழு தரப்புகள் தெரிவித்துள்ளன.
கட்சியின் ஒழுங்குகளை மீறி கடந்த உள்ளுராட்சி தேர்தலில் கோட்டே மற்றும் மாத்தறையில் இரண்டு சுயாதீனக்குழுக்களை தேர்தலில் போட்டியிட வைத்தமையே இரண்டு பேரின் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை, பகிரங்கமாக விமர்சித்த கட்சியின் பிக்கு முன்னணி தலைவரான மெத்தேகொட குணரட்ன தேரரை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்கும் கட்சியின் செயற்குழு நேற்று தீர்மானித்தது.
*********************

என்ன சொல்ல வருகிறார்?
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வினை தமிழ் மக்கள் தாங்களேதான் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். இலங்கை அரசு தரும் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? என்று இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் முடிவில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
கொழும்பில் நடைபெறவுள்ள உலகளாவிய நடவடிக்கைகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் மாநாட்டில் இலங்கையின் வடபகுதி நிலைமை தொடர்பாக அறிக்கை சமர்ப்பிப்பதற்காகவே உலக நாடாளுமன்ற குழுவினர் யாழ்ப்பாணம் வந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
உலகளாவிய நடவடிக்கைகளுக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினர்களில் ஐவர் நேற்று வடபகுதிக்கு சென்றிருந்தனர்.
அங்குள்ள பல்வேறு இடங்களுக்கும் சென்ற அவர்கள் நிலைமைகளை நேரில் கண்டறிந்தனர்.
அந்தக் குழுவில் பிரிட்டனின் லோரட்கிரோஜ், தென்னாபிரிக்காவின் பிராந்தியமான சிராலியோனின் பேனாட் டீலாகி, பங்களாதேஷின் நில்பர் சவுத்திரிமுனி, சுரினாமின் அஷிஷ், நியூஸிலாந்தின் கஷ்ரப் சவுத்திரி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்தபோது இருந்த நிலைமையை விட தற்போது வித்தியாசமாக மேம்பட்டதான சூழலை உணருவதாக சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர் குழுவை தான் அழைத்து வரவில்லை.
தானும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியிலே வந்துள்ளதாக தெரிவித்த அவர், தமிழ் மக்களுக்காக எதையாவது செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் நாச்சியப்பன் குறிப்பிட்டார்.
இங்குள்ள நிலைமைகளை இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவதானித்தால் அவர்களும் தமிழ் மக்களுக்கு ஏதாவது உதவி செய்வார்கள் என்று தான் எதிர்பார்க்கிறார் என்றும் சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.
இந்தியாவில் இலங்கைத் தமிழ்க் கட்சிகளை அழைத்து நடத்திய மாநாடு தொடர்பாக கேள்வியெழுப்பியதற்கு தன்னைப் பொறுத்தவரையில் அது வெற்றிகரமான மாநாடுதான் என்று பதிலளித்தார்.
*********************

தோல்விக்கு யார் காரணம்?
கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஆளுங்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தோல்வியடையக் காரணம் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவே என அதே கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினரான மஹிந்த கந்தகம குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பின் சேரிப்புற வீடுகளை அவர் அகற்றுவதற்கு மேற்கொண்ட தீர்மானமானத்தின் மூலமே இந்தத் தோல்வி ஆரம்பித்தது.
மேலும், இதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியும் பலம்பெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் அனைவரும் கட்சியின் தலைமையின் கீழ் ஒன்றிணைந்து கொழும்பு மாநகர சபையின் வெற்றிக்காகப் பாடுபட்டு அந்த இலக்கை அடைந்து கொண்டனர்.
அத்துடன் ஆளுந்தரப்பில் மிலிந்த மொரகொட, ஆஸாத் சாலி, முகம்மத் மஹ்ரூப் ஆகியோரை கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் தனது கட்சி நிறுத்தியதும் படுதோல்விக்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
*********************

கொலை அச்சுறுத்தல்
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான பிரட்றிகா ஜேன்ஸ் தனக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மீரிஹானை காவல் நிலையத்தில் நேற்றிரவு முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.
இதனை காவல்துறை ஊடகப் பேச்சாளரான காவல்துறை அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தனக்கு அனுப்பிய வைக்கப்பட்டுள்ள கடிதம் ஒன்றின் மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் நேற்றிரவு ஏழு மணியளவில் மீரிஹான காவல் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் வெள்ளைக் கொடி விவகார வழக்கில் இவர் பிரதான சாட்சியாவார்.
இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் 18 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பில் இவரது பத்திரிகையில் வெளியான விடயங்கள் குறித்து அரசின் சீற்றத்துக்கும் இவர் உட்பட்டுள்ளார்
*********************


