Wednesday, 26 October 2011

செய்திகள் 25/10


அவுஸ்திரேலிய வழக்கு
அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள நிலையில், அவருக்கு எதிராக மெல்போர்ன் நீதிமன்றம் ஒன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவுஸ்திரேலிய பிரஜையான அருணாச்சலம் ஜெகதீஸ்வரன் என்பவரே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஆகாய மார்க்கமாகவும் தரை மார்க்கமாகவும் குண்டுகளைப் போட்டு பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் இறப்புக்கு அரசுத் தலைவர் மஹிந்த காரணமாக இருந்தமை மற்றும் பாடசாலைகள், வைத்தியசாலைகள், சமூக நல நிலையங்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை உட்பட பல குற்றச்சாட்டுகள் இலங்கை அரசுத் தலைவர் மீது சுமத்தப்பட்டே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை எதிர்வரும் 29 ஆம் திகதி மெல்போர்ன் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக முறைப்பாட்டாளர் சார்பான சட்டத்தரணி ரொப் ஸ்டெரி தெரிவித்துள்ளார்.
*****************

வழக்கின் குழப்பம்
மத்திய அரசின் அனுமதியின்றி இலங்கை அரசுத் தலைவருக்கு எதிராக அவுஸ்திரேலிய நீதிமன்றில் போர்குற்ற வழக்குத் தொடர முடியாது என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பிறந்த அருணாச்சலம் ஜெகதீஸ்வரன் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ்விற்கு எதிராக மெல்பேர்ன் நீதிமன்றில் போர்குற்ற வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
பொது நலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் பேர்த் சென்றுள்ள நிலையில் இவ்வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசின் அனுமதியின்றி அவ்வாறு வழக்குத் தொடர முடியாதென அவுஸ்திரேலிய பிரதமர் இன்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறான வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி எதுவும் செய்ய முடியாதென அவுஸ்திரேலிய ஏபீசி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமா அதிபருக்கு இவ்வழக்குத் தொடர்பில் எதுவும் அறிவிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இதுகுறித்து சட்டமா அதிபர் ரொபட் மிக்லேன்டின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கேதீஸ்வரனின் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
இருந்த போதும் இந்த வழக்கு குறித்த எந்த ஆவணமும் தமக்குக் கிடைக்கவில்லை என சட்டமா அதிபர் ரொபட் மிக்லேன்டின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் பிராந்திய காவல்துறையினர் இது தொடர்பில் அறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து கவலையடைவதாகக் கூறிய அவுஸ்திரேலிய பிரதமர் போர் குற்ற விசாரணைக்கு வலியுறுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
*****************

சனல் 4 காணொளிக்கு அங்கீகாரம்
இலங்கையில் போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்து சனல்4 ஊடகத்தில் வெளியாகிய பெரும் நெருக்கடிகளை சிறிலங்கா அரசிற்கு உண்டுபண்ணியிருந்தது.
இந்தக் காணொளியானது பக்கச்சார்பான முறையிலோ அல்லது ஊடக விதிகளுக்கு முரணாகவோ தயாரிக்கப்படவில்லை என பிரிட்டனின் ஊடக கட்டுப்பாட்டுத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இறுதிக் கட்ட போரின் போது இலங்கையில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் ஸ்ரீலங்காவின் கொலைக்களம் என்னும் காணொளியை வெளியிட்டிருந்த சனல் 4 ஊடகத்திற்கு எதிராக 118 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறதது.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது.
பிரிட்டனின் தொடர்பாடல் கைத்தொழில் சுதந்திரம் மற்றும் போட்டி தொடர்பான அதிகாரசபையினால் செனல்4 ஊடகத்தின் காணொளி தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்தக் காணொளியானது ஊடக விதிகளை மீறி வெளியிடப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதாக சீ21 என்ற சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
*****************

அமெரிக்கப் பயணம்
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அழைப்பை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா, ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இன்று அதிகாலை அமெரிக்கா நோக்கிச் சென்றுள்ளனர்.
அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடன் எதிர்வரும் 26, 27, 28 ஆகிய நாட்களில் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
பின்னர் நியூயோர்க்கில் உள்ள தமிழ் அமைப்புக்களின் ஆண்டு விழாக்களிலும் பங்குபற்றவுள்ளனர்.
அதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமசந்திரன் தவிர ஏனையவர்கள் எதிர்வரும் 29ம் திகதி கனடாவுக்கு செல்கின்றனர்.
ஒக்டோபர் 30ம் திகதி காலை இவர்கள் கடனாவிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு அன்று மாலை 6.30 மணிக்கு இரவு விருந்தும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
31ம் திகதி திங்கட்கிழமை கனேடிய வெளியுறவு திணைக்கள அதிகாரிகளையும் கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்கக் கனேடிய வெளியுறவு அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
நவம்பர் 01ஆம் திகதி இரா.சம்பந்தனும், எம்.ஏ. சுமந்திரனும் மீண்டும் ஒரு முக்கிய சந்திப்புக்காக அமெரிக்கா செல்கிறார்கள்.
மாவை சேனாதிராசா நவம்பர் 03ஆம் திகதிவரை கனடாவில் தங்கி இருப்பார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களின் கனடா நிகழ்ச்சி ஒழுங்குகளை கனடாவிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்கிறது.
அந்த ஒழுங்குகளுக்கு அப்பால் வேறு எந்த நிகழ்ச்சியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொள்ள மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
*****************

