Sunday, 13 November 2011

செய்திகள் 13/11


மகாநாட்டை புறக்கணித்த நாடுகள்
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சும், கடற்படையும் இணைந்து ஒழுங்கு செய்துள்ள காலி கடல்சார் பாதுகாப்பு மாநாட்டைப் புறக்கணிக்க பிரித்தானியாவும், தென்னாபிரிக்காவும் கடைசிநேரத்தில் முடிவு செய்துள்ளன.
அத்துடன் இந்த மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை ஒன்றை சமர்ப்பிக்கவிருந்த சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் அரசியல் விஞ்ஞானப் பிரிவின் உதவிப் பேராசிரியர் கலாநிதி லோறன்ஸ் பிரபாகர், தனது கட்டுப்பாட்டை மீறிய காரணங்களால் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்க முடியாதுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையே பிராந்திய கடல்சார் ஒத்துழைப்பு தொடர்பான இந்திய கடற்படையின் கண்ணோட்டம் தொடர்பாக இந்திய கடற்படையின் சார்ப்பில் முதன்மை நடவடிக்கை பணிப்பாளர் கப்டன் பாலகிருஸ்ணன் ஆய்வுக்கட்டுரை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளார்.
முன்னதாக இந்தியக் கடற்படையின் மூத்த அதிகாரி ஒருவரே இந்த ஆய்வுரையை சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தியத் தரப்பில் மூத்த கடற்படை அதிகாரிகள் பங்கேற்காததும், பிரித்தானியா, தென்னாபிரிக்கா ஆகியன வெளியேறியதும் சிறிலங்காவுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
நாளை தொடங்கவுள்ள இந்தக் கருத்தரங்கில் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், பிரான்ஸ், அவுஸ்ரேலியா, ஜப்பான், மாலைதீவு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பங்காளாதேஸ், கென்யா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தென்கொரியா, மலேசியா, ஓமான், கட்டார் ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளன.
நாளை காலை இந்தக் கருத்தரங்கை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
***************

அச்சத்துடன் அவதானிக்கும் அரசு
பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி இலங்கை தொடர்பில் ஒளிபரப்ப தயாராக்கிக் கொண்டிருக்கும் அடுத்த காணொளி தொடர்பில் அவதானித்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சனல் 4வின் புதிய காணொளி தொடர்பில் கூடிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என வெளிவிவகார அமைச்சின் பொது மக்கள் தொடர்பு மற்றும் பொதுத் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் சரத் திஸாநாயக்க தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.
சனல் 4 இதற்கு முன்னர் வெளியிட்ட காணொளிகள் பொய் என நிரூபிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக வெளிவந்த இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படத்தின் 2வது பாகத்தினை சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பவுள்ளது.
இலங்கையின் கொலைக்களம்; தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் எனும் தலைப்பில் அதன் அடுத்த பாகத்திற்குரிய ஆவணப்படத்தினைத் தயாரிக்குமாறு சனல் 4 தொலைக்காட்சியின் செய்திகள் மற்றும் சமகால விவகாரங்களுக்கான பிரிவின் தலைவர் னுழசழவால டீலசநெஇ ஐவுN தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இப்புதிய ஆவணப்படத்தில் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள்; விசாரணைக்கு உட்படுத்தப்படுவதோடு, போர்க்குற்றங்கள் பற்றி யாரெல்லாம் அறிந்திருந்தார்கள், போர்க்குற்றங்களைத் தடுக்க உலகம் ஏன் தவறியது என்பது குறித்தும் ஆராயப்படுவதாக சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் துழn ளுழெறஇனால் வழங்கப்படவுள்ள புதிய இலங்கையின் கொலைக்களம்: தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் ஆவணப்படத்தில், போரின் இறுதி நாட்களில் என்ன நிகழ்ந்தது என்பதை வலுவான ஆதாரங்கள் நேரடிச் சாட்சியங்கள், காணொளி மற்றும் ஒளிப்படங்கள் மூலமாக ஆவணப்படத்தின் நெறியாளர் ஊயடடரஅ ஆயஉசயநயால் தொகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
***************

நியாயம் கோரியே பயணம்
ஜே.வி.பி. காலத்தின்போது தமது மக்களுக்காக இன்றைய அரசுத் தலைவர் சர்வதேச அரங்கிற்குச் சென்று குரல் கொடுத்தார்.
அது போலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்காக நீதிகோரி வெளிநாட்டுப் பயணத்தை ஆரம்பித்தனர் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்ட குழுவின் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேசரி வார இதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கம் அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழு அன்றைய அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்படிக்கை ஏன் தோல்வி கண்டது. போர் ஏன் ஏற்பட்டது என்பது குறித்தே கவனம் செலுத்துகின்றது.
போர்க் குற்றச்சாட்டுகள் குறித்தோ, காணாமல் போனோர் குறித்தோ ஆராய்ந்து தீர்வு காண முற்படவில்லை.
எனவே, தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க சர்வதேச விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் எனக் கூறிய அவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து அலட்டிக் கொள்பவர்கள் 12 சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் கண்ட தீர்வு என்ன என்பது குறித்துக் கூற முன்வர வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கூட்டமைப்பினரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து அழுது புலம்புவதை விடுத்து இன விவகாரத்துக்கான தீர்வினைக் காண இந்தச் சக்திகள் முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
***************

தோற்றுப் போன ஸ்ரீலங்கா
இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல மில்லியன் ரூபாய்கள் முதலிடப்பட்ட முயற்சி ஒன்று தோல்வியடைந்துள்ளதாக சண்டே லீடர் தெரிவித்துள்ளது.
பொதுநலவாய நாடுகளின் 2018 ஆண்டுக்குரிய விளையாட்டுப் போட்டிகளை இலங்கையின் அம்பாந்தோட்டையில் நடத்துவதற்கான வாக்கெடுப்பு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்காக இலங்கை அரசாங்கத்தினால் சுமார் 300 தொடக்கம் 400 மில்லியன் ரூபாய்கள் வரை செலவிடப்பட்டன.
முன்னாள் கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரன், முன்னாள் அழகுராணி அனார்கலி, உட்பட்ட பல கிரிக்கட் மற்றும் ஏனைய துறைகளை சார்ந்தோர் இதற்கான பிரசாரங்களில் ஈடுபட்டனர்.
2018 பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவது குறித்து அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய இருநாடுகளுக்கிடையே 71 நாடுகளின் அமைப்பில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் 27 வாக்குகளை மாத்திரமே இலங்கையால் பெறமுடிந்தது.
இந்த வாக்கெடுப்பின் பிரசாரங்களுக்காக இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சு, பிரித்தானியாவின் பொது உறவுகள் நிறுவனம் ஒன்றின் உதவியை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
***************