செய்திகள் 27/10


பேச்சுக்கள் ஆரம்பம்
அமெரிக்கா சென்றடைந்துள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவுக்கும் அமெரிக்கத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வொஷிங்டனில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.
அமெரிக்காவில் பலதரப்பட்டவர்களையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நேற்று இடம்பெற்ற முதலாவது சந்திப்பு யாருடன் நடைபெற்றது என்பது குறித்து உத்தியோக பூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
எனினும் அவர்கள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணைச்செயலர் ரொபேர்ட் ஓ பிளேக்கை நேற்றுச் சந்தித்ததாக செய்திகள் தெரிவித்தன.
கூட்டமைப்பினரின் இந்த முதலாவது சந்திப்புடன் அமெரிக்கத் தரப்புக்களுடனான சந்திப்புகள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
யார் யாரை எப்பொழுது எந்த நாளில் கூட்டமைப்பினர் சந்தித்துப் பேசுவர் என்பது குறித்து தகவல்களை முன்கூட்டியே அறிய முடியாத நிலை உள்ளது.
தமிழ்க் கூட்டமைப்பினருடனான சந்திப்பு அட்டவணை விவரங்கள் அனைத்தையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மிகவும் இரகசியமாகக் கையாள்வதாகவும் அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன.
எனினும் கூட்டமைப்பினர் இந்த விஜயத்தின்போது ஐ.நா. பொதுச் செயலர் பான் கீமூன், அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிங்டன் ஆகியோரைச் சந்தித்துப் பேசுவது பெரும்பாலும் உறுதியாகி விட்டது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
****************

தொடரும் அதே பல்லவி!
சிறிலங்கா அதிபரின் தூதுவராக ஐ.நாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அமைச்சர் மகிந்த சமரசிங்க, நேற்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரின் மூன்றாம் குழுக் கூட்டத்தின், பக்கநிலைச் சந்திப்பாக இது இடம்பெற்றதாக சிறிலங்கா அரசு கூறியுள்ளது.
ஆனால் 2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர் கொழும்புக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கைக்கு அமைய, சிறிலங்காவுடன் நடைபெறும் ஐ.நாவின் கலந்துரையாடலின் ஒருபகுதியாகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக ஐ.நா அறிவித்துள்ளது.
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக மேலதிக விளக்களையும் சிறிலங்கா தரப்பின் நியாயங்களையும் எடுத்துக் கூறவே, மகிந்த ராஜபக்ச, அமைச்சர் மகிந்த சமரசிங்கவை ஐ.நாவுக்கு அனுப்பியிருந்தார்.
அவர் சிறிலங்கா தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறியுள்ள போதும், ஐ.நா பொதுச்செயலர் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டுப் போரில் இருந்து முற்றாக மீள்வதற்கும், தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் பொறுப்புக் கூறுவது முக்கியமானது என்று ஐ.நா பொதுச்செயலர், மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக ஐ.நா செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
வடக்கில் மீள்குடியமர்வு மற்றும் மீள்கட்டுமானப் பணிகளுடன், கௌரவமான அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான தேசிய கலந்துரையாடல் நடத்தப்படுவதும் முக்கியமானது என்றும் பான் கீ மூன் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
நேற்றுக்காலை நடந்த இந்தச் சந்திப்பின் போது, எதிர்வரும் நவம்பர் 15ம் நாள் வெளியிடப்படவுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஒரு ஆண்டு கழித்து ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க சிறிலங்கா அரசின் சார்பில் மகிந்த சமரசிங்க காலஅவகாசம் கோரியதாகவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக இன்னர்சிற்றி பிரஸ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள மகிந்த சமரசிங்க, 2012 ஒக்ரோபரில் ஜெனிவாவில் நடைபெறும் மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்பில் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் பாலித கொகன்னவும், பிரதித் தூதுவர் சவீந்திர சில்வாவும் கலந்து கொண்டனர்.
****************