சர்வாதிகாரிகளின் நிலை
லிபியாவின் சர்வாதிகாரியான முகம்மர் கடாபி நாயைப் போன்று பதுங்குகுழி ஒன்றில் வைத்துச் சுடப்பட்டார்.
இதுதான் சர்வாதிகாரிகளின் இறுதி முடிவு என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களை நேசித்து மக்களுக்கான ஆட்சி இலங்கையில் நிலவ வேண்டுமானால் 18 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நீக்க வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு இன்று வருகை தந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பதவிகளை நீக்குமாறு முதலாவது நீதிமன்றம் முன்வைத்த சிபார்சுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை ஒன்று எதிர்வரும் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளதால் அன்றைய தினமே இந்த வழக்கையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரோஷினி மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இருதரப்பு சட்டத்தரணிகளும் குறிப்பிட்டனர்.
அதற்கு அனுமதி வழங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றம் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் திகதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தது.
*****************

வழக்கு தாக்கல்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட உள்ள காணிப் பதிவுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது.
காணிப் பதிவைமேற்கொள்ள இடைக்கால தடை உத்தரவு மேற்கொள்ளுமாறும் இது தொடர்பான காணி சுற்றுநிருபத்தை ரத்துச் செய்யுமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா சம்பந்தன் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் காணி ஆணையாளர் நாயகம், காணி, காணி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், முப்படை தளபதிகள், சட்ட மாஅதிபர் அடங்கலாக 9 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பிம் சவிய திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள காணிகள் இவ்வாறு பதியப்பட உள்ளதோடு இதன் மூலம் தமது அடிப்படை உரிமை மீறப்படுவதாக மனுதாரர் கூறியுள்ளார்.
காணிப்பதிவு தொடர்பான சுற்றுநிருபம் சட்டத்துக்கு முரணானது எனவும் இதனை செயற்படுத்த தடைவிதிக்குமாறும் அதில் கோரப்பட்டுள்ளது.
இந்த சுற்றுநிருபத்தின்படி புதிய காணிகளை விநியோகிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதோடு இடம் பெயர்ந்தவர்களுக்கு காணி வழங்குவதும் தடுக்கப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
*****************

அறிக்கை கோரும் ஐதேக
பாரதலஷ்மனின் படுகொலை தொடர்பில் நீதியான விசாரணைகளை நடத்தி அது தொடர்பான அறிக்கையொன்றை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டில் சட்டங்கள் நடைமுறைப்படுத்தபடாது காட்டுச் சட்டம் அமுல்படுத்தப்படுவது மிகவும் அபாயகரமான நிலைமை எனவும் தற்போது நடைபெறும் நிலைமைகளை ஆராயும் போது அந்த நிலைமை தெளிவாக புலப்படுவதாதகவும் அவர் தெரிவித்தார்.
யுத்தத்தின் பின்னர் நாட்டில் முன்னேற்றம் கண்டுள்ள ஒருவிடயமாக அதனைக் காண்பதாகவும் அந்த அபிவிருத்தியே ஏற்பட்டுள்ளதாகவும் கருணாதிலக்க கூறினார்.
பாதாள உலகம் தொடர்பிலும் குடு வியாபாரம் தொடர்பிலும் நாட்டு மக்கள் நன்றாக புரிந்துகொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
லிபிய தலைவர் கடாபியின் கொலை தொடர்பிலான விபரங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிடவேண்டும் என இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் கேட்டுள்ளமை சிறந்த விடயமெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார
*****************

சூடுபிடிக்கும் ஐதேக
எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெற உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் சூடுபிடிக்குமென ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண மற்றும் மாகாண சபை உறுப்பினர் சிரால் லக்திலக்க ஆகியோரது கட்சி அங்கத்துவம் இடை நிறுத்தப்பட்டதன் பின்னர் நடைபெறும் முதலாவது செயற்குழு கூட்டமாக இது அமைவதனால் இது முக்கியத்துவம் பெறுவதாகவும் மேலும் கூறப்படுகின்றது.
எதிர்க்கட்சித் தலைவரினால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த முன்மொழிவை வாபஸ் பெறும் வரையில் தொடர்ந்தும் இதற்கான எதிர்ப்பினைத் தெரிவிப்பதாகவும் ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
*****************





Monday, 24 October 2011

செய்திகள் 24/10


அமெரிக்க பயணம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை அமெரிக்காவுக்கான விஜயத்தினை மேற்கொள்கின்றனர்.
நாளை அதிகாலை இலங்கையிலிருந்து அமெரிக்கா நோக்கி இவர்கள் புறப்படவுள்ளனர்.
இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ்பிரேமச்சந்திரன், எம். சுமந்திரன் ஆகியோரே அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ அழைப்பினையேற்றே இவர்கள் அங்கு செல்கின்றனர்.
அமெரிக்காவில் இவர்கள் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹிலாரி கிளின்டன், தெற்காசிய விவவாரங்களுக்கான அமெரிக்க பிரதி வெளிவிவகார செயலாளர் ரொபட் ஓ பிளேக் உட்பட முக்கியஸ்தர்களை சந்தித்து பேசவுள்ளனர்.
இவர்கள் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனையும் சந்திக்கலாமென எதிர்வு கூறப்படுகின்றது.
அமெரிக்க விஜயம் தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்ந்திரனிடம் கேட்டபோது, அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளும் தாம் அந்த விஜயத்தை முடித்துக்கொண்டு கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும் செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டே இந்த நாடுகளுக்கு தாம் செல்வதாக குறிப்பிட்டார்.
இந்தநாடுகளில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து தாம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
எனினும் விஜயம் மேற்கொள்கின்ற மூன்று நாடுகளிலும் தாம் சந்திக்கவிருக்கின்ற பிரமுகர்கள் குறித்த நிகழ்ச்சிநிரல் அந்தந்த நாடுகளுக்கு சென்ற பின்னரே தயாரிக்கப்படும்.
எனவே இதுகுறித்து தற்போது உறுதிப்படுத்துவது கடினமானதாகும் என்று தெரிவித்தார்.
நாளை அமெரிக்கா செல்லும் கூட்டமைப்பினர் மூன்று நாடுகளுக்கான விஜயத்தினை மேற்கொண்டு இரண்டு வாரங்களுக்கு பின்னரே நாடு திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
******************