சுவீகரிப்பு ஆரம்பம்
நட்டமடைந்துள்ள தனியார் நிறுவனங்களை அரசமயப்படுத்தி அதனை மீள்கட்டியெழுப்புவது தொடர்பான சட்டம் எதிர்வரும் வாரத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த சட்டத்திற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ் கடந்த வெள்ளிக்கிழமை கையொப்பம் இட்டதோடு அது அதிகாரபூர்வமான சட்டமாக மாறியுள்ளதென அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 8ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்ட நட்டமடைந்துள்ள தனியார் நிறுவனங்களை அரசமயப்படுத்தி அதனை மீள்கட்டியெழுப்புவது தொடர்பான சட்டம் மூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி குறித்த சட்டம் எதிர்வரும் புதன்கிழமை அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளது.
இதன்போது நட்டமடைந்துள்ளதாக இனங்காணப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களுக்கு உரிய அதிகாரிகளையும் உதவி அதிகாரிகளையும் நியமிக்கும் நடவடிக்கை இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது
***************

சமாதானத்தை காணவில்லை
ஆயுதங்களைக் கொண்டு யுத்தத்தில் வெற்றிபெற்றிருந்தாலும் நாட்டில் இன்னும் நிரந்தர சமாதானம் உருவாகவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் இணை பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாட்டை ஒன்றிணைக்க வேண்டுமாயின் மத படிப்பினைகளுக்கு அமைய புத்திசாதுர்யமான திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டதன் மூலம் சில தரப்பினரே அதன் பலாபலன்களை அனுபவிப்பதாக சசுனட அருண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்
***************

நீதி கோரி கனடாவில் முறைப்பாடு
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் குடும்பத்தினர் நீதி வேண்டி கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹாப்பரிடம் முறையிடவுள்ளனர்.
இதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாக பாரத லக்ஸ்மனின் சகோதரியான சுவர்ணா பிரேமசந்திர கனடாவில் இருந்து தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைக்கு இணங்கி ஹாப்பரை சந்திப்பதற்கு கனேடிய பிரதமர் காரியாலயம் இணக்கமான பதிலை வழங்கியுள்ளதாக சுவர்ணா குறிப்பிட்டுள்ளார்.
தமது சகோதரரின் கொலைக்கு பாதாள உலக கோஷ்டியினர் காரணம் என்பதற்கு ஆதாரங்கள் வெளிப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமது சகோதரரின் கொலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை அரசாங்கம் இன்னும் சந்தேகநபராக பெயரிடவில்லை.
தமது சகோதரரின் கொலை தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் செயலாளரிடம் முறையிட்டுள்ளதாகவும் சுவர்ணா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த கொலை தொடர்பில் நீதியை வேண்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சட்டத்தரணிகள் கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்துவார்கள் என்றும் சுவர்ணா தெரிவித்தார்.
***************

Saturday, 12 November 2011

செய்திகள் 12/11


வன்மையான கண்டனம்
தமிழர் பிரதேசமான மன்னார் மாவட்டத்துக்கு சிங்கள அரச அதிபரை நியமிப்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை மிக வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நியமனத்தை அரசாங்கம் உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
நூறு வீதம் தமிழ் மக்களை கொண்ட மன்னார் மாவட்டத்துக்கு அரச அதிபராக தமிழர் ஒருவரே நியமிக்கப்பட வேண்டும் என கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சிங்களவரை நியமித்திருப்பதால் சாதாரண மக்களின் குறைபாடுகள் எவ்வாறு அரசாங்கத்தை சென்றடையும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளது.
மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கான அரச அதிபர்கள் இடமாற்றத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கம் நடைறைப்படுத்தியிருக்கின்றது.
இதன் பிரகாரம் மன்னார் மாவட்ட அரச அதிபராக சரத் ரவீந்திர என்ற பெரும்பான்மையைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.
வடக்கில் அரச அதிபர்களாக சிங்களவர்களை இணைக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பினையே வெளியிட்டு வந்தது.
தமது எதிர்ப்பினை தாம் பாராளுமன்றத்திலும் வெளிப்படுத்தியிருந்ததையடுத்து இந்த இடமாற்றங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தன என சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் தற்போது அரசாங்கம் தனது திட்டத்தை அமுல்படுத்தி மன்னார் மாவட்டத்துக்கு சிங்களவர் ஒருவரை அரச அதிபராக நியமித்துள்ளது.
மன்னார் மாவட்டம் நூறு வீதம் தமிழர்களைக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் அங்கு சிங்களவரை நியமித்திருப்பதன் மூலம் அந்த மக்களின் குறைபாடுகள் வெளிக்கொணரப்பட முடியாத நிலையொன்று ஏற்பட்டுள்ளது.
தற்போது நியமனம் பெற்றுள்ள அரச அதிபரின் தமிழ் மொழிப் புலமை எவ்வாறு உள்ளது என்பது தெரியாது. இதனால் சாதாரண மக்களின் நிலைமை மோசமாகியுள்ளது.
எனவே அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய தாம் மிக வன்மையாகக் கண்டிப்பதாக குறிப்பிட்டார்.
அதுமட்டுமல்லாது தமிழர் பிரதேசங்களில் சிங்கள அதிபர்களை உள்வாங்கும் திட்டத்தை அரசாங்கம் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்பதுடன் தற்போது மன்னார் மாவட்டத்துக்கு அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ள நியமனத்தை உடனடியாக ரத்து செய்து அங்கு தமிழ் மொழி மூல அரச அதிபர் ஒருவரை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைப்பதாக தெரிவிததார்.
எமது மக்களின் குறைநிறைகளைக் கண்டறிய தமிழ் மொழி மூல அரச அதிபரே அவசியம் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
****************