காலத்தை கடத்தும் மகிந்த
நாட்டின் உண்மை நிலைமை தொடர்பாக எந்தத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய சூழ்நிலைமைகள் குறித்து அறிந்து கொள்ள விரும்பும் எந்தவொரு தரப்பினையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கமும், தாமும் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராஜதந்திர மற்றும் ஜனநாயக ரீதியில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
இலங்கைக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்களே சுமத்தப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது அரசுத் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போரின் பின்னர் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அரசுத் தலைவர் விளக்கமளித்துள்ளார்.
சர்வதேசத்தை ஏமாற்ற மகிந்த ராஜபக்ச மேற்கொண்டு வரும் பொய்பரப்புரைகள் வெற்றியளிக்காது என மனித உரிமை அமைப்புக்கய் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
****************

சிறப்பு அறிக்கை - வலியுறுத்தும் அவுஸ்திரேலியா
மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக் கூறுவது தொடர்பாக கொமன்வெல்த் மாநாட்டில் சிறப்பு அறிக்கை ஒன்றை சிறிலங்கா வெளியிட வேண்டும் என்று அவுஸ்ரேலியா வலியுறுத்தியுள்ளது.
நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது அவுஸ்ரேலியப் பிரதமர் ஜுலியா கிலாட் இது குறித்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தியதாக சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க கூறியுள்ளார்.
ஆனால் கொமன்வெல்த் தலைவர்களின் முன்பாக பொறுப்புக் கூறுதல் குறித்து சிறப்பு அறிக்கை எதையும் வெளியிட முடியாது என சிறிலங்கா அதிபர் கூறிவிட்டதாகவும் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பொறுப்புக்கூறும் விவகாரங்கள் தொடர்பாக பேச விரும்பும் கொமன்வெல்த் நாடுகளுடன் தாராளமாக இருதரப்புப் பேச்சுக்களை நடத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் சிறிலங்கா அதிபர் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேசிய நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாகவும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நவம்பர் 19ம் நாள் தனது கையில் கிடைக்கும் என்றும் அதனை நாடாளுமன்றத்தின் ஊடாக வெளியிடவுள்ளதாகவும் அவுஸ்ரேலியப் பிரதமருக்கு சிறிலங்கா அதிபர் எடுத்துக் கூறியதாகவும், லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களால் அவுஸ்ரேலியாவில் சேகரிக்கப்படும் நிதி சிறிலங்காவுக்கு அச்சுறுதலை ஏற்படுத்துவதாகவும், அதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவுஸ்ரேலியப் பிரதமரிடம் சிறிலங்கா அதிபர் கேட்டுக் கொண்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
****************

அடுத்த மகாநாடு - சந்தேகமே
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமர்வில் சகல நாடுகளும் பங்கேற்பது சந்தேகமே என அவுஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.
அமர்வுகளில் குறிப்பிட்ட சில நாடுகள் பங்கேற்காமல் இருக்க வாய்ப்பிருப்பதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.
அடுத்த பொதுநலவாய நாடுகள் அமர்வில் கலந்து கொள்வது குறித்து குறிப்பிட்ட உறுப்பு நாடுகளின் அரசாங்கங்களே தீர்மானிக்க வேண்டும்.
இலங்கையின் நட்பு நாடுகள் அமர்வுகளில் பங்கேற்கும், ஏனைய நாடுகள் எவ்வாறான தீர்மானங்களை எடுக்கும் என்பது குறிப்பிட்டு கூற முடியாது.
இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே தற்போதைய முதன்மை குறிக்கோள் என கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.
இலங்கை அமர்வுகளைப் புறக்கணிக்கப் போவதாக ஏற்கனவே கனடா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
****************