அவுஸ்திரேலிய பயணம்
கொமன்வெல்த் அமைப்பில் 11 நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு மற்றும் மனிதஉரிமைகளுக்கான ஆணையாளர் பதவியை உருவாக்குவது தொடர்பான யோசனையை பேர்த் மாநாட்டில் சிறிலங்கா கடுமையாக எதிர்க்கவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று அவுஸ்ரேலியா புறப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் முடிவில் அடுத்த கூட்டத்தை நடத்தவுள்ள சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச, அவுஸ்ரேலியப் பிரதமர் ஜுலியா கிலாட்டிடம் இருந்து கொமன்வெல்த் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவுள்ளார்.
அத்துடன் 2009இல் போர்ட ஒவ் ஸ்பெயினில் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டில் முன்னாள் மலேசிய பிரதமர் தலைமையில் கானா, ஜமைக்கா, பாகிஸ்தான், உகண்டா, அவுஸ்ரேலியா, மொசாம்பிக், பிரித்தானியா, கயானா, கனடா, கரிபாதி ஆகிய 11 நாடுகளின் வல்லுனர்கள் குழுவினால் பரிந்துரை செய்யப்பட்ட ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு, மனிதஉரிமைகள் ஆணையாளர் பதவியை உருவாக்கும் யோசனை குறித்து இந்த மாநட்டில் விவாதிக்கப்படவுள்ளது.
சுதந்திரமான இந்தப் பதவியை கொமன்வெல்த் அமைப்பில் உருவாக்குவதற்கு சிறிலங்கா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்த பதவியை உருவாக்கும் முடிவை உடனடியாக எடுப்பதற்கு பிரித்தானியா, கனடா, நியுசிலாந்து ஆகிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் இந்த ஆணையாளர் பதவி தமக்கு ஆபத்தாக அமைந்து விடும் என்று சிறிலங்கா அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தை விடுதலைப் புலிகளின் பரப்புரைகளை ஊக்குவிக்கவே பயன்படுவதாகவும், இதுவே இந்தப் பொறிமுறை தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு சான்றாக இருப்பதாகவும் சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளன.
பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா போன்ற கொமன்வெல்த் நாடுகளின் முக்கிய அரசியல்கட்சிகளின் ஆதரவை விடுதலைப் புலிகள் பெற்றிருப்பதாகவும், இதனால் இந்த ஆணையாளர் பதவியை உருவாக்குவது ஆபத்தானது என்று கருதுவதாகவும், சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.
******************

சர்வாதிகாரிகளுக்கு எச்சரிக்கை
லிபியாவின் மக்கள் உரிமைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட முகம்மர் கடாபியின் ஆட்சி பின்னர் மக்களை அடக்கும் சர்வாதிகார, குடும்ப ஆட்சியாக மாறியமையே அவரது அழிவுக்குக் காரணமாக அமைந்தது என இடதுசாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை கல்கிஸை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
உலகின் குடும்ப சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு கடாபியின் மரணம் சிறந்த பாடமாகுமென்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில், லிபிய மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து அம்மக்களுக்கு சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் போராட்டத்தை ஆரம்பித்து ஆட்சியை கைப்பற்றியவர் கடாபி.
ஆனால் காலப் போக்கில் மக்களை அடக்கி ஒடுக்கி குடும்ப ஆட்சியை, சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்தார்.
இதனால் நசுக்கப்பட்ட மக்கள் நாட்டு தலைமைத்துவத்தின் மீது அதிருப்தியும் ஆத்திரம் வெறுப்பும் அடைந்தனர்.
மக்களின் எதிர்ப்பை சம்பாதித்ததால் கிளர்ச்சி வெடித்தது.
இறுதியில் உயிழந்தார். இது சண்டையின் போது நடந்ததா அல்லது கைது செய்யப்பட்டதன் பின்னர் நடந்ததா என்பது பற்றி தெரியாது.
ஆனால், இது தொடர்பில் கண்ணீர் விட முடியாது.
அதேவேளை, கைது செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தால் அது மனித உரிமை மீறலாகும்.
அத்துடன் கடாபியின் இந்த முடிவானது சர்வாதிகார குடும்ப ஆட்சியாளர்களுக்குச் சிறந்த பாடமாகும் என்றும் தெரிவித்தார்.
******************

குற்றஞ்சாட்டப்பட்டவர் கடத்தல்
முல்லேரியச் சம்பவத்தின் போது உயிரிழந்த கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அரசுத் தலைவரின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வரின் கொலை தொடர்பான சந்தேக நபர்களில் ஒருவராகக் கருதப்பட்ட பாதாள உலகத்தவரான கராட்டே தம்மிக ரம்புக்கன, வல்பொல் பிரதேசத்தில் வைத்து நேற்று அதிகாலை கடத்திச் செல்லப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இனந்தெரியாத குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்ட இவர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
கராட்டே தம்மிக்க என பாதாள உலகத்தினரால் அழைக்கப்படும் இவர், கூலிக்குக் கொலைகளைச் செய்தல், கப்பம் பெறல், பாரியளவில் போதைப் பொருள் விற்பனை செய்தல் போன்றவற்றில் கைதேர்ந்தவராவார்.
இவர் அரசியல்வாதிகளுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
******************