தள்ளிப் போகும் அறிக்கை
விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் அரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய அரசுத் தலைவர் விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 20ம் திகதி உத்தியோகபூர்வதாக அரசுத் தலைவரிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் ஊடக அதிகாரி லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 15ம் திகதி முழுமையாக நிறைவுக்கு வரும் நிலையில் 20ம் திகதி அது அரசுத் தலைவரிடம் கையளிக்கப்பட வேண்டும் என அரசுத் தலைவரின் செயலாளர் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய அரசுத் தலைவர் விசாரணை ஆணைக்குழு 2010 மே மாதம் 15ம் திகதி நியமிக்கப்பட்டது.
இவ்வாணைக்குழு 27 பொது சந்திப்புக்களையும் சுமார் 40 இடங்களில் 12 வெளிக்கள விஜயத்திலும் ஈடுபட்டதோடு வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல பகுதி மக்களிடமும் சாட்சியங்களைப் பெற்றிருந்தது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் நேரடி சாட்சியம் அளித்ததோடு 5100 கடிதம் மூலமான சாட்சியங்களும் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றது.
சுமார் 11 மாதங்களாகச் செயற்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையை தயாரித்து எதிர்வரும் 20ம் திகதி அரசுத் தலைவரிடம் கையளிக்கவுள்ளது.
****************

நிராகரிப்பு நாடகம் அரங்கேறியது
இலங்கை வருமாறு அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மாலைதீவில் நேரில் சந்தித்து விடுத்த அழைப்பை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்துள்ளார்.
தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்குவது உட்பட இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை, இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினை ஆகியவற்றுக்கு நல்லதொரு தீர்வு ஏற்படும்வரை தன்னால் இலங்கைக்கு வர இயலாது என்று அரசுத் தலைவர் மஹிந்தவிடம் நேரில் தெரிவித்துள்ளார்.
தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற இலங்கை அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை மாலைதீவில் தனியாகச் சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்.
இந்தச் சந்திப்பின்போது இலங்கைத் தமிழர்களின் மீள்குடியமர்வு மற்றும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் விளக்கம் கேட்டார் எனக் கூறப்படுகிறது.
****************

கடல்சார் பாதுகாப்பு
காலி நகரில் அடுத்தவாரம் நடைபெறவுள்ள கடல்சார் பாதுகாப்பு கருத்தரங்கில் பங்கேற்க, அமெரிக்கப் பாதுகாப்பு திணைக்களத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவுக்கான பிரதி உதவிச்செயலர் றொபேட் ஸ்கெர் சிறிலங்கா செல்லவுள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை இந்த இரண்டு நாள் கடல்சார் பாதுகாப்பு கருத்தரங்கு காலியில் உள்ள வெளிச்ச வீட்டு விடுதியில் ஆரம்பமாகவுள்ளது.
முதல்நாள் கருத்தரங்கில் அமெரிக்காவின் பாதுகாப்புத் திணைக்கள பிரதி உதவிச் செயலர் றொபேட் ஸ்கெர், பூகோள மற்றும் பிராந்திய கடல்சார் பாதுகாப்பில் பொதுவான மூலோபாயத்தின் முக்கியத்துவம் என்ற பொருளில் ஆய்வு ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார்.
ஆசிய விவகாரங்களில் நிபுணரான இவர் முன்னதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பணியாற்றியிருந்தார்.
இந்தநிகழ்வில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும் உரையாற்றவுள்ளார்.
காலி கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கில் அவுஸ்ரேலியா, பிரான்ஸ், ஜப்பான், பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இந்தியா, பிரித்தானியா, சீனா, அமெரிக்கா, மாலைதீவு, ஐக்கிய அரசு எமிரேட்ஸ், பங்களாதேஸ், கென்யா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தென்கொரியா, இந்தோனேசியா, மலேசியா, ஓமான், கட்டார் ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளன.
கடல்சார் பாதுகாப்பு மற்றும் அது சார்ந்த சவால்கள் குறித்த ஆய்வுகளை இந்தியா, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சமர்ப்பிக்கவுள்ளனர்.
இரண்டாவது நாள் அமர்விலும், அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த பிரிகேடியர் ஜெனரல் மைக்கேல் கிலென் கொம்ரன் ஆய்வு ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
****************

தோற்றது ஸ்ரீலங்கா
2018ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் உரிமையினை அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரம் வென்றெடுத்துள்ளது.
இதனால் ஹம்பாந்தோட்டையில் 2018ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் இலங்கையின் கனவு வீணாகியுள்ளது.
இலங்கையின் ஹம்பாந்தோட்டை நகரமும் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரமும் 2018ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் உரிமையினை பெறுவதற்குப் போட்டியிட்டன.
இது தொடர்பான பொதுநலவாய விளையாட்டுச் சம்மேளனத்தின் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இவ்வாக்கெடுப்பில் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் 2018ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய போட்டிகளை நடத்துவதற்கு 43 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.
இலங்கையில் குறித்த போட்டியினை நடத்துவதற்கு 27 உறுப்பினர்கள் மாத்திரமே வாக்களித்திருந்தனர்.
பொதுநலவாய போட்டிகளை நடத்தும் உரிமையினை ஐந்தாவது தடவையாக அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
****************

18வது மகாநாடு எங்கு நடந்தென்ன?
18வது சார்க் உச்சி மாநாட்டை நேபாளத்தின் கத்மன்டு நகரில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலைத்தீவில் நிறைவுற்ற 17வது சார்க் உச்சி மாநாட்டின் இறுதியில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இம்முறை சார்க் மாநாட்டில் வலய ஒத்துழைப்புக்கள் குறித்து நான்கு பொது உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
****************

தொடரும் கடத்தல்கள்
மிறிஹாண ஜுபிலி கணுவ பிரதேசத்தில் உள்ள புத்தக கடை உரிமையாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் வெள்ளை வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
ஜுபிலி கணுவ சந்தியில் நேற்று இரவு 8.35 அளவில் கோட்டே வீதியில் உள்ள புத்தக கடையை மூடிவிட்டு வெளியில் வந்தபோது தனது கணவரை வெள்ளை வானில் வந்தவர்கள் பலவந்தமாக இழுத்துச் சென்றதாக கடத்தப்பட்டவரின் மனைவியான யு.கே.ராஜிகா சுரங்கனி தெரிவித்துள்ளார்.
ஈ.எம்.துஸார சமிந்த பண்டார என்ற நபரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
****************






Friday, 11 November 2011

செய்திகள் 11/11


மீண்டும் பேச்சு
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் அடுத்தச் சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தத் தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி அரசு - கூட்டமைப்புக்கு இடையிலான அடுத்துச் சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 16ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் அரச தரப்பிடம் கடந்த சந்திப்புக்களின் போது சமர்பிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு இணக்கம் காண்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக சுமந்திரன் தெரிவித்தார்.
அடுத்தச் சுற்றுப் பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் இரா.சம்பந்தன், பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்கள் அமெரிக்கா, கனடா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று இலங்கையின் இனப்பிரச்சினை, தமிழர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து கலந்துரையாடிய நிலையில் அரச தரப்புடனான அடுத்தச் சுற்றுப் பேச்சுவார்த்தை முக்கியம் வாய்ந்ததாக அமையுமென கருதப்படுகிறது.
***************