வக்காளத்து வாங்கும் இந்தியா
இலங்கையில் அடுத்த வரும் பொதுநலவாய உச்சிமாநாடு நடத்தப்படுவதற்கு கனடாவும் வேறு சில நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இம்மாநாடு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட விடயம் என்பதால் இதையிட்டு பேசுவது பொருத்தமற்றது எனக்கூறி இலங்கையின் கௌரவத்தை இந்தியா காப்பாற்றியது என அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இலங்கையின் மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் தான் பங்குபற்றாமல் போகலாம் என கனேடிய பிரதமர் ஸ்ரீபன் ஹார்பர் முன்னர் தெரிவித்திருந்தார்.
அரசியல் நல்லிணக்கம், ஜனநாயக விழுமியங்கள், பதிலளிக்கும் கடப்பாடு என்பவற்றில் முன்னேற்றம் ஏற்படுவதையும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிநிதிகளுக்கு இந்த விடயங்களில் ஒத்துழைப்பு வழங்குவதையும் கனடா வலியுறுத்துகிறது என அவர் கூறினார். 
இந்திய வெளியுறவு செயலாளர், ஸ்ரீரஞ்சன் மத்தாய், 25 ஆம் திகதி நடந்த ஒரு செய்தியாளர் மாநாட்டில் அடுத்த வருட பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தும் தீர்மானம் 2009 ஆம் ஆண்டிலேயே மேற்கொள்ளப்பட்டது எனக் கூறினார்.
இது மீண்டும் பேசப்பட வேண்டிய வியடமல்ல என அவர் கூறினார்.
மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி, என்பவற்றை கண்காணிக்கவென ஒரு ஆணையாளரை பொதுநலவாயம் நியமிப்பதற்கு இந்தியா காட்டும் எதிர்ப்பு பற்றி வினவியபோது, இந்த விடயங்களை ஏற்கெனவே செயாளர் நாயகம் மற்றும் பொதுநலவாய அமைச்சர்களின் நடவடிக்கை குழு என்பன கவனித்து வருகின்றன என அவர் கூறினார்.
இரண்டாவதாக,  இந்நடவடிக்கை ஐ.நாவின் ஆணையாளர்கள் மேற்கொள்கின்றனர்.
அத்துடன் இந்த நடவடிக்கை ஏற்கெனவே நிதிப்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட பொதுநலவாய அமைப்புக்கு மேலதிக செலவை ஏற்படுத்திவிடும்.
புதிய அமைப்புகளை உருவாக்குப் பதிலாக ஏற்கெனவே உள்ள அமைப்புகளை மேலும் ஸ்திரப்படுத்துவதே சிறப்பானது என அவர் கூறினார்.
இச் செய்தியளார் மாநாட்டின் விபரங்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் உள்ளூர் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டன.
****************

அம்பலமாகும் பாதாள உலக அரசியல்
அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொல்லப்பட்ட முல்லேரிய சம்பவத்திற்கும், கொழும்பு பங்குச் சந்தை நிலைமைக்கும், சட்டவிரோத போதைப் பொருட்களுக்கும் தொடர்பிருப்பதாக ரி.என்.எல். தொலைக்காட்சியின் உரிமையாளரான ஷான் விக்கிரமதுங்க தெரிவித்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தொடர்புகள் குறித்து தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வெளிப்படுத்திய பின் தனக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாகவும் ஷான் விக்கிரமதுங்க பிபிசி சந்தேஷயவிடம் தெரிவித்துள்ளார்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் ஆதரவாளர்கள் எனக்கூறப்படுபவர்களால்; கொல்லப்பட்ட பின்னர் இந்த தொடர்பு அம்பலமாகியுள்ளது என பிபிசி சந்தேஷயவின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துமிந்த சில்வாவும் தலையில் காயமடைந்த இச்சம்பவத்தையடுத்து போதைப்பொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.
சந்தையில் சட்டவிரோத போதைப்பொருள் இல்லாத நிலையில் பங்குச்சந்தையும் சரிந்துள்ளது என விக்கிரமசிங்க விளக்கினார்.
இதை தாம் ஆராய்ந்தபோது போதைப்பொருள் சந்தைக்கும் இப்பங்குச்சந்தைக்கும் தொடர்புள்ளதை தாம் அவதானித்தோம் என அவர் கூறினார் என்று பிபிசி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
****************

தடுத்து வைப்பது பொருத்தமல்ல
அவுஸ்திரேலியாவிலுள்ள சிட்னி, விலாவூட் தடுப்பு முகாம், கைதிகளைத் தடுத்து வைப்பதற்கு ஓர் உகந்த இடமல்ல என்று குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவென் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்தத் தடுப்பு முகாமில் இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அவரது தற்கொலை தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவென் இதனைத் தெரிவித்தார்.
தற்கொலை செய்துகொண்டவர் 2010 ஆம் வருட மார்ச் பிற்பகுதியிலிருந்து இத்தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் இவர் ஓர் அகதி என கணிப்பீடு செய்யப்பட்டார்.
இது அவுஸ்திரேலிய பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பின் விசாரணைக்காக காத்திருக்கு 462 பேரில் இவரும் ஒருவராக இருந்தார்.
தற்கொலை புரிந்து கொண்டவரின் விடயம் ஒரு சிக்கலானது.
இங்குள்ளவர்கள் பல நிலைப்பாடுகளில் உள்ளவர்கள். அவர்களில் இவரும் ஒருவர்.
இவர் தேசிய பாதுகாப்பிலிருந்து தப்புவதற்காக இம்முயற்சியில் ஈடுபட்டவரா என்பதையும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் பரிசீலிக்க வேண்டும் என்றும் போவென் புதன்கிழமை சிட்னியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பொருத்தமான பாதுகாப்பு முகவர் நிறுவனத்துடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய பாதுகாப்புப் புலனாய்வு நிறுவனம் மற்றும் அதன் அறிவுரை இந்தத் தற்கொலை விவகாரத்தில் பொருந்தாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
****************