13வது திருத்தத்தை நிராகரிக்க கோரிக்கை
13 ஆவது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்டதே மாகாண சபையாகும்.
அந்த மாகாண சபைக்கான தேர்தலின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பு போட்டியிடுமாயின் அது இனத்தை விற்பதற்குச் சமனானதாகும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
முன்னணியின் உபதலைவர் தலைமையில் கொழும்பு -07 இலுள்ள அவரது வாசஸ்தலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாணசபைத் தேர்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரிக்க வேண்டும்.
அது ஒற்றையாட்சியின் கீழ் உருவாக்கப்பட்டதொன்றாகும் அங்கு ஆளுநருக்கு புத்திமதி கூறுவதற்கே முதலமைச்ருக்கு அதிகாரம் இருக்கின்றது.
தேவையில்லாத தேர்தல் என்பதனை நிரூபிக்கவேண்டும் என்பதுடன் தேவையில்லாத சலுகைகளுக்காகப் பின்னால் ஓடாத புத்திஜீவிகளை மாகாண சபைத் தேர்தலில் நிச்சயமாக களமிறக்கி எமது பலத்தை வேறுவழியில் நிரூபிக்கலாம் எனத் தெரிவித்தார்.
மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டால் அது ஒற்றையாட்சியை அங்கீகரிப்பதற்கான செயற்பாடாகும் என்பதுடன் தமிழ் இனத்தை விற்பதற்கு சமமானதாகும்.
மாகாண சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கீகாரம் கொடுக்கக்கூடாது என்பதுடன் இடைக்கால தீர்வு என்பது அப்பட்டமான பேய்க்காட்டலாகும் என்றும் குறிப்பிட்டார்.
******************

கிளர்ச்சிக்குழுவின் கருத்தரங்கு
ஜேவிபியின் கிளர்ச்சி குழு நாடு முழுவதும் தொடர் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்துள்ளது.
ரோஹன விஜேவீரவின் உரிமைகளை நாம் பாதுகாப்போம் என்ற தொணிபொருளில் சுமார் 50 கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த குழுவின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதன் முதலாவது கருத்தரங்கு நாளை மாலை கொழும்பு பொது நூலகத்தில் இடம்பெற உள்ளது.
நாடு முழுவதும் இடம்பெறும் இந்த கருத்தரங்கில், ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜீத் குமார, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் கே சுபசிங்ஹ, அரசியல் துறை பொறுப்பாளர் புபுது ஜயகொட, மேல்மாகாண சபை உறுப்பினர் வருண ராஜபக்ஸ, மத்திய செயற்குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட பிரமுகர்களும் தமது கருத்துரைகளை நிகழ்த்த உள்ளனர்.
******************

நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டங்கள்
எதிர்வரும் வரவு - செலவு திட்டத்தில் நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணி இன்று தொடக்கம் ஆர்பாட்டங்களை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது.
கடன் சுமைகளை தாங்கிய வரவு - செலவுத் திட்டம் ஒன்றை கொண்டுவர அரசாங்கம் முனைப்புக்காட்டி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த வரவு - செலவு திட்டம் சமர்பித்தபோது வழங்கி வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இம்முறைய வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்படும் முதலாவது ஆர்பாட்டம் இன்று காலை புறக்கோட்டையில் நடைபெறவுள்ளதோடு சமூகவாத தொழிலாளர் சங்கத்தின் அனைத்துத் தொழிற்சங்கங்களும் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக ரில்வின் சில்வா குறிப்பிட்டார்.
இன்று ஆரம்பிக்கப்படும் ஆர்பாட்டத்தை எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
******************

மக்களாட்சி வேண்டுமாம்
அரசாங்கம் சட்டத்தையும் ஒழுங்கினையும் பேணியிருந்தால் நாட்டில் மக்கள் நல்லாட்சியை அனுபவித்திருப்பர் என வடமாகாண எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் பாதாள உலகினரையும் போதைப் பொருள் வியாபாரிகளையும் பாதுகாக்கும் ஆட்சியே இடம்பெற்று வருகின்றது.
இதனால் சட்டம் ஒழுங்கு என்றால் என்னவென்றும் மக்கள் கேள்வியெழுப்பும் நிலைமை உருவாகிவிட்டதாக வட மத்திய மாகாண எதிர்க்கட்சித் தலைவர் பிரசன்ன ஷாமல் செனரத் தெரிவித்தார்.
நாட்டின் அபிவிருத்தியும் மக்களின் பாதுகாப்பும் நல்லாட்சியும் என்பது அரசியல் தீர்க்கதரிசனம் மிக்க ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரமே சாத்தியமாகும் எனவும் தெரிவித்தார்.
எனவே அவரது ஆலோசனைகளின் பிரகாரம் செயற்பட்டு அவரது கரங்களைப் பலப்படுத்துவதன் மூலம் முழு நாட்டையும் வெற்றி கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே வட மத்திய மாகாண எதிர்க் கட்சித் தலைவர் ஷாமல் செனரத் இதனைத் தெரிவித்தார்.
******************

தொடர்பை மறுக்கும் கோத்தா
கொலன்னாவ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சைபெற்று வரும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுடன் உத்தியோகபூர்வமான தொடர்புகளை மட்டுமே தாம் பேணி வந்ததாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸதெரிவித்துள்ளார்.
துமிந்த சில்வாவிற்கு எதிராக பலர் பல குற்றச்சாட்டுக்களை சுமத்திகின்ற போதிலும் வலுவான ஆதாரங்கள் எதுவும் இதுவரையில் சமர்ப்பிக்கப்படவில்லை.
துமிந்த தனது வயதுப் பிரிவைச் சேர்ந்தவர் அல்ல எனவே அவரை நண்பராக ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
மக்களினால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதியுடன் ஏன் கடமையாற்றமுடியாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தான் எவரையும் பாதுகாக்கவோ முயற்சிக்கவும் எவருக்கும் பயந்துசெயற்படவுமில்லை.
துமிந்த சில்வாவை விடவும் பாரத்த லக்ஸ்மன் பிரேமசந்திரவை நீண்ட காலமாகத் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளும் புலம்பெயர் தமிழர்களும் தொடர்ச்சியாக நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர் எனவும் இந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பல்வேறு வழிகளில் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகர அபிவிருத்திப் பணிகள் கைவிடப்பட மாட்டாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
******************