தொடரும் அறிக்கைகள்
இலங்கையின் சமாதான முன்னநகர்வுகள் குறித்து நோர்வேயில் இன்று விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்படவுள்ள நிலையில் இந்நிகழ்வில் பங்குகொள்ளவென இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு மாநகர சபை எதிர்கட்சித் தலைவர் மிலிந்த மொறகொட நோர்வே சென்றுள்ளார்.
அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ்வே மிலிந்த மொறகொடவை நோர்வே அனுப்ப பணித்துள்ளதாக தெரியவருகிறது.
முன்னாள் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரிச்சட் ஆர்மிடெஜ் தலைமையில் இவ்வறிக்கை வெளியிடப்படவுள்ளது.
இவ்வறிக்கையானது கிறிஸ்டியன் மிச்சேல்சன் கல்வியகத்தால் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தம், 2009 சமாதான உடன்படிக்கை காலம், தமிழ் புனர்வாழ்வு அமையம், விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவை குறித்து அறிக்கையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
***************

சந்திக்கும் உற்ற நண்பர்கள்
அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையில் நேற்று மாலைத்தீவில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின்போது வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்றம், இந்திய அரசாங்கத்தினால் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் 50 ஆயிரம் வீட்டு திட்டம் மற்றும் இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அரசுத் தலைவர் ஊடகப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வுக்கென இலங்கைக்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்க இந்திய இச்சந்திப்பின்போது இணக்கம் வெளியிட்டுள்ளது.
***************

அறிவில்லாத அதிகாரி?
ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான மாநாட்டில் இலங்கையின் சார்பில் பங்கேற்கும் முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அடிப்படை குற்றவியல் சட்டஅறிவுகளை கொண்டிருக்கவில்லை என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் மற்றும் சித்திரவதைகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கடந்த 9 ஆம் திகதி அவருக்கு பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
இன்போது மொஹான் பீரிஸினால் சரியான புள்ளிவிபரங்களையும் சம்பவங்களையும் கூறமுடியவில்லை.
1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் கீழ் இலங்கையின் உரிய சட்டமுறைகள் இருப்பதாக குறிப்பிட்டார்.
எனினும் அதனை கண்டித்துள்ள ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு நடைமுறை நிறைவேற்று அதிகாரம் கொண்டு அரசுத் தலைவர் முறையின் கீழ் அந்த சட்டங்கள் வலுவிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணைத்தளத்தில் சில சட்டத்தரணிகளை துரோகிகள் என்று குறிப்பிடப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை காப்பாளர்கள் தாக்கப்பட்டமை குறித்து மொஹான் பீரிஸ் பதில் எதனையும் வழங்க மறுத்துவிட்டார்.
பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் சில சட்டத்தரணிகள் துரோகிகள் என்ற குறிப்பிடப்பட்டமை எவ்வித பாதிப்புக்களையும் ஏற்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசுத் தலைவர் தேர்தலின் போது ஊடகவியலாளார் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் இலங்கைக்கு எதிரான பிரசாரத்துக்காக வெளிநாடு ஒன்றில் அகதியாக சென்றிருக்கலாம் என்று மொஹான் பீரிஸ் பதிலளித்துள்ளார்.
அவரால் வலுவான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியவில்லை.
சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனம் கட்டாயம் காணாமல் போனவர்கள் தொடர்பிலான பிரகடனம் சர்வதேச யுத்த நீதிமன்றம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பீரிஸ் பதிலளிக்கவில்லை.
வெலியமுன என்பவரது வீட்டின் மீது கிரனைட் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து கேட்டபோது மொஹான் பீரிஸ் அளித்த பதில்களில் அவருக்கு அடிப்படை சட்டஅறிவு இல்லை என்பதை உணர்த்தியதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை சித்திரவதைகள் தொடர்ல் பூஜ்ஜிய நிலை ஏற்படவேண்டும் என்ற அடிப்படையில் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டபோது அதனை சித்திரவதைகள் தொடர்ன ஐக்கிய நாட்டு அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
அவரின் பதில்கள் உண்மையை மறைப்பதாக அமைந்துள்ளதாகவும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
***************

அம்பலமாகும் அடாவடி
நட்டமடையும் சொத்துக்களை சுவீகரிக்கும் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் அரசாங்கத்தின் எதேச்சாதிகாரப் போக்கு அம்பலமாகியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இச்சட்டமூலத்திற்கு அரசியல் கட்சிகள், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்ட போதிலும் அரசாங்கம் பிடிவாதமாக இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றிய இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்திருந்தால் சட்ட மூலத்தில் திருத்தங்களை மேற்கொண்டு நாடாளுமன்றில் சமர்ப்பித்திருக்க முடியும்.
திடீரென இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கு புலனாகியுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் சர்வதேச முதலீட்டாளர்களை அச்சமடையச் செய்யும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
***************

கெஞ்சும் ஸ்ரீலங்கா
சர்வதேச சமூகம், அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தக் கூடாது என கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஸ்வரா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சமாதானம் நிலைநாட்டப்படுவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தாருஸ்மன் அறிக்கை அடிப்படையற்றது, அதனை உத்தியோகபூர்வமான ஆவணமாக பயன்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பதில் அர்த்தமில்லை.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களின் மூலம் சுயாதீனமான விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படக்கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் ஏன் கவனம் செலுத்தப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்வதேச அரங்கத்தில் ஸ்ரீலங்காவின் முகத்திரை கிழிந்து வரும் நிலையில் அதனை எதிர்கொள்ள முடியாத ஸ்ரீலங்காவின் பிரதிநிதிகள் இவ்வாறு கூக்குலிடுகின்றனர் என அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எப்படித்தான் இவர்கள் முயன்றாலும் உண்மைகள் வெளிவருவதை அவர்களால் தடுக்க முடியாது என்ற உண்மையை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
***************