Wednesday 26 October 2011

செய்திகள் 26/10


வழக்கை நிராகரித்த பின் போர்க் குற்ற விசாரணைக்கு வலியுறுத்தல்?
இலங்கையில் மோதல் நடைபெற்ற இறுதிக் காலகட்டத்தில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து முழு அளவிலான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்று அவுஸ்திரேலியா நேற்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறது.
இலங்கைக்கு எதிராகச் சுமத்தப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்று சர்வதேச சமூகம் வலியுறுத்தி வரும் நிலையிலும், பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவுஸ்திரேலியா சென்றுள்ள நிலையிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது மாநாட்டுக்கு முன்னோடியாக இடம்பெறும் வர்த்தக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் அவுஸ்திரேலியாவின் ஒத்த எண்ணப்பாடுகளைக் கொண்ட உலக நாடுகள் கூறுவதைப்போல, போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகள் முழு அளவில் நடைபெறவேண்டும் என்பதை அவுஸ்திரேலியாவும் வலியுறுத்துவதாகச் சுட்டிக்காட்டினார்.
தீவிரமான குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள் இறுதி யுத்த கால கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுவது விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவுஸ்திரேலிய பிரதமர் வலியுறுத்தினார்.
முன்னதாக அவுஸ்திரேலியாவைப் போன்றே கனடாவும் இவ்வாறு வலியுறுத்தலொன்றை விடுத்திருந்தது.
போர்க்குற்றங்கள் சம்பந்தமான நீதியான விசாரணை நடக்காத பட்சத்தில் 2013 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெறவுள்ளதாகக் கருதப்படும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டைப் பகிஷ்கரிக்க வேண்டிவருமெனவும் கனடா எச்சரித்திருந்தது.
எவ்வாறாயினும், போர்க்குற்றச்சாட்டுகளை முற்றுமுழுதாக நிராகரிக்கும் இலங்கை அரசு, 50 இற்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் பொதுநலவாய அமைப்பு இந்த விவகாரத்தினால் பிளவுபட்டுவிடும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு எதிராகப் போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென வலியுறுத்தி தமது நாட்டில் தீவிர அழுத்தங்கள் வந்துள்ள நிலையில் அவுஸ்திரேலிய பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
********************

பாரபட்டமாக நடக்கும் அவுஸ்திரேலியா!
சிறிலங்கா அதிபருக்கு எதிரான போர்க்குற்ற வழக்கை விசாரிக்க முடியாமல் தடுத்ததன் மூலம் அவுஸ்ரேலிய அரசாங்கம் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளதாக அவுஸ்ரேலியாவில் வாழும் தமிழ்ச் சமூகத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
அவுஸ்ரேலிய அரசின் இந்த முடிவு அவுஸ்ரேலிய தமிழ்ச் சமூகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக ஏபிசி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அவுஸ்ரேலிய அரசின் முடிவு தமக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரசின் பெண் பேச்சாளரான சாம்பரி, ஏபிசியிடம் தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலிய நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும் திகதியை அறிவித்த நிலையில், அரசியல்வாதி ஒருவர் அதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று அறிவித்தது தமக்குப் பெரிதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
பாரபட்சமாக தாம் நடத்தப்பட்டுள்ளதாகவே உணர்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா அதிபருக்கு எதிரான போர்க்குற்ற வழக்கை விசாரிக்க அனுமதி அளித்தால் அது அனைத்துலக சட்டங்களை மீறியதாகி விடும் என்று அவுஸ்ரேலிய சட்டமா அதிபர் மக் கிளெல்லன்ட் கூறியிருப்பது தவறானது என்று முன்னாள் அவுஸ்ரேலிய இராஜதந்திரியான புரூஸ் ஹை ஏபிசியிடம் தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபரின் இந்த முடிவு முற்றிலும் அரசியல் ரீதியானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்ரேலிய சட்டம் பற்றியோ அனைத்துலக சட்டம் பற்றியோ அவர் பார்க்கவில்லை.
கொமன்வெல்த் மாநாட்டின் சூழ்நிலை கருதி அவர் அரசியல் ரீதியாகவே முடிவெடுத்துள்ளார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபரைக் காப்பாற்ற அவுஸ்ரேலிய அரசு எடுத்துள்ள இந்த முடிவு, அங்கு வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
********************