சிறைக்கைதி மரணம்
மட்டக்களப்பு சிறைச்சாலையில் கடந்த சில தினங்களாக சுகயீனமுற்றிருந்த தமிழ்க் கைது ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தக் கைதியின் உடல்நிலை குறித்துச் சிறை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டும் அது கருத்தில் கொள்ளப்படாமை காரணமாகவே அவர் மரணமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வாழைச்சேனையைச் சேர்ந்த 35 வயதான இந்தக் கைதியின் உடல்நிலை குறித்து முன்னரே சிறைச்சாலை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட கைதி உணவை உட்கொள்ள முடியாத நிலையில் அவதியுறுவதாகவும் தொடர்ச்சியாக அவர் வாந்தி எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தும் ஆரம்பத்தில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத சிறை நிர்வாகம் அவரைக் காலதாமதாக நேற்றே மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதித்திருந்தது.
இந்த நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி நேற்றே உயிரிழந்தார்.
இதேவேளை, மட்டக்களப்புச் சிறைச்சாலை அதிகாரிகளின் இந்த அசமந்தப் போக்கைக் கண்டித்து மட்டு. சிறைச்சாலை கைதிகள் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
******************












Sunday, 23 October 2011

செய்திகள் 23/10


ஐநா செயலரைச் சந்திக்கும் ததேகூ
எதிர்வரும் வாரம் அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவினர் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீமூனை சந்திக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
கூட்டமைப்பின் 4 உறுப்பினர்கள் எதிர்வரும் 25 ம் திகதி அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பிரதி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக்கின் அழைப்பின் பேரிலேயே இந்த பயணம் இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகின்றது
********************

காணிப்பதிவுக்கு எதிராக வழக்கு
வடக்கு கிழக்கு காணிப் பதிவு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது.
நாளைய தினம் உச்சநீதிமன்றில் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
வடக்கு கிழக்கு காணிப் பதிவு குறித்து அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உரிய பதிலளிக்கப்படவில்லை எனவும், இதன் காரணமாக அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு காணிப் பதிவு குறித்து கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றில் விவாத் நடத்தப்பட்டது.
காணிப்பதிவு நடவடிக்கைகளை அரசாங்கம் நியாயப்படுத்தி வருவதகாக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு காணிப் பதிவு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்து நல்லிணக்கப் பணிகளை மேற்கொண்டதன் பின்னர் அரசாங்கம் இவ்வாறான காணிப்பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்
********************

மகிந்தவின் அவுஸ்திரேலிய பயணம்
கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் செய்வாய்க்கிழமை அவுஸ்ரேலியா செல்லவுள்ளார
பேர்த் நகரில் நடைபெறும் கொமன்வெலத் மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் சிறிலங்கா அதிபருடன், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க உள்ளிட்ட சுமார் 100 பேர் கொண்ட குழுவொன்றும் அவுஸ்ரேலியா செல்லவுள்ளது.
108 பேர் கொண்ட இந்தக் குழுவில், தற்போது இராணுவத்தில் பணியாற்றும் இளநிலை அதிகாரிகளைக் கொண்ட குழுவே இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
மூத்த இராணுவ அதிகாரிகள் எவருக்கும் இந்தக் குழுவில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று கொழும்பு வாரஇதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
கொமன்வெல்த் மாநாட்டில் சிறிலங்கா அதிபரைச் சந்திக்கும்போது, போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்த பிரச்சினையை எழுப்ப கனடாவும், அவுஸ்ரேலியாவும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்காவை கொமன்வெல்த்தில் இருந்து இடைநிறுத்த வேண்டும், சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த நம்பகமான அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அவுஸ்ரேலியாவில் வலுத்து வருகின்றன.
இந்தநிலையிலேயே சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக மூத்த இராணுவ அதிகாரிகள் எவரையும் சிறிலங்கா அதிபர் அழைத்துச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே சிறிலங்கா அதிபருடன் பிரித்தானியா சென்றிருந்த மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு எதிராக அங்குள்ள நீதிமன்றம் ஒன்றில் போர்க்குற்ற வழக்குத்தாக்கல் செய்யப்பட்டதால், அவசரமாக நாடு திரும்பும் நிலை மகிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்டது.
அத்துடன் அவுஸ்ரேலியாவில் உள்ள சிறிலங்கா தூதுவர் அட்மிரல் திசார சமரசிங்கவும், ஜேர்மனியில் பதில் தூதுவராக இருந்த மேஜர் ஜெனரல் ஜெகத் டயசும், ஐ.நாவுக்கான பதில் தூதுவரான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் போர்க்குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர்.
இதனால், அவுஸ்ரேலியா செல்லும் மகிந்தவின் குழுவில் மூத்த அதிகாரிகள் தவிர்க்கப்பட்டு சர்ச்சைகளில் சிக்காது இளநிலை இராணுவ அதிகாரிகளே சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
********************