கவலைப்படும் ஜே.வி.பி
தமது செயற்பாட்டினால் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து சர்வதிகார ஆட்சியை ஏற்படுத்த வழிவகுக்கப்பட்டது என ஜே.வி.பி யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லால் காந்த தெரிவித்துள்ளார்.
2003 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை போன்ற முதலாளித்துவ கட்சிகளுடன் ஜே.வி.பி கூட்டமைத்து செயற்பட்டமை காரணமாக நாட்டுக்கு பல வெற்றிகள் கிடைத்தன.
அதேபோல கூட்டமைப்பை ஏற்படுத்தியமை காரணமாக பல தீமைகளும் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது கூட்டமைப்பினால் தமிழீழம் என்ற எண்ணத்தை கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிக்க முடிந்தது எனவும், ஆனால் நாட்டில் சர்வதிகார முதலாளித்துவ அரசாங்கம் உருவாவதை ஜே.வி.பியினால் தடுக்கமுடியாமல் போய்விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தற்போது தமது கட்சியின் நோக்கம் சர்வதிகார ஆட்சியை முடிவுக்கொண்டு வருவதாகும் என்று லால் காந்த குறிப்பிட்டுள்ளார்.
***************

தொடரும் கொலைகள்
யாழ்ப்பாணம் வரணி கரப்பன்குறிச்சி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையைச் சேர்ந்த அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது சடலம்  இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக யாழ். காவல்துறையினர் தெரிவித்தனர்.
40 வயதான சிவசுப்பிரமணியம் தயாபரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
யாழ். கந்தர்மடம் ரயில்வே வீதியிலுள்ள அவரது வீட்டின் இரண்டாம் மாடியிலுள்ள அறையொன்றிலிருந்தே அவரது சடலம் மீட்கப்பட்டதாகவும் அவரது வயிறு மற்றும் கழுத்துப் பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் காணப்படுவதாகவும் யாழ். காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
யாழ். கந்தர்மடம் ரயில்வே வீதியை சொந்த இடமாகவும் மீசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், தனது சொந்த வீட்டிற்கு அவ்வப்போது வந்துசெல்வது வழக்கமாகும்.
அவ்வாறே இவர் தனது சொந்த வீட்டிற்கு நேற்று வியாழக்கிழமை வந்த பின்னர் மீண்டும் மீசாலையிலுள்ள தனது வீட்டிற்கு திரும்பிச்செல்லவில்லையெனவும் இதனால் அவரைத் தேடி கந்தர்மடம் ரயில்வே வீதியிலுள்ள வீட்டிற்கு உறவினர்கள் வந்தபோது அவர் சடலமாக கிடப்பதைக் கண்டனர்.
பின்னர் இது தொடர்பில் அவரது உறவினர்கள் யாழ். காவல்துறையினருக்கு தெரியப்படுத்தவே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டுள்ளனர்.
குறித்த வீட்டின் கீழ்த்தளம் இளைஞர்கள் சிலருக்கு வாடகைக்கு விடப்பட்ட நிலையில் அவ்வீட்டின் இரண்டாம் மாடியிலேயே குறித்த நபர் அவ்வப்போது தங்கிச்செல்வது வழமையாகுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் யாழ். காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
***************

Thursday, 10 November 2011

செய்திகள் 10/11


பதில் மனு
தனக்கு எதிரான போர்க்குற்ற வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா நியுயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவுக்கு சட்டவாளர்கள் பதில் மனு ஒன்றை நேற்றுமுன்தினம் தாக்கல் செய்துள்ளனர்.
அதேவேளை, பத்து அனைத்துலக மனிதஉரிமைகள் குழுக்கள் ஒன்றிணைந்து ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதித் தூதுவர் பதவிக்காக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா சமர்ப்பித்த அறிமுக ஆவணத்தை நிராகரிக்குமாறு கோரியுள்ளன.
சித்திரவதைகள், நீதிக்குப்புறம்பான படுகொலைகள், பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல்கள் போன்ற போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இவர் மீது சமஸ்டி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
போர்க்குற்றவாளி ஒருவரை ஐ.நா தனது பதவித் தரத்தில் வைத்துள்ளது.
இது ஒரு உளவியல் மற்றும் சட்ட நடவடிக்கை என்று அமெரிக்க பல்கலைக்கழக வொசிங்டன் சட்டக் கல்லூரியின் மனிதஉரிமைகள் பிரிவின் பணிப்பாளர் அலி பேடன் தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய அனைத்துலக கட்டமைப்பான ஐ.நா அமைதி மற்றும் நீதியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலுள்ளது.
மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா மீதான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து முழு அளவில் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டியது ஐ.நாவின் கடமை.
தனது குற்றங்களில் இருந்து தப்பிக் கொள்வதற்கு அவர் இராஜதந்திர விலக்குரிமையைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என அதில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
போர்க்குற்றங்களிலும், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபட்ட மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவின் இராஜதந்திர விலக்குரிமையை ரத்துச் செய்து அவரது அறிமுக ஆவணத்தை நிராகரித்து, அவரை விசாரணை செய்வதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பத்து மனிதஉரிமை அமைப்புகள் ஐ.நா பொதுச்செயலரிடம் கோரியுள்ளன.
சிறிலங்கா இராணுவத்தில் போர்க்குற்றங்களைப் புரிந்த அதிகாரிகளை சிறிலங்கா அரசாங்கம் வெளிநாடுகளில் இராஜதந்திரப் பதவிகளில் அமர்த்தியுள்ளது.
உலகெங்கும் 22 முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் இராஜதந்திரப் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் அனைத்துலக முயற்சிகளுக்கு இடையூறாக உள்ளது என்றும் இந்த அமைப்புகள் கூறியுள்ளன
**************

புதிய விதிகள்
இலங்கையில் விரைவில் ஊடகவியலாளர்களுக்கான மற்றும் ஊடக நிறுவனங்களுக்கான ஒழுங்கு விதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன
இதனை ஒழுங்கு விதிகளை அரசாங்கம் தனியார் ஊடகங்களுடன் இணைந்து உருவாக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன்பின்னர் அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவுள்ளது
இதற்காக ஊடக அமைச்சினால் விரையில் குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக இலங்கையின் ஊடக அமைச்சின் செயலாளர் கனேகல தெரிவித்துள்ளார்
குறித்த ஊடக ஒழுங்கு விதிகளை உருவாக்குவதற்காக பொதுமக்கள் மத்தியில் இருந்து கருத்துக்களும் பெற்றுக்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
**************