அவுஸ்திரேலியாவில் பேச்சு நடத்தும் மகிந்த
கொமன்வெல்த் உச்சிமாநாட்டில் பங்கேற்க எட்டு நாள் பயணமாக அவுஸ்ரேலியா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட்டைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
இன்று அவர் அவுஸ்ரேலியப் பிரதமர் ஜுலியா கிலாட்டை சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய சந்திப்பின் போது அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சருடன் இருதரப்பு விவகாரங்கள், அவுஸ்ரேலியாவுடனான உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளுதல், கொமன்வெல்த் மாநாடு, 2013இல் சிறிலங்காவில் நடத்தப்படவுள்ள கொமன்வெல்த் மாநாடு ஆகியன குறித்து கலந்துரையாடப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் தங்கியுள்ள விடுதியி இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் பங்கேற்றிருந்தார்.
இதனிடையே வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டை முன்னிட்டு பேர்த் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கொமன்வெல்த் தலைவர்கள் மாநாடு நடைபெறும் போது பேர்த் நகரில் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும், போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவர் என்றும் தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்பாளர்கள் தமது கருத்தை அமைதியாக வெளிப்படுத்தலாம், ஆனால் கொமன்வெல்த் மாநாட்டிலோ, பொது நிகழ்வுகளிலோ தலையிட அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
********************

அவுஸ்திரேலியாவில் தமிழ் இளைஞர் தற்கொலை
தீபாவளியன்று சமயச் சடங்கில் பங்கேற்க அவுஸ்ரேலிய அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்ட ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் சிட்னி தடுப்புமுகாமில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சிட்னி குடிவரவு வதிவிட வீடுமைப்புத் தொகுதியில், நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்ட இவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்ததாக அவுஸ்ரேலிய குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று அதிகாலை 3 மணியளவில் இவர் மரணமாகியுள்ளார்.
இவரது மரணம் இடம்பெற்ற சூழல் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அவுஸ்ரேலிய காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வில்லாவூட் தடுப்பு முகாமில் கடந்த ஆண்டு அடுத்தடுத்து நிகழ்ந்த நான்கு தற்கொலைகளை அடுத்து கூரை மீதேறி போராட்டம் நடத்தியவர்களில், இன்று மரணமான இளைஞரும் ஒருவராவார்.
சூட்டி என்று நண்பர்களால் அழைக்கப்பட்ட இவர் அனைவருடனும் நட்புடன் பழகக் கூடியவர் என்றும் அனைவருக்கும் உதவும் மனப்பாங்குடையவர் என்றும் அகதிகளுக்கான நடவடிக்கை கூட்டமைப்பின் பேச்சாளர் இயன் றின்ரோல் தெரிவித்துள்ளார்.
எனினும் இவரது முழுப்பெயர் மற்றும் சொந்த இடம் பற்றிய தகவல்களை அவுஸ்ரேலிய அதிகாரிகள் இன்னமும் வெளியிடவில்லை.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமய விழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால் இவர் வெறுப்படைந்திருந்தார் என்றும் அதுபற்றி நண்பர்களுடன் பேசியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இவர் இது தொடர்பாக விண்ணப்பம் செய்தது தனக்குத் தெரியும் என்றும், ஆனால் அவரது விண்ணப்பத்தை அதிகாரிகள் நேற்று நிராகரித்து விட்டதாகவும் அகதிகளுக்கான நடவடிக்கை கூட்டமைப்பின் பேச்சாளர் இயன் றின்ரோல் குறிப்பிட்டுள்ளார்.
மரணமான இளைஞரின் உறவினர்கள் வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர்களுக்குத் தகவல் பரிமாற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவுஸ்ரேலிய காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இருபதுகளின் நடுப்பகுதி வயதையுடைய இந்த இளைஞரின் அடைகலக் கோரிக்கை மூன்று மாதங்களுக்கு முன்னர் ஏற்கப்பட்டிருந்தது.
ஆனாலும், பாதுகாப்பு அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தினால், அவர் விடுவிக்கப்படாமல் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் தேடிய இவர் முன்னதாக வில்லாவூட் தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இவருடைய இளைய சகோதரன் சிறிலங்காவில் வாழ்வதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனிடையே இவரது மரணம் மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு என்று அவுஸ்ரேலியாவின் முன்னாள் குடிவரவு அமைச்சர் கிறிஸ் இவான்ஸ் தெரிவித்துள்ளார்.
********************

அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட அழைப்பு விடுக்கும் ரணில்
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மக்களின் அதிகாரங்களை பறித்துக் கொண்டுள்ளது, இவற்றை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு பதவிகளை வழங்கும் நிகழ்வு ஒன்று சிரிகொத்தவில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட போது ரணில் விக்ரமசிங்க இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது அரசாங்கம் பல்வேறு வழிகளில் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டது.
அரசுத் தலைவர்த் தேர்தலுக்கு நிகரான முக்கியத்துவத்துடன் நடைபெற்ற கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஆளும் கட்சியை வீழ்ச்சியடைச் செய்தது.
காவல்துறை சேவை அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது.
17ம் திருத்தச் சட்ட மூலத்தை ரத்து செய்ததன் மூலம் அரசாங்கம் நாட்டின் சட்டம் ஒழுங்கை கையகப்படுத்திக் கொண்டுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
********************

அச்சம் வேண்டாம் என அழைக்கும் சரத் பொன்சேகா
லிபியாவில் இடம்பெற்ற நிகழ்வுகளின் மூலம் மக்கள் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார
ஊழல் அரசியல்வாதிகளுக்கும், வாகனத் தொடரணிகளுக்கும் மக்கள் அஞ்ச வேண்டிய அவசியமில்லை.
பாதாள உலகக் குழுவினரின் நடவடிக்கைகளைக் கண்டு அச்சமடையத் தேவையில்லை.
அநீதிக்கு எதிரான போராட்டத்தின் போது கட்சி பேதங்களைக் களைந்து அனைவரும் அணி திரள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவ பரிசோதனைகளுக்காக சென்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
********************

சர்வதேச சமூகத்தின் பாதுகாப்பு கோரும் பல்கலைக்கழக மாணவர்கள்
யாழ்பல்கலைக்கழக மாணவர் மீது நடாத்தப்படும் தாக்குதலின் தொடர்ச்சியாக மற்றுமொரு மாணவனும் இனந்தெரியாத நபர்களின் மிலேச்சதனமான தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார்.
இந்த தாக்குதலுக்கு இலக்காகி உள்ளவர் கலைப்பீட நான்காம் வருடத்தைச்சேர்ந்த செல்வன் இராஜவரோதயம் கவிராஜன் எனும் மாணவனாவார்.
கடந்த 22ஆம் திகதி உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு பரந்தன் பூநகரி வீதியால் தனது வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது இரவு 8.45மணியளவில் ஆட்டோவில் வந்த தாக்குதலாளிகள் சரமாரியாக கற்களால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
மாணவர் ஒன்றியத்தலைவர் தாக்கப்பட்டு பல்கலைக்கழக வகுப்புப் பகிஸ்கரிப்புப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ள அதே காலப்பகுதியில் இம்மாணவன் தாக்கப்பட்டுள்ளார்.
மாணவர் தாக்கப்படுவது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தினர் வடபகுதி இராணுவத்தளபதி மற்றும் யாழ்ப்பாண காவல்துறை அத்தியட்சகர் ஆகியோருடன் இடம் பெற்ற பேச்சுவார்த்தையில் மாணவர்கள் எந்தவித அச்சமுமின்றி தமது கல்விச் செயற்பாட்டைத் தொடரலாம் என்று வடபகுதி இராணுவத்தளபதி உறுதி மொழி வழங்கி சுமார் 48 மணித்தியாலத்திற்குள் மற்றுமொரு மாணவன் தாக்கப்பட்டுள்ளது பலத்தசந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது.
மேலும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பகிஸ்கரிப்பை இடைநிறுத்துவது தொடர்பாக மாணவர் ஒன்றியம் சாதகமாக பரிசீலித்து வரும் இச்சூழ்நிலையில் மற்றுமொரு மாணவன் தாக்கப்பட்டுள்ளமையால் இது தொடர்பாக ஆழமாக ஆராய வேண்டி உள்ளது.
எனவே இத்தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதோடு பாதுகாப்புத்தரப்பினர் உறுதி மொழி வழங்கிய பின்னரும் இப்படியான உயிர் அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்கின்ற நிலையில் எவ்வாறு மாணவர்கள் தமது கல்வியை சுமூகமாகத்தொடர முடியும் என்ற கேள்வி எழுகின்றது.
எனவே தமிழ் பேசுகின்ற மாணவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச நாடுகளை மனிதாபிமான அடிப்படையில் வேண்டிக்கொள்வதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்ஒன்றியம், விடுத்துள்ள அறிக்கையில் கோரியுள்ளது.
********************