கையில் காசு கொடுக்க மறுப்பு
இலங்கையில் மனிதாபிமான பணிகளை மேற்கொள்ளும் போது நிதியுதவிகளை நேரடியாக இலங்கை அரசாங்கத்துக்கு வழங்க பிரித்தானிய அரசாங்கம் மறுத்துள்ளது.
மனிதாபிமான உதவிகளாக வழங்கப்பட்ட நிதிகளை இலங்கை அரசாங்கம் கையகப்படுத்தியதாக பிரித்தானிய எதிர்க்கட்சியினர் தெரிவித்த குற்றச்சாட்டை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பொதுச்சபையால் கடந்த வெள்ளிக்கிழமையன்று இது தொடர்பில் அந்த நாட்டின் சர்வதேச அபிவிருத்திக்கான திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய சர்வதேச அபிவிருத்தி திணைக்களம், இலங்கையுடனான இருதரப்பு திட்டங்களை 2006 ஆம் ஆண்டில் முடிவுக்கு கொண்டு வந்தது.
எனினும் அதன் பின்னர் மனிதாபிமான பணிகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டன.
இந்தநிலையில் அவையும் சர்வதேச உதவி நிறுவனங்கள் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் பிரித்தானியா ஏற்கனவே சர்வதேச விசாரணையை கோரியுள்ளது.
அத்துடன் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கும் அந்த நாடு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
********************

அரசு மீது அதிருப்தி
அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தொடர்ச்சியாக எதேச்சாதிகார போக்கில் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றது.
எதிர்க்கட்சிகளின் பலம் மக்களின் பலமாக கருதப்பட வேண்டும் எனவும், எதிர்க் கட்சிகள் பலவீனமடைவதனால் மக்கள் பாதிக்கப்படக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சில கருத்து முரண்பாடுகள் நிலவி வருவதனை மறுப்பதற்கில்லை.
எனினும், ஆளும் கட்சிக்குள் அதனை விட பாரிய குழப்ப நிலைமைகள் காணப்படுகின்றன, இதன் விளைவே துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்.
சில அமைச்சர்கள் அரசாங்கத்திற்குள் எவ்வித மறுப்பினையும் தெரிவிக்காத போதிலும், வெளியில் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
********************

தொடரும் கொள்ளைகள்
கிளிநொச்சி - பல்லவராயன்காட்டுப் பகுதியில் இராணுவப் புலனாய்வாளர்கள் எனத் தம்மை அடையாளம் காட்டிய குழுவொன்று வீடொன்றில் புகுந்து அங்கிருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
இச்சம்பவம் நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் தம்மை இராணுவப் புலனாய்வாளர்கள் எனத் அறிமுகப்படுத்திக் கொண்டு உங்கள் வீட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் இருக்கின்றனர்.
அவர்களை விசாரிக்க வேண்டும் எனக் கூறி மிரட்டி விட்டு அந்த வீட்டுப் பெண் அணிந்திருந்த இரண்டு பவுண் சங்கிலி மற்றும் இரண்டு கைத்தொலைபேசிகள் என்பவற்றை பறித்துச் சென்றுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக முழங்காவில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
********************

பிரித்தானிய நடைபயணம்
பிரித்தானிய மக்களிடமும், பிரித்தானிய அரசாங்கத்திடமும் நீதி கேட்டு, மன்செஸ்டர் நகரில் இருந்து லண்டன் மாநகரம் வரையிலான நீதிக்கான நடைப்பயணமொன்று ஜெயசங்கர் முருகையா என்பவரால் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதி முதல் நவம்பர் 7ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த நடைபயணம் பிரதான ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படவுள்ளது.
ஈழத்தமிழர்களின் மீதான இலங்கையின் இனப்படுகொலையையும், போர்க்குற்றங்களையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் விசாரிப்பதற்காக ஒரு சுயாதீனமான, நீதியான, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்.
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதோடு, தமிழீழத்தில் சர்வதேச சமுகத்தின் மத்தியஸ்தத்துடன் கூடிய ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்படல் வேண்டும்.
ஈழத்தமிழர்களை ஒரு முற்றான இன அழிப்பிலிருந்து காப்பாற்றும் முகமாகவும், கொடுமைகளை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வரும் ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் அளிக்கும் முகமாகவும், தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் தனியாட்சி உரிமையினை அங்கீகரிக்க வேண்டும்.
இலங்கை சிறைகளில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து ஈழத்தமிழ் பொதுமக்களும், முன்னாள் போராளிகளும் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும்.
தமிழீழத்தில் அரசாங்கத்தின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் யாவும் உடனடியாக நிறுத்தப்படுவதோடு, அனைத்து ஈழத்தமிழர்களும் அவர்களது சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படல் வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனு நீதிக்கான நடைப்பயணத்தின் போது பிரித்தானியப் பிரதமரிடமும், அமைச்சர்களிடமும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கையளிக்கப்படவுள்ளது.
********************

கட்டணத்தில் கவலை கொள்ளும் இந்தியா
சிறிலங்காவின் புதிய நுழைவிசைவு நடைமுறை குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
சிறிலங்கா நுழைவிசைவு பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 50 டொலர் கட்டணத்தைக் குறைக்குமாறும் சிறிலங்காவிடம் இந்தியா கோரியுள்ளது.
இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் இது தொடர்பாக சிறிலங்காவின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களப் பணிப்பாளர் சூலானந்த பெரேராவை கடந்த வியாழக்கிழமை சந்தித்துப் பேசியுள்ளார்.
இதன்போது, இந்தியக் குடிமக்கள் சிறிலங்கா நுழைவிசைவைப் பெறுவதற்கு 50 டொலர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது மிகவும் அதிகமானது என்றும் இந்தக் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும் இந்திய தூதுரக அதிகாரி தம்மிடம் கேட்டுக் கொண்டதாக சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசின் பதிலை அவர் கோரியதாகவும், ஆனால் இது அரசாங்கத்தின் கொள்கை சார்ந்த விடயம் என்பதால் தமது திணைக்களம் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும், ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்கலாம் என்று நம்புவதாகவும் சூலானந்த பேரேரா தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா குடிமக்கள் இந்திய நுழைவிசைவைப் பெறுவதற்கு 650 ரூபா கட்டணத்தை மட்டுமே செலுத்தி வரும் நிலையில், சிறிலங்கா 50 டொலர் கட்டணமாக அறவிட முடிவு செய்துள்ளது இந்தியாவைக் கடும் அதிருப்தி கொள்ள வைத்துள்ளது.
சார்க் நாடுகளுக்கு இடையில் உறவுகளையும் தொடர்புகளையும் அதிகரித்துக் கொள்வதற்கு நுழைவிசைவு நடைமுறைகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், சிறிலங்கா இறுக்கமான போக்கைக் கடைப்பிடிப்பது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
********************