அஞ்சும் அரசு
அரசாங்கம் தம்மீதான விமர்சனங்களை கண்டு பயப்படுகிறது.
தமது ஜனநாயக விரோத செயற்பாடுகள் ஊழல்கள் வெளிக்கொணரப்படும் போது ஜனநாயக ரீதியான சவால்களுக்கு முகங்கொடுக்கவேண்டியேற்படும் என்று அரசாங்கம் அஞ்சுவதாக ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாகவே இலங்கையில் செய்தி இணையத்தளங்கள் முடக்கப்பட்;டுள்ளதாக ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அண்மைக்காலம் வரையில் இலங்கையில் ஊடகங்களுக்கு ஊடகவியலாளர்களுக்கு அச்ச நிலைக்காணப்பட்டது
ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். அச்சுறுத்தப்பட்டனர் பல ஊடகவியலாளர்கள் பயம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறினர்
இந்தநிலையில் இன்று பிரபலமான இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன
தனியார் ஊடகங்களில் சுயதணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
ஊடக ஒழுங்கு தொடர்பான நிறுவனங்கள் அரசியலாலும் தனிப்பட்டவர்களாலும் பொதியிடப்பட்டுள்ளதாக ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்
சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தவர்கள் கோழைகள் அல்லர். அவர்கள் அரசியல் மாற்றங்களுக்கு அஞ்சவில்லை.
பயத்தால்; பேச்சு சுதந்திரத்தை நிலைநாட்ட முடியாது என்று ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் குறிப்பிட்;டுள்ளனர்
எனவே இணையத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட முடக்கத்தை அரசாங்கம் தளர்த்தவேண்டும் என்று சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்
ஜனநாயக சட்டத்தரணிகள் அமைப்பில்; சார்பில் லால் விஜேநாயக்க சந்திரா குமாரகே ரட்ணவேல் சுமந்திரன் ஜோதிக்குமார் ஜே வி வெலியமுன உட்பட்டோர் அங்கம் வகிக்கின்றனர்
**************

தவிக்கும் ஸ்ரீலங்கா
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மேற்கொண்டுள்ள அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு விஜயமானது இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது.
அந்த விஜயமானது பேச்சுக்களுக்கு தடையாக அமையாது.
கூட்டமைப்பினர் நாடு திரும்பியதும் அவர்களுடன் பேச்சு நடத்த அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் எங்கு விஜயம் மேற்கொண்டு யாருடன் பேச்சு நடத்தினாலும் இறுதியில் தீர்வு விடயத்தில் தமது நாட்டு அரசாங்கத்துடனேயே பேச்சு நடத்தவேண்டும் என்ற யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதாவது வடக்கு கிழக்கு மாகாண மக்களும் இலங்கை மக்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு எவ்விதமான அநீதியும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது எனவும் அமைச்சர் கூறினார்.
கூட்டமைப்பினர் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டமையானது அரசாங்கத்துடனான பேச்சுக்களில் எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
அவர்கள் எந்த நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டு வந்தாலும் இறுதியில் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கைக்கே வரவேண்டும்.
இலங்கை அரசாங்கத்துடனேயே பேச்சு நடத்தவேண்டும் என்பதனைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றார்.
**************

பதவி வழங்கும் ஐதேக
கொழும்பு மாநகரசபையில் நான்கு குழுக்களில் தலைவர்களாகவும், ஒன்பது குழுக்களில் அங்கத்தவர்களாகவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாநகர சபையில் ஐ.தே.க நிலையான நிர்வாகத்தைக் கொண்டு செல்வதற்காக ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவை ஐ.தே.க நாடியிருந்தது.
அவ்வாறு ஆதரவு வழங்கும் பட்சத்தில் சபை நிர்வாகக் குழுக்களில் ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர்களுக்கு தலைமைப் பதவி வழங்க ஐ.தே.க ஒப்புதல் அளித்திருந்தது.
அதன்படி இன்று ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர்கள் கொழும்பு மாநகரசபையில் நான்கு குழுக்களில் தலைவர்களாகவும், ஒன்பது குழுக்களில் அங்கத்தவர்களாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தலைநகரத் தமிழ் மக்கள் தமது கட்சிக்கு வழங்கியுள்ள வாக்குகளின் மூலமாக கிடைத்துள்ள அரசியல் பலத்தின் அடிப்படையில் இந்த அந்தஸ்துகள் கிடைத்துள்ளன என ஜனநாயக மக்கள் முன்னணி இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளது.
**************

பாதுகாப்பு ஏற்பாடு
மாலைதீவில் நடைபெறும் சார்க் உச்சிமாநாட்டுக்காக மாலைதீவு தேசிய பாதுகாப்பு படையினரும், இலங்கையின் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொள்ளும் பாதுகாப்பு திட்டமொன்று அமுல்படுத்தப்படுகிறது.
மாலைதீவின் அட்டு நகரில் நடைபெறும் இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரமுகர்களினதும் மாநாடு நடைபெறும் இடத்தினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இரு படையமைப்புகளும் நெருக்கமாக இணைந்து செயற்படுவதாக மாலைதீவில் பணியாற்றும் இலங்கை விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறினர்.
மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைத்து தூதுக்குழுவினரும் உயர் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவர்களாக கருதப்படுகின்றனர்.
தவறில்லாத பாதுகாப்புத் திட்டத்திற்காக மாலைதீவு தேசிய பாதுகாப்பு படையினருடன் இணைந்து அச்சுறுத்தல் மதிப்பாய்வு தொடர்பான பல நடவடிக்கைகளை தாம் நடத்தியுள்ளோம் என அவர் கூறினார்.
மாநாடு இடம்பெறும் இடத்திற்கு வருபவர்களும் வெளியேறுபவர்களும் கண்காணிக்கப்படுகின்றனர்.
பாதுகாப்புச் சோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இம்மாநாட்டிற்கு முன்னர், துறைமுகம், விமான நிலையம், மாநாட்டு மண்டபம் ஆகியவற்றுக்கு பாதுகாப்பளிப்பது தொடர்பான பல பயிற்சித் திட்டங்களை இலங்கையின் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டதாக ஹவீரு இணையத்தளம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
**************

அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்
இலங்கையில் நாளொன்றுக்கு வீதிவிபத்துக்களின் மூலம் 6 பேர் பலியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் வருடம் ஒன்றுக்கு 2000 முதல் 2500 பேர் வீதிவிபத்துக்களில் பலியாவதாக பெருந்தெருக்கள் துறை அமைச்சு தெரிவி;த்துள்ளது.
இந்த விபத்துக்களின் போது குறைந்தது 2 பேராவது கடும் காயங்களுக்கு உள்ளாகின்றனர்.
தரவுகளின்படி நாட்டில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு வீதி விபத்து இடம்பெறுகிறது.
வருடம் ஒன்றில் 80 ஆயிரம் வீதிவிபத்துக்கள் இடம்பெறுகின்றன.
மது கவனயீனம் போன்ற காரணங்களாலேயே வீதிவிபத்துக்கள் இடம்பெறுகின்றன
**************