ஆட்சியாளர்களின் கொலை கலாச்சாரத்தை கண்டு அஞ்சும் ஆட்சியாளர்கள்?
நாடு முழுவதும் கொலை கலாசாரம் உருவாகி உள்ளதாகவும் கடந்த 8 ஆம் திகதி கொட்டிகாவத்தை- முல்லேரிய பிரதேசத்தில் ஏற்பட்ட சம்பவம் போன்ற சம்பவங்கள் மீண்டும் ஒரு முறை ஏற்படாத வகையில் கூட்டாகவோ, கட்சி என்ற முறையிலோ தனித்தனியாகவும் ஒன்றாகவும் இணைந்து மேற்கொள்ள வேண்டிய அனைத்து பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொட்டிக்காவத்தை- முல்லேரிய பிரதேச சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்னிலையில் பதவியேற்றுக்கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இம்முறை 23 உள்ளுராட்சி சபைகளுக்கு நடைபெற்ற தேர்தல் தினம் கொலன்னாவ அரசியல் வரலாற்றிலும், நாட்டில் அரசியல் வரலாற்றிலும் அழியாத தினமாக மாறியது.
இந்த தினத்தில் ஏற்பட்ட துரதிஷ்டவசமான மற்றும் கவலைகுரிய சம்பவத்தின் பிரதிபலன்கள் எவ்வித பேதமும் இன்றி சகலரும் உணரும் வகையில் இருந்தது.
பல காலமாக தம்முடன் அரசியலில் ஈடுபட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மரணமும், பிரதேசத்திற்கு பொறுப்பான அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை ஆகிய இரண்டு சம்பவங்களும், தமக்கு மிகவும் கவலையளிக்கும் சம்பவங்களாகும் என குறிப்பிட்டார்.
தேர்தலுக்கு முன்னர் இருந்த விருப்பு வாக்கு தொடர்பான குரோதங்கள் இத்துடன் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
********************

ஸ்ரீலங்காவில் கால் பதிக்கும் பாகிஸ்த்தான் இராணுவம்?
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த பத்து அதிகாரிகள் முல்லைத்தீவுக்கு செல்லவுள்ளதாக கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதுரகம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த இந்த அதிகாரிகள் பத்துப் பேரும் கண்ணிவெடிகளை அகற்றும் நிபுணர்கள் பாகிஸ்தான் தூதரகம் கூறியுள்ளது.
இரு நட்புநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே இந்தப் பயணம் அமைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேணல் சபீர் நிசார் தலைமையில் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் பத்துப் பேரும் கடந்த 13ம் திகதி சிறிலங்கா சென்றிருந்தனர்.
எதிர்வரும் 28ம் திகதி வரை இவர்கள் அங்கு தங்கியிருப்பர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் சூடான் மற்றும் கம்போடியாவில் கண்ணிவெடிகளை அகற்றும் மனிதாபிமான பணியில் ஈடுபட்டவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் குழு சிறிலங்கா சென்று இரண்டு வாரங்களாகியுள்ளன.
ஆனாலும் இவர்கள் நாடு திரும்புவதற்கு மூன்று நாட்கள் இருக்கின்ற நிலைலேயே இதுபற்றிய செய்திகள் வெளியே கசிய விடப்பட்டுள்ளன.
அத்துடன் கண்ணிவெடிகளை அகற்றும் நிபுணர்களான பாகிஸ்தான் படை அதிகாரிகள் இன்னமும், வன்னியில் கண்ணிவெடிகள் அகற்றப்படும் பகுதிகளை சென்று பார்வையிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
********************