குடும்ப வரவு செலவுத் திட்டம் தயார்
2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ளது.
இந்தநிலையில் அதற்கான முன்கூட்டிய ஒதுக்கீடு அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்படி 2.22 ரில்லியன் ரூபாய் செலவுகள் காட்டப்பட்டுள்ளன.
வரவு - செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகையாக 1.105 ரில்லியன்கள் ரூபாய் காட்டப்பட்டுள்ளன.
இதில் மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தின் கீழ் உள்ள அமைச்சுகளுக்காக 20 வீதமான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அரசுத் தலைவர் செயலகத்துக்கு 6.161 பில்லியன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கீழ் வரும் அமைச்சுக்காக 230 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
2011 ஆம் ஆண்டு இந்த துறைகளுக்கு 215 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
********************








Saturday, 22 October 2011

செய்திகள் 22/10


பொறுக்க முடியாத அரசு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்கா சென்று அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிங்டனைச் சந்தித்துப் பேசுவதைத் தடுக்க அரசு, இராஜதந்திர ரீதியிலான காய்நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் அடுத்த வாரம் அமெரிக்காவிற்குச் செல்லவுள்ளனர்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிங்ரனையும் வெளியுறவுத்துறை அமைச்சின் உயரதிகாரிகளையும் கூட்டமைப்பினர் சந்திக்கவுள்ளனர் எனச் செய்திகள் வெளிவந்திருந்தன.
இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திப்பது தொடர்பில் உத்தியோகப்பற்றற்ற ரீதியில் இலங்கை அரசு ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான அதிருப்தியை அமெரிக்காவிலுள்ள இலங்கை ராஜதந்திரிகள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உயரதிகாரிகளுக்கு கோடிகாட்டியிருக்கின்றனர்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக ஹிலாரி கிளிங்ரன் பதவியேற்ற பின் இலங்கை அரச தலைவரைக்கூடச் சந்திக்காத ஒரு சூழ்நிலையில் அரசியற்கட்சியொன்றை சந்திப்பது இராஜதந்திர நடைமுறைகளை மீறும் செயல் என்று இலங்கை ராஜதந்திரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தப் பின்னணியில் தமிழ்க் கூட்டமைப்பிற்கும், அமெரிக்க வெளியுறவுச் செயலருக்குமிடையில் நேரடி சந்திப்பு இடம்பெறுமா என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அரச தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
********************

உருவாக்கியது யார்?
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது அடுத்தடுத்து ஆட்சிபுரிந்த அரசாங்கங்களால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும் எனவும் தமிழ் மக்களால் உருவாகப்பட்டதல்ல எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
வடக்கு கிழக்குவிவகாரம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவும் ஐ.தே.க. முன்னாள் தலைவர் டல்லி சேனநாயக்கவும் மாபெரும் சிங்கள தலைவர்கள் எனவும் அவர்கள் தமிழர் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையை அமுல்படுத்தியிருந்தால் இந்நாடு ஒருபோதும் வன்முறை நிலைக்கு சென்றிருக்காது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் கூறினார்.
தற்போது வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் காணிப்பதிவுகளானவை அவ்விரு மாகாணங்களிலும் இன விகிதாசாரத்தை மாற்றியமைப்பதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் முயற்சி என தமிழ் மக்கள் அஞ்சுவதாகவும் அவர் கூறினார்.
இந்நடவடிக்கையை தமிழ் மக்களின் அரசியல் பலத்தை குறைப்பதற்கான முயற்சியென தமது கட்சி சந்தேகிப்பதாகவும் சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.
இப்பிரதேசங்களில் தமிழ்மக்களின் கலாசார மொழி அடையாளங்களை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.
********************

வலுவடையும் கிளர்ச்சி
அரச பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டில் மக்கள் எழுச்சிகள் வெடிக்க ஆரம்பித்துள்ளன.
சட்ட ஒழுங்குகள் அதிகார வர்க்கத்தினரால் மிகவும் மோசமான முறையில் உதாசீனம் செய்யப்படுகின்றன.
இதுவே மாற்று சக்திகள் உருவெடுப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
வடக்கு கிழக்கில் மாத்திரம் அல்ல நாட்டின் அனைத்து பகுதிகளிலுமே அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் விஸ்தரித்துள்ளது.
எனவே அரசின் சவால்களை எதிர்கொள்ளக் கூடிய தலைவர்களே இலங்கைக்கு தேவையென்றும் அவர் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிப் பெற்ற ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் நேற்று வெள்ளிக்கிழமை சீனோர் விருந்தகத்தில் வைத்து, வைபவரீதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுப்பினரான விக்கிரமபாகு கருணாரட்ன சத்தியப்பிரமாணம் மேற் கொண்டதன் பின்னர் உரையாற்றுகையிலே இதனைக் கூறினார்.
********************