Wednesday, 9 November 2011

செய்திகள் 09/11


சார்க்கில் அமெரிக்க குழு
மாலைதீவில் நடைபெறவுள்ள சார்க் உச்சிமாநாட்டில் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் தலைமையிலான குழுவொன்றும் பங்கேற்கவுள்ளது.
இதன்போது, அங்கு மஹிந்த ராஜபக்ஷவை றொபேட் ஓ பிளேக் சந்தித்துப் பேசவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அட்டு நகரில் எதிர்வரும் 10 ஆம், 11 ஆம் நாள்களில் 17 ஆவது சார்க் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் இலங்கை உள்ளிட்ட சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மாலைதீவு ஆகிய 8 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த மாநாட்டில் பார்வையாளராகக் கலந்துகொள்ளவுள்ள அமெரிக்கக் குழுவுக்கு அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் தலைமையேற்கவுள்ளார்.
சார்க் மாநாட்டில் பங்கேற்கவுள்ள றொபேட் ஓ பிளேக், மாலைதீவில் எதிர்வரும் 13 ஆம் திகதிவரை தங்கியிருப்பார் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்கும் அமெரிக்க குழுவில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியாவும் இடம்பெறவுள்ளார்.
இந்த மாநாட்டில் பங்கேற்கும் தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் விரிவான பேச்சுகளை நடத்தவுள்ளனர் எனவும் இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவையும் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் சந்தித்துப் பேசவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, அதனை விரைவில் பகிரங்கப்படுத்துவது, அறிக்கையின் பரிந்துரைகளின் மீதான மேல் நடவடிக்கைகள் குறித்து அவர், அரசுத் தலைவர் மஹிந்தவிடம் வலியுறுத்தவுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
*******************

சித்திரவதைகளை தொடரும் ஸ்ரீலங்கா
ஜெனிவாவில் நேற்று நடைபெற்ற சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தில் சிறிலங்கா அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இரகசிய தடுப்பு முகாம்கள் குறித்து சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் 47வது அமர்வு நேற்று ஜெனிவாவில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மனிதஉரிமைகளைப் பின்பற்றுவதில் சிறிலங்காவுக்கு உள்ள பொறுப்புத் தொடர்பாக கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டன.
கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு மேலதிகமான தகவல்களை வழங்குவதில்லை என்று குழுவின் பல உறுப்பினர்கள் சிறிலங்கா அரசு மீது குற்றம்சாட்டினர்.
சிறிலங்கா படைகளின் இரகசிய தடுப்பு முகாம்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க சுதந்திரமான விசாரணைகள் அவசியம் என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் உதவித் தலைவர் பெலிஸ் கேர் அம்மையார் இந்த அமர்வில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறிலங்கா இராணுவம் மற்றும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை ஆயுதக்குழுக்களால் இயக்கப்படும் இரகசியத் தடுப்பு முகாம்கள், சித்திரவதைகள் மற்றும் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் இரகசியமாக இடம்பெறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும், அதுவே அங்கு நடந்துள்ளது என்றும் அவர் காட்டமாக குற்றம்சாட்டியுள்ளார்.
சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் ஏழு இரகசிய தடுப்புமுகாம்கள் இருப்பதாக அனைத்துலக மன்னிப்புச்சபை அறிக்கை ஒன்றை கையளித்துள்ளதாகவும், அவற்றில் 5 முகாம்கள் வவுனியாவிலும், இரண்டு முகாம்கள் முல்லைத்தீவிலும் இருப்பதாகவும் பெலிஸ் கேர் அம்மையார் குறிப்பிட்டுள்ளார்.
பூந்தோட்டம் மகா வித்தியாலயம், 211 பிரிகேட் தலைமையகம், வெளிக்குளம் மகாவித்தியாலயம், புளொட் துணை ஆயுதக்குழு நிலையம், தர்மபுரம் ஆகிய 5 முகாம்கள் வவுனியாவிலும், மேலும் 2 முகாம்கள் முல்லைத்தீவிலும் செயற்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட 5 கட்ட்டங்கள், வீடுகளைக் கொண்ட தர்மபுரம் இரகசியத்தடுப்பு முகாமில் ஆண்களும் பெண்களுமாக 700 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் 80 பேர் விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்கள் என்றும், புலிகளின் ஆதரவாளர்களான 300 பொதுமக்களும் அதில் அடங்குவதாகவும் பெலிஸ் கேர் அம்மையாளர் கூறியுள்ளார்.
காணாமற் போதல்கள் தொடர்பான ஐ.நா பணிக்குழு சிறிலங்காவை உலகில் அதிகளவில் காணாமற்போகும் சம்பவங்கள் இடம்பெறும் நாடுகளில் இரண்டாவது நாடாக பட்டியலிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் மீது சுதந்திரமான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுவதில்லை.
பாரிய மனித உரிமை மீறல்கள் சிறிலங்காவில் இடம்பெற்றதாக தனக்கு பல முறைப்பாடுகள் வந்துள்ளன எனவும் தெரிவித்தார்.
இந்த முறைப்பாடுகளில் பலவந்தமாக காணாமல் போனது, காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்டது, பாலியல் தாக்குதல் நடைபெற்றது, மனிதஉரிமை குறித்த வழக்குகளில் முன்னிலையாகும் சட்டவாளர்கள் மிரட்டப்படுவது, சிறையில் நடைபெறும் மரணங்கள் போன்றவை அடங்கும்.
சிறிலங்கா அரசு தான் அறிவித்தபடி தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் பெயர் விபரங்களை இன்னமும் வெளியிடவில்லை.
தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் பெயர் விபரங்கள் அரசிடம் இருப்பதாகவும், இதை அவர்களின் உறவினர்கள் பெறலாம் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கடந்த ஜனவரி மாதம் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரக அதிகாரிகளிடம் கூறியிருந்தது.
ஆனால் இதுபோன்ற விபரங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், விபரங்களைப் பெற முடியவில்லை என்று அரசசார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர் என்றும் பெலிஸ் கேர் அம்மையார் குறிப்பிட்டார்.
சித்திரவதை தொடர்பான ஐ.நா உடன்பாட்டில் சில அம்சங்களில் தனது நாடு கைச்சாத்திடவில்லை என்று, இந்த மாநாட்டில் சிறிலங்காவைப் பிரதிநிதித்துவம் செய்யும் குழுவின் தலைவரான, சிறிலங்கா அமைச்சரவையின் ஆலோசகரும், முன்னாள் சட்டமா அதிபருமான மொகான் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
சிறிலங்கா பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளை தடுக்க சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சித்திரவதைகளை சகிக்கமுடியாது என்ற கொள்கையில சிறிலங்கா அரசாங்கம் 110 வீதம் ஒப்புக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய அமர்வில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சிறிலங்கா இன்று பதிலளிக்க வேண்டும் என்றும் பெலிஸ் கேர் அம்மையாளர் கூறியுள்ளார்.
*******************