தமிழரை அகற்றும் இலட்சியம்
1926 இல் உருவான தமிழருக்கு எதிரான பிரச்சினை தேசிய இனப்பிரச்சினையாக உருவெடுத்துள்ள இன்றைய நிலையில் தமிழ் மக்களை வடக்கு கிழக்கிலிருந்து அகற்றிவிடும் இலட்சியத்தில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான டி.எம். சுவாமிநாதன் நேற்று சபையில் குற்றம் சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட வடக்கு கிழக்கில் காணிப்பதிவு தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாவதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெவித்தார்.
பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. ஏனெனில் இது அறியப்படாத விடயம் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
தமிழருக்கு எதிரான பிரச்சினை 1926 களிலேயே தோற்றம் பெற்று விட்டது. அந்தப் பிரச்சினை இன்று 2011 வரை நீடித்துக் கொண்டிருக்கின்றது எனவும் குறிப்பிட்டார்.
தற்போது வடக்கு கிழக்கில் காணிப்பதிவினை மேற்கொள்வதாக சுற்று நிருபம் வெளியிட்டிருக்கின்றது.
இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். அத்துடன், இது அடிப்படையற்றதுமாகவே இருக்கின்றது.
வடக்கு கிழக்குக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ள இந்த காணிப்பதிவு சுற்று நிருபம் தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.
பாராளுமன்றத்தில் அங்கீகரித்ததன் பின்னரே இது நடைறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனாலும், அது நடைபெறவில்லை. தமிழ் மக்களை வடக்கு கிழக்கிலிருந்து வெளியேற்றுவதையே அரசாங்கம் இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
********************

காணிகள் மீளகையளிக்கப்படுமா?
1983 காலப்பகுதியில் வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயங்களுக்காகப் பெற்றுக் கொள்ளப்பட்ட காணிகள் மீள ஒப்படைக்கப்படும் என்ற உறுதி வழங்கப்பட்டிருக்கின்றது.
தற்போது பிரச்சினை முடிவுக்கு வந்துள்ள நிலையில் வழங்கப்பட்ட உறுதி மொழியின் பிரகாரம் இந்த அதி உயர் பாதுகாப்பு வலயங்களை ஏன் திருப்பி ஒப்படைக்க முடியாதிருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் கேள்வி எழுப்பினார்.
வடக்கில் காணிப் பதிவுகளை மேற்கொள்ள வேண்டுமானால் அங்குள்ள எம்.பி.க்களினதும் பங்களிப்புக்கும் வழிவகுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டு வரப்பட்ட வடக்கில் காணிப் பதிவு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
காணிப் பிரச்சினையானது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
வடக்கு, கிழக்கில் எழுந்துள்ள இந்த காணிப் பிரச்சினை கொழும்பு காலிமுகத்திடலிலும் ஏற்பட்டுள்ளது.
காணி விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை விளங்கிக் கொள்ள முடிகின்றது.
காணி உரிமை எனப்படும் போது அது எல்லா வகையிலும் சட்ட ரீதியானதாக அமைய வேண்டும்.
அந்தந்த மாவட்டங்களில் உள்ள காணிகள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் பண்டா செல்வா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது இந்த நிலைமை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது எனவும் ரணில் தெரிவித்துள்ளார்.
********************

பாதுகாப்பே இல்லாத இடத்தில் சிறுவர் பாதுகாப்பு கிடைக்குமா?
சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு தொடர்பான செயற்றிட்டமொன்று யாழ்.மாவட்டத்தில் அமுல் படுத்தப்படவுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகமும் யுனிசெவ் நிறுவனமும் இணைந்து இந்தத் திட்டத்தை அமுல்படுத்தவுள்ளன.
நாட்டின் ஏனைய பாகங்களில் இவ்வாறான செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் முதல்முறையாக யாழ்.மாவட்டத்தில் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பதிகாரி த.கனகராஜ் தெரிவித்தார்.
முதற்கட்டமாக சிறுவர் உரிமைகளுடன் தொடர்புடைய வேலைகளில் ஈடுபட்டவரும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிளுடனான கலந்துரையாடல் கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் இடம்பெறவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது பின்னர் குடாநாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. 
********************

தனியார் பல்கலைக்கழகத்திற்கு புலம் பெயர் சமூகம்?
உலகெங்கும் சிதறி வாழும் தமிழ்க் கல்வியலாளர்களின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் தனியார் பல்கலைக்கழகமொன்றை அமைக்க முடியும் என்று கலாநிதி யமுனானந்தா தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின்போதும், யுத்தத்தின் பின்னைய சூழலிலும் பல கல்வியலாளர்கள், மருத்துவர்கள் தமது பிரதேசத்தைவிட்டுப் புலம்பெயர்ந்து சென்றுவிட்டனர் என்று குறிப்பிட்ட யாழ் மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி கலாநிதி யமுனானந்தா, இவர்களில் பலர் உலகில் மிகச்சிறந்த பேராசிரியர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும், விரிவுரையாளர்களாகவும் பல முன்னணிப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பிக்கின்றனர் என்று தெரிவித்தார்.
இவ்வாறு சிதறிப்போயுள்ள தமிழ்க் கல்வியலாளர்களது சக்தியை ஒரு புள்ளியில் குவித்து அவர்கள் மூலம் யாழ்ப்பாணத்தில் வாழும் அடுத்த சந்ததியினருக்கு கல்வியூட்டுவதற்கு உறுதியான தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தினரின் ஏற்பாட்டில், விஞ்ஞானபீடத்தின் பௌதீகத்துறை விரிவுரை மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக அறிவூட்டும் கருத்தரங்கில் உரையாற்றும்போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுபவர்களில் பொதுவாக 5 சதவீதமானோரே பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகின்றனர்.
90 சதவீதமானவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதி இருந்தும் அவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை வழங்க அரச பல்கலைக்கழகங்களில் போதிய இடவசதி இல்லை.
இதனால், தனியார் பல்கலைக்கழங்கள் இங்கே அவசியமாகத் தேவைப்படுகின்றன என்று சுட்டிக்காட்டிய அவர், கல்விச்சேவையின் செலவுகளை விலை நிர்ணயம் செய்து வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.
********************