இந்தோனிய குழு ஸ்ரீலங்காவுக்கு
இந்தோனேஷிய நாடாளுமன்றத்தின் உயர் மட்ட தூதுக்குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்தோனேஷிய தூதுவராலயம் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
எட்டு உறுப்பினர்களை கொண்ட இந்த தூதுக்குழுவினர் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ளதாக இந்தோனேஷிய தூதுவராலய பேச்சாளர் தெரிவித்தார்.
சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் அழைப்பிற்கினங்க இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ளும் இத்தூதுக்குழுவில் இந்தோனேஷிய நாடாளுமன்றத்தின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
இக்குழுவினர் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் தி.மு.ஜயரட்ன மற்றும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பலரை சந்திக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
*******************

பணத்தைக் கொட்டித் தீர்த்த தேர்தல்
மூன்று கட்டங்களாக இடம்பெற்றுள்ள உள்ளூராட்சித் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு தேர்தல் திணைக்களத்துக்கு 195 கோடி ரூபா செலவாகியுள்ளது.
இதற்கமைய மூன்று கட்டங்களாக நடைபெற்ற இந்தத் தேர்தலில் காவல்துறை திணைக்களத்துக்கு 31 கோடி ரூபாவும், தபால் திணைக்களத்துக்கு 25 கோடி ரூபாவும், அரச அச்சகத்துக்கு 13 கோடி ரூபாவும் செலவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவற்றுக்கு மேலதிகமாகத் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த உதியோகத்தர்களுக்கான எரிபொருள் செலவினம் மற்றும் தேர்தல்கள் அலுவலகத்தின் செயற்பாடுகள் ஆகியவற்றுக்குக் கணிசமான தொகையொன்று செலவாகியுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
இந்த உள்ளூராட்சித் தேர்தல்களுக்காகத் தேர்தல் செயலகம், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் 200 கோடி ரூபாவை ஒதுக்கியிருந்தது.
மேலும் 2011 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலின் முதற்கட்டம் கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதியிலும், இரண்டாம் கட்டம் ஜூலை மாதம் 23 ஆம் திகதியிலும், மூன்றாம் கட்டம் ஒக்ரோபர் மாதம் 08 ஆம் திகதியிலும் இடம்பெற்றிருந்தது.
இந்த மூன்று கட்டங்களிலும் 322 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.
*******************

மனோ கணேசனுக்கு பதவி
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விரைவில் நியமிக்கப்படுவார் என ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனோ கணேசனுக்கு பாராளுமன்ற பதவியை வழங்குவதன் பொருட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுவாமிநாதன் இராஜினாமா செய்வார் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பொதுத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம் உள்ளிட்ட கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய தேசிய முன்னணி என யானைச் சின்னத்தில் போட்டியிட்டன.
இத்தேர்தலில் மனோ கணேசன் கண்டி மாவட்டத்தில் போட்டியிட அவரது கட்சி சார்பில் பிரபா கணேசன் மற்றும் குமர குருபரன் ஆகியோர் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டனர்.
இதன்போது ஜனநாயக மக்கள் முன்னணிக்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று வழங்கப்படும் என ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தபோதும் பின்னர் அது வழங்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமும் ஏமாற்றமும் அடைந்த மனோ கணேசன் கட்சி ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து விலகி சுயாதீனமாகச் செயற்படத் தொடங்கியது.
அதன் பின்னர் 18வது திருத்தச் சட்டம் பாராளுமன்றிற்கு கொண்டுவரப்பட்ட சமயத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தன்னிச்சையாக அரசுடன் இணைந்து கொண்டார்.
இதன் பின்னர் பாராளுமன்ற அங்கத்துவம் இல்லாமல் கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்த ஜனநாயக மக்கள் முன்னணிக்கு தற்போது புதிய வாய்ப்பு கிட்டியுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியதுடன் ஜனநாயக மக்கள் முன்னணி 6 ஆசனங்களை பெற்றது.
இதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஸ்த்திரமாக கொழும்பு மாநகர சபையின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல மனோ கணேசன் கட்சியின் ஆதரவை நாடினார்.
இதன் ஒரு அங்கமாக ரணில் விக்ரமசிங்க மனோ கணேசனை தனது இல்லத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உடன்படிக்கைகள் சிலவற்றை ஏற்படுத்திக் கொள்ள முயற்சித்தார்.
இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க லண்டன் செல்வதற்கு முன்னர் மனோ கணேசனுக்கு கடிதம் ஒன்றை எழுதியதோடு 8ம் திகதி கொழும்பு மாநகர சபை கூட்டத்தில் தமது கட்சிக்கு ஆதரவு அளிக்குமாறும் தான் லண்டனில் இருந்து திரும்பியதும் உடன்படிக்கைகள் செய்து கொள்ள முடியும் எனவும் கூறியிருந்தார்.
உடன்படிக்கையில் எவ்வாறான விடயங்கள் நிபந்தனைகள் அடங்கியுள்ளன என்று இதுவரை முழுமையான தகவல்கள் வெளிவராத நிலையில் மனோ கணேசனுக்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவது என்ற உடன்படிக்கை உள்ளடங்கலாம் என நம்பப்படுகிறது.
மனோ கணேசனுக்கு ரணில் விக்ரமசிங்க வரலாற்றுத் துரோகம் இழைத்துவிட்டார் என்று எழுந்த குற்றச்சாட்டுக்களுக்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரணில் விக்ரமசிங்க பரிகாரம் தேடிக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
*******************

மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
முல்லேரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அரசுத் தலைவரின் ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பில் அவரது மனைவியான சுமனா பிரேமச்சந்திர இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் நேற்று முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.
தனது கணவரின் கொலையுடன் தொடர்புடையோர் என சந்தேகிக்கப்படும் பாதுகாப்பு அமைச்சின் ஆலேசாகரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த சில்வா உட்பட மேலும் பலரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
*